சிமெண்ட் தரையிலும் சிரிக்கும் பூந்தோட்டம்…

https://i0.wp.com/kovaivanigam.com/wp-content/uploads/2014/07/house.jpg

பச்சைக் கிளிகள் மாநாடு
பவள மூக்குடன்
செம்பருத்திச் செடியில் சிவப்பு பூக்கள்

——————————–

சிமெண்ட் தரையிலும்
சிரிக்கும் பூந்தோட்டம்
பாலர் பள்ளியில் மழலைக் கூட்டம்

————————————–

அகல் விளக்குகளை ஏற்றுகின்ற
அணையாத விளக்குகள்
அம்மன் ஆலயத்தில் அருள் வேண்டும் மகளிர்

————————————-

தென்றல் பெண்ணின் தேகம் தழுவி
குளிர்ந்த கூந்தலை குனிந்து சீவுகிறது
தென்னை மர மட்டைகள்

———————————-

மயானகரை ஓரம் மரணங்களைக் கண்டு
மயிர் சிலிர்த்து நிற்கிறது
ஒற்றைப் பனை மரம்

—————————-
டாக்டர் எஸ்.எஸ்.தமிழரசன்

உழைத்தவனுக்கு இரண்டு மிட்டாய்..!


உழைத்தவனுக்கு இரண்டு மிட்டாய்
தலைவருக்குப் பட்டாடை
சுதந்திர தினம்

————————-

வயிறு கழுவ
வட்டில் கழுவினான்
டீக்கடையில் சிறுவன்

——————–

மங்கலமாய் இருக்க
பூக்களைப் பறித்தார்கள்
விதவையானது செடி

——————–

சுகாதார நிலையம்
அன்போடு வரவேற்றன
கொசுக்கள்

——————

தூக்கி வைத்தேன் கை வலித்தது
இறக்கி வைத்தேன் மனது வலிக்கிறது
குழந்தை

——————-
பேராசியர் க.இராமச்சந்திரன்

 

ஒற்றுமையாய்க் கிடந்தன பிணங்கள்..!


தொண்டன் மரணம்
தலைவரின் கண்களில்
கிளிசரின் கண்ணீர்

——————

தாள் முழுக்கவும்
வாந்தி
தேர்வு அறை

—————-

மனிதர்கள் மோதிக் கொண்டார்கள்
ஒற்றுமையாய்க் கிடந்தன
பிணங்கள்

————————

அவசர சிகிச்சைப் பிரிவில் அப்துல்லா
இரத்தம் கொடுத்தான் இராமன்
மனித நேயம்

————————–

மனசுக்குள் இருக்கட்டும் மதம்
மதம் பிடிக்க வேண்டாம்
மதம்

———————–
-பேராசியர் க.இராமச்சந்திரன்

மின்னிக் கொண்டிருந்தது அழைப்பிதழ்…!


சுகப்பிரசவம் மனைவிக்கு
வேதனையுடன் கணவன்
பெண் குழந்தை

—————–

மின்னிக் கொண்டிருந்தது
திருமண அழைப்பிதழ்
வரதட்சணையின் தொகை

—————–

வீட்டிற்குள் ஒரே சத்தம்
வீட்டின் பெயர்
சாந்தி நிலையம்

—————–

கடிதம் வந்தது
எழுதியவரும் வந்தார்
வாழ்க, தபால் துறை

——————

தமிழர் திருநாள்
வாழ்த்து வந்தது

HAPPY PONGAL


———————

-பேராசியர் க.இராமச்சந்திரன்

தூய்மைப் பணியாளினிக்கு…



தூய்மைப் பணியாளினிக்கு
கழிப்பறை வசதியுடன்
சமத்துவபுரத்தில் வீடு

————————–

ஓட்டைச் சட்டி
ஓய்வின்றி
கொழுக்கட்டை வேக

———————–

சந்தையில் விற்க
பசுவின் சோகம்
கொட்டகை வசதி

———————

பட்டு ஆடைகள்
பகட்டுடன் விலை
பட்டுப்போகும் நெசவாளி

———————

பால் அங்கங்கள்
கசங்கும் போதெல்லாம்
இதயம் கல்லாக விலைமாது

——————–

த.ராசேந்திரன்
மறந்து போன முகங்கள்-
கவிதை தொகுப்பிலிருந்து

மனமெனும் நந்தவனத்தில்…


இடியுடன் கூடி
மழை வருகிறது
பூமியில் மனிதன்

——————

நிழலைக் குறுக்கும்
உச்சிவேளைப் பொழுது
பகலவன் விளக்கும்

——————-

ஏரி குளங்களுக்கு
இயற்கை உபாதையாக
கழிங்கல் வழி

——————–

வெட்டிய விறகு விற்று
சுள்ளி பொறுக்கிச்
சமையல்

—————

மனமெனும் நந்தவனத்தில்
உயிர்ப் பூக்கள் மலர்ந்திட – ஆன்மிகம்
ஞான விதைகளைத் தூவும்

===========================
-த.ராசேந்திரன்
மறந்து போன முகங்கள்- கவிதை
தொகுப்பிலிருந்து

பணம் பார்த்து வரும் காதல்…!

கவிஞர் உமையவன்

கனத்த மழை
நிரம்பும் காலிப் பாத்திரம்
சிதறும் இன்னிசை!

கவிஞர் வி. சிவாஜி

பிச்சைப் பாத்திரம்
நிரம்பி வழிகிறது
பெருமூச்சு!

கவிஞர் கா.நா. கல்யாணசுந்தரம்

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்
தேவை – அங்குசக் கவிஞர்கள்

கவிஞர் பொருநை பாலு

எடுக்கும் முயற்சியை
தடுக்கும் ஆயுதம்
சகுனம்!

கவிஞர் சு. நவநீதன்

மனம் பார்த்து அன்று
பணம் பார்த்து இன்று
காதல்.

கவிஞர் இராம கம்பர்

தள்ளாட வைத்தது
தமிழ்நாட்டை
தண்ணி!

========================

ஹைகூ பூக்கள் – தொகுப்பிலிருந்து
தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மது அருந்த நாளும் ஒரு காரணம்…!!

கவிஞர் டி.என். இமாஜன்

செத்தும் கொடுக்கின்றனர்
வள்ளல்கள் சிலர்
உறுப்பு தானம்!

கவிஞர் தேவனூர் ஆ.ச. செல்வராஜூ

விண்ணை முட்டுகிறது
ஏழையைத் தவிக்க வைத்து
விலைவாசி!

கவிஞர் இளந்தென்றல்

நல்லது கெட்டது
நாளும் ஒரு காரணம்
மது அருந்த!

கவிஞர் ச. கிறிஸ்து ஞானவள்ளுவன்

அதிகார வர்க்கம்
எடுக்கும் நாகரிகப் பிச்சை
லஞ்சம்!

கவிஞர் நீலமலை ஜே.பி.

தோல்விக்கும்
முத்து

தொடர்முயற்சி!

கவிஞர் வெ. சென்னப்பன்

இரையூட்டும் காகம்
ஏக்கமுடன் பார்க்கிறது
காப்பகக் குழந்தை!

கவிஞர் சுப. சந்திரசேகரன்

முள்வேலிக்குள்
குருதி சிந்துகின்றன
ஈழ ரோஜாக்கள்!

=================

ஹைகூ பூக்கள் – தொகுப்பிலிருந்து

சாமியான மைல்கல்…!

கவிஞர் மு. குமரன்

கொடுக்கப் பெருகும்
மனித இரத்தம்
அட்சயப் பாத்திரம்

கவிஞர் ஈழபாரதி

மைல்கல் சாமியானது
மகிழ்ச்சியில்
பூசாரி!

கவிஞர் தாயானி தாயுமானவன்
நினைவுகளை
உடைத்தபடி அம்மா
கல் குவாரி!

கவிஞர் வ. விஜயலெட்சுமி

விடுமுறை இல்லை
பணி ஓய்வு இல்லை
இல்லத்தரசி!

கவிஞர் கு. இராம்குமார்

ஆயிரம் காலத்துப் பயிர்
அவசரமாய நடப்பட்டது
குழந்தை திருமணம்

கவிஞர் ம. பாலன்

திறக்கப்பட்டது அன்று
மூடப்படுகிறது இன்று
அரசுப் பள்ளிகள்!

கவிஞர் பூ. இராஜேஸ்குமார்

விலையில்லாப் பொருட்கள்
விலை போயினர்
மக்கள்!

==============================

ஹைகூ பூக்கள் – தொகுப்பிலிருந்து

அழகர் ஆற்றில் இறங்கினார்…!

Displaying IPADIMG_151017083442000000.jpeg

கவிஞர் எஸ். சத்யவீணா

கிள்ளுவதற்காக
அழுவதில்லை
பூக்கள்!
=============================
கவிஞர் ரேவதி இளையபாரதி

மனவலிகள்
மாயமாய் போனது
மழலைச் சிரிப்பு

=============================

கவிஞர் அய்யாலு ச. புகழேந்தி

அழகர்
ஆற்றில் இறங்கினார்
மணல் கொள்ளைப் பார்க்க!

-===============================

கவிஞர் ஆர். சியாமளா ரகுநாதன்

சிதைந்து போகின்றது
வாழ்க்கை
புரிதலில்லா மனங்கள்!

==================================

கவிஞர் புதுவை சுமதி

மனதில் ஓசை
இதழில் மௌனம்
நினைவுகள்!

—————————————————-

ஹைகூ பூக்கள் – தொகுப்பிலிருந்து

« Older entries