கெட்டவனுக்கும் நல்லது செய்!

இரண்டு திருடர்கள் ஒரு பெரியவரை வழிமறித்து,
அவரிடம்இருந்த பணத்தைக் கேட்டனர்.

பெரியவரிடம் பணம் ஏதும் இல்லை. “பணம் இல்லாமல்
ஏனடா வெளியே வந்தாய்?” என்று கேட்டு தகராறு
செய்தனர். அவரது கைகளை வெட்டி கிணற்றுக்குள்
போட்டு விட்டு போய்விட்டனர்.

அவ்வழியாக வந்த ஒருவன் தண்ணீர் குடிக்க கிணற்றுப்
பக்கம் வந்தான். உள்ளே தவித்துக் கொண்டிருந்த
பெரியவரை மீட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்றான்.
ஒரு வழியாக காயம் குணமானது.

பின் அந்தப் பெரியவர் ஒரு அரசனிடம் வேலைக்குச்
சேர்ந்தார்.

அவரது நேர்மையை அறிந்த மன்னன், அவரிடம் தானதர்மம்
செய்யும் துறையை ஒப்படைத்து அமைச்சராக்கினான்.
பெரியவர் தானத்தின் அவசியத்தை மன்னனுக்கு எடுத்துச்
சொல்லி, வருமானத்தில் பாதியை தானத்துக்கென
ஒதுக்க வைத்தார்.

நிதி அதிகமாக இருந்ததால், தானம் கேட்டு வரும் ஏழைகளுக்கு
சற்று அதிகமாகவே நிதி கொடுத்து, அவர்களை தொழில்
துவங்கச் செய்தார் பெரியவர்.

எனவே நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தது. அரசுக்கு
தொழிற்கூடங்கள் மூலம் வரும் வரியும் அதிகரிக்கவே
தானநிதியும் கூடியது. 24 மணி நேரமும் அன்னதானக்
கூடம் செயல்பட்டது.

இவ்வூரில் கிடைக்கும் தானத்தைப் பற்றி, பெரியவரின்
கையை வெட்டிய திருடர்கள் கேள்விப்பட்டனர். தங்களால்
வெட்டப்பட்டவர் தான் மந்திரியாக இருக்கிறார் என்ற
விஷயம் தெரியாமல் வந்த அவர்கள், அரண்மனைக்கு
வந்தவுடன், பெரியவர் இருப்பதைப் பார்த்தனர்.

அங்கிருந்து நழுவ முயன்றனர்.

இதைக் கவனித்த பெரியவர், அவர்களை வெளியே
போகவிடாமல் தன்னிடம் அழைத்து வரச் சொன்னார்.

கேள்வி ஏதும் கேட்காமல் அவர்களுக்கு வேண்டியதைக்
கொடுத்தார். ஊர் எல்லை வரை இரண்டு வீரர்களையும்
பாதுகாப்புக்கு அனுப்பி வைத்தார்.

அந்த வீரர்கள் அவர்களிடம், “உங்களுக்கு மட்டும்
அமைச்சர் நிறைய பொருள் தந்தாரே! என்ன விசேஷ
காரணம்?” என்றதும், “அவர் எங்கள் சொந்தக்காரர்,”
என்று அவர்கள் பொய் கூறினர்.

இதை பொறுத்துக் கொள்ளாத பூமிமாதா வெடித்தாள்.
அவர்களை அப்படியே விழுங்கி விட்டாள்.

இதை காவலர்கள் மூலம் கேள்விப்பட்ட பெரியவர்
வருத்தப்பட்டார். ராமபிரானிடம்,

“நீ உன் மனைவியையே கடத்திய ராவணனுக்கு முக்தி
கொடுத்தாய். அதுபோல் என் கைகளை வெட்டிய
இந்த திருடர்களுக்கும் முக்தி கொடு.

மேலும், நான் கொடுத்த பொருளுடன் அவர்களை
பூமியில் திருந்தி வாழச்செய்,” என்று மனமுருகி
பிரார்த்தித்தார்.

இதையடுத்து பூமித்தாய் அவர்களை விடுவித்தாள்.

திருடக்கூடாது… துன்பம் செய்தவர்களுக்கும் நன்மையே
செய்ய வேண்டும் என்ற போதனைகளை இந்தக் கதை
உணர்த்துகிறது.

—————————
தினமலர், நெல்லை

பின்னூட்டமொன்றை இடுக