ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் – 15


எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்

வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை?

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்!

வல்லானை, கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடலே ரெம்பாவாய்!

விளக்கம்:

“”என்ன, இளங்கிளி போன்ற அழகியே! படுக்கை உனக்குக் கூடா?
கூண்டா? வெளியே பறந்து வா! இதோ வந்துவிடுகிறேன்”
என்று தாமதம் செய்கிறாய். என்னைத் திட்ட வேண்டாம் என்று
கட்டளை வேறு போடுகிறாய்.

மற்ற அனைவரும் வந்துவிட்டார்களா என்று கேட்கிறாய்.
உன் பேச்சு சாமர்த்தியமானதுதான்; நாங்கள் முன்பே அறிவோம்.
சீக்கிரம் கிளம்பிவா! எங்களை “எண்ணிப்’பார்க்க
எண்ணியிருக்கிறாயே, நீ மட்டும் வந்துவிட்டால், எல்லாரும்
சேர்ந்து போகலாம். எல்லாரும் வந்துவிட்டார்கள்

நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கொள். “வராவிட்டால்தான் என்ன?’
என யார் ஒருவரையும் ஒதுக்கலாகாது. வலிமைமிக்க குவலபீடம்
என்னும் யானையைக் கொன்றவனான மாயக்கண்ணனைப்
பாடிப் புகழ்ந்தபடி கோவிலுக்குச் செல்லலாம் வா!

—————————-

வித்யாரண்யர் வரலாறு

விஜய நகர சாம்ராஜ்யம்னு வரலாறுல படிச்சிருப்பேள்.
அந்த ராஜ்யம் அமையறதுக்கு காரணமானவர், பரம
சன்யாசியான வித்யாரண்யர். சன்யாசம் ஏத்துக்கறவா
எல்லாரும், எதுவுமே வேணாம்னுட்டு ஆஸ்ரமம் ஏத்துக்குவா.
ஆனா, இவர் சன்யாசி அனதே வித்தியாசமான
காரணத்துக்காக.

வித்யாரண்யர்ங்கறது அவரோட ஆஸ்ரமப் பேர்,
பூர்வாஸ்ரமப் பேர் என்னன்னு தெரியலை. ஆனா, அவர் பரம
ஏழ்மையா இருந்தார். கஷ்டமெல்லாம் தீரணும்னா அதுக்கு
ஒரே வழி மகாலட்சுமியோட கடாட்சம் தன்மேல
படறதுதான்னு தீர்மானிச்சு, கடுமையா தவம் பண்ணினார்.
அவரோட தவத்துக்கு இரங்கி காட்சி தந்தா திருமகள்.

“அம்மா… அலைமகள்ங்கற உன்னோட பேருக்கு ஏத்த மாதிரி
உன்னோட பார்வையை அங்கே இங்கேன்னு அலையவிடாம,
என்மேல கொஞ்ச நாழி பதிச்சியான்னா. என்னோட
வறுமையெல்லாம் தீர்ந்துடும்..!’னு வேண்டிண்டார்.

“இவ்வளவு கடுமையா தபஸெல்லாம் பண்ணி என்னை
கும்பிட்டிருக்கே, அதுக்காகவாவது நான் உனக்க வரம் தந்துதான்
ஆகணும். ஆனா, உன்னோட விதியில இந்த ஜனமாவுல உனக்கு
வறுமைதான்னு எழுதியிருக்கு, அதை என்னால மாத்த முடியாது.
அதனால உன்னோட அடுத்த ஜன்மாவுல தங்கச் சுரங்கமாவே
செல்வம் தர்றேன்! இப்போ வேற ஏதாவது வேணும்னா கேளு!’
அப்படின்னா மகாலட்சுமி.

திக்குன்னு ஆச்சு, வித்யாரண்யருக்கு. பிரம்மசரியம் அனுஷ்டிக்கற
பருவத்துலயே இந்த வறுமையை தாங்கிக்க முடியலையே…
இன்னும் இந்தப் பிறவி முழுக்க இதை அனுபவிக்கணும்னா
அவ்வளவுதான். இங்கேயே நரகவாசம் பண்றாப்புல ஆயிடுமே…
இதுல இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்குமான்னு யோசிச்சார்.
சட்டுன்னு ஓர் எண்ணம் தோணித்து அவருக்கு.

ஒருத்தர் சன்யாசம் ஏத்துண்டார்னா, அது அவரோட ரெண்டாவது
ஜென்மான்னு சொல்றது சாஸ்த்ரம். நம இப்ப உடனே சன்யாசம்
ஏத்துண்டுட்டா, இந்த ஜென்மா முடிஞ்சு அடுத்த ஜன்மா எடுத்துட்டதா
ஆயிடும். அப்போ மகாலட்சுமி நமக்கு வரம் தர்றதுல எந்த
பிரச்னையும் இருக்காது! அப்படின்னு தோணித்த அவருக்கு.

உடனே, “தாயே மகாலட்சுமி நான் இந்த க்ஷணமே சன்யாசம்
வாங்கிக்கறேன். இப்போ இது என்னோட ரெண்டாவது ஜன்மாவா
ஆயிடுத்து… அதனால நீ சொன்னபடிக்கு எனக்கு செல்வத்தைக்
குடு!’ன்னு கேட்டார் வித்யாரண்யர்.

மறுவிநாடியே அவர் பார்த்த இடமெல்லாம் தங்கமா மாறித்து.
மலைமலையா பெரும் தங்கக் குவியல் அவரை சுத்தி இருந்தது.
பார்த்தார் வித்யாரண்யர்.

அவரோட கண்ணுல இருந்து ஜலம் அருவிமாதிரி கொட்டித்து.
“ஆஹா.. இவ்வளவு செல்வம் கிடைச்சும் இதுல ஒரு தூசியைக்
கூட தொட முடியாதபடிக்கு சன்யாசம் வாங்கிட்டோமே…
சன்யாசிக்கு எதுக்கு இவ்வளவு தங்கம்? தாயார் சொன்னபடிக்கு
அடுத்த பிறவியில வாங்கியிருந்தாலாவது அதை
அனுபவிச்சிருக்கலாம். இப்போ தெய்வத்தை ஏமாத்தறதா
நினைச்சுண்டு நம்பளை நாமளே ஏமாத்திண்டிருக்கோம்.

சரி, நடந்ததை மாத்திக்க முடியாது. இனிமேலாவது நல்லபடியா
ஏதாவது பண்ணுவோம்’ னு நினைச்சார். கண்ணுக்கு எட்டின
தூரத்துல யாராவது இருக்காளான்னு பார்த்தார்.

கொஞ்சம் தொலைவுல குறும்பர்கள் அதாவது ஆடு, மாடு
மேய்க்கறவா ரெண்டு பேர் நின்னுண்டு இருந்தாங்க.
துங்கபத்திரை நதியோட கரையில ஒரு ராஜாங்கத்தை ஸ்தாபிச்சு
அதுக்கு அவா ரெண்டுபேரையும் ராஜாக்களா ஆக்கினார்.
செல்வம் முழுசையும் தந்து, மாலிக்காபூரோட படையெடுப்பால்
சிதைஞ்சு போயிருந்த கோயில்களையெல்லாம் சீரமைக்கச்
சொன்னார். அன்னிக்கு அவர் ஸ்தாபிச்சதுதான், விஜயநகர
சாம்ராஜ்யம். ஹரிஹரர், புக்கர்தான் அந்த ரெண்டு ராஜாக்கள்.

அதுக்கப்புறம் வித்யாரண்யர் சன்யாச ஆஸ்ரமத்துல இருந்துண்டு.
நாலு வேதங்களுக்கு பாஷ்யம் எழுதினார்.

யாருக்கு எப்போ எதைக் கொடுத்தா நல்லது? எந்த சமயத்துல
தந்தா, அது அவாளுக்கு பயன்படக்கூடியதா இருக்கும்?
கேட்டதைத் தர்றதா, கேட்காததைக் குடுக்கறதா? இதெல்லாம்
சுவாமியோட தீர்மானப்படி நடந்தா நல்லது. நாம கேட்கலாமே
தவிர, பகவான் குடுக்கறதை மனப்பக்குவத்தோட ஏத்துக்கணும்.
இந்த வித்யாரண்யர் வரலாறு மகாபெரியவா உபந்யாசங்கள்
பண்றச்சே பலசமயங்கள்ல சொல்லியிருக்கார்.

தெய்வத்துகிட்டே எப்படி நடந்துக்கணும்கறதுக்கு நடமாடும்
தெய்வமான பரமாசார்யா சொன்ன இந்த வழிமுறை,
சன்யாசிகளுக்கு மட்டுமல்லாம எல்லாருக்குமே பொருந்தும்
இல்லையா?

————————————————-

– பி. ராமகிருஷ்ணன்
குமுதம் பக்தி

ஆடி மாதத்தில் சுப காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கம் ஏன்….

ஆடி மாதத்தில் ஆன்மிக ரீதியாக விசேஷங்கள்
கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெறுகின்றன.
ஆனால் அதே சமயம் ஆடி மாதத்தில் சுப
காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கமும் இருந்து
வருகிறது. ஏன் இந்த முரண்பாடு?

அதற்கான காரணங்களை சாஸ்திர ரீதியாக விளக்குகிறார்
ஜோதிட பண்டிதர் காழியூர் நாராயணன்.

“பூலோகம் செழிப்பாக இருந்து, இயங்குவதற்குக் காரணமே
சூரியனின் ஒளிக்கதிர்கள்தான். சூரியனின் ஒளிக்கதிர்கள்
பூமியில் விழும் நேரத்திலிருந்துதான் நாள் துவங்குகிறது
என்பதை நாம் கணக்கில் கொண்டுள்ளோம். இந்த ஒரு
நாளிலேயே “உஷக்காலம்’ என்று கூறப்படும் காலைப் பொழுது
ஆரம்பம்.

அதாவது சூரிய உதயம் முதல் பகல் பன்னிரண்டு மணி வரை
“பூர்வாங்கம்’ எனப்படும். பன்னிரண்டு மணிக்கு மேல்
(உச்சிப் பொழுது முதல்) சூரியன் மறையும் கணக்கு. “பூர்வாங்கம்’
என்பது ஏற்றத்தைக் குறிக்கும். “அபராணம்’ என்பது இறக்கத்தைக்
குறிக்கும்.

இதேபோலத்தான், ஒரு வருடத்தில், தை மாதப் பிறப்பு முதல் ஆனி
மாத முடிவு வரை “உத்தராயணம்’ என்றும், ஆடிமாதப் பிறப்பு
முதல் மார்கழி மாத முடிவு வரை “தட்சிணாயனம்’ என்றும் கூறப்
படுகிறது.

சூரியனின் சக்தியானது உத்தராயணத்தில் “பாசிடிவ் சார்ஜ்’ஜினைத்
தருகிறது. தாமதகுணமான “நெகடிவ் சார்ஜி’ னை தட்சிணாயனத்தில்
கொடுக்கிறது. இது ஆடி மாதப் பிறப்பிலிருந்து தொடங்குகிறது.

ஆடி மாதம் அந்தக் காலத்தில் மிக முக்கியமான மாதமாகக் கருதப்
பட்டது. ஏனென்றால் அந்நாட்களில் விவசாயத்தை நம்பித்தான்
ஜீவனம் நடந்து கொண்டிருந்தது. “ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று
பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல்,
துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு
வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில்
ஈடுபடுவார்கள்.

ஆடியில் பூர்வாங்க வேலைகளைச் செய்தால் தான் ஒருவருக்கு,
பயிர் அறுவடை கார்த்திகை மற்றும் தை மாதத்தில் உண்டாகும்.
அந்தச் சமயத்தில்தான் கையில் பணமும் வர வாய்ப்பு இருக்கும்.
அதனால் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி,
பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணத்தட்டுப்பாடு
இல்லாமல் இருந்து வந்தது.

ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால்
அந்தச் சமயத்தில் வேறு செலவுகள் செய்யப் பணம் இருக்காது.
அதனால்தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே
ஒழிய, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த
சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை.

ஆடி மாதம் முழுவதுமே விசேஷம் தான். ஒரு வருடத்தை போக
சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரிப்பர்.
போக சம்பிரதாயம் என்பது தை மாதம் முதல் ஆனி வரை உள்ள
காலம். யோக சம்பிரதாயம் என்பது ஆடி முதல் மார்கழி வரை.

போக சம்பிரதாயக் காலத்தில் கல்யாணம், விருந்து, விசேஷங்கள்
என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலம். யோக சம்பிரதாயம் என்பது
தபஸ், யாகம், யக்ஞம், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யக்கூடிய
காலம்.

யோக காலத்தில் முதல் மாதம் ஆடி என்பதால் தெய்வீகப்
பண்டிகைகள் அதிகம். ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி,
ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு,
ஆடிப்பூரம் என்று மாதம் முழுவதுமே விசேஷமாக உள்ளது.

ஆடி மாதத்தில் சந்திரன் சொந்ந வீட்டில் இருக்கிறார்.
அந்த சொந்த ÷க்ஷத்திரத்தில், சூரியனுடன் சம்பந்தம் ஏற்படும் பொழுது,
அதற்கு விசேஷம் அதிகம் உண்டு. இந்த ஆடி மாதத்தில் பகவத்
தியானம் மிகவும் முக்கியமானது. ஆடி மாதம் முழுவதும் ஒரு பொழுது
விரதம் இருந்து பகவானை பூஜித்து தியானித்து வந்தால் சகல
சம்பத்துகளும் சேரும்.

—————————————–

– மாலதி சந்திரசேகரன்
மங்கையர் மலர்

உழைப்பு உயர்வைத் தரும்;


ஆனால், உழைத்து பெற்ற உயர்வாக இருந்தால் கூட,
அது தங்கமாட்டேன் என்கிறதே… அதற்கு என்ன
காரணம்?

இதற்கான விளக்கத்தை, ராவண சம்ஹாரத்திற்கு
பின் நடந்த ஒரு நிகழ்ச்சி விவரிக்கிறது…

கும்பகர்ணனின் மகன் மூலகன்; இவன் பிரம்மாவை
நோக்கி கடுந்தவம் செய்தான். அவனது தவத்தில்
மகிழ்ந்த பிரம்மா, அவன் முன் தோன்றினார். அவரை
வணங்கிய மூலகன், ‘என் முடிவு ஒரு பெண்ணால்
தான் வர வேண்டும்; மற்றபடி தேவாதி தேவர்களாக
இருந்தாலும், அவர்களால் இறப்பு வரக் கூடாது…’ என்று
வேண்டியதுடன், பல அபூர்வ வரங்களையும் பெற்றான்.

இதனால், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது
என்ற தைரியத்தில், அதர்மங்களை செய்தான்.

ஒருசமயம், தன் ராட்சச சைனியங்களுடன் அட்டூழியம்
செய்தபடி வந்தவன், ‘என்னை எதிர்க்க இவ்வுலகில்
யாருமில்லை. இப்படிப்பட்ட என் ராட்சச வம்சம், அந்த
சண்டியான சீதையால் அல்லவா அழிந்தது…’ என்று
கோபத்துடன் கத்தினான். அப்போது, அங்கிருந்த
ரிஷி ஒருவர், அவனைப் பார்த்து, ‘யாரை சண்டி என்று
இகழ்ந்தாயோ, அச்சீதையாலே உன் உயிர் போகக்
கடவது…’ என்று சாபம் கொடுத்தார்.

இந்நிலையில், ராட்சச சைனியத்துடன் சென்று,
விபீஷணரை வென்று, சிறையில் அடைத்தான் மூலகன்.
சிறையில் இருந்து தந்திரமாக தப்பிய விபீஷணர்,
ஸ்ரீராமரிடம் சென்று முறையிட்டார்.

உடனே, ஸ்ரீராமர் தன் படைகளுடன் சென்று மூலகனுடன்
போரிட்டு, அவனை கொல்ல முயலும் போது, பிரம்மா
தோன்றி, ‘ரகு நந்தனா… இவனுக்கு, பெண்ணால் தான்
மரணம் என்று வரம் தந்துள்ளேன். அதை உறுதி
படுத்துவது போல, சீதையால் தான் இவனுக்கு மரணம்
என்று ரிஷி ஒருவரும் சாபம் இட்டுள்ளார்.

ஆகையால், தாங்கள் இவனைக் கொன்றால், எங்கள்
வார்த்தை பொய்யாகும்…’ எனக் கூறினார்.

அதை ஏற்ற ஸ்ரீராமர், அயோத்தியில் இருந்து சீதையை
வரவழைத்து, அவளிடம் நடந்ததை விவரித்து, சீதை
கையாலேயே மூலகன் கதையை முடித்தார்.

அவதார புருஷரான ஸ்ரீராமரே முறை மீறவில்லை.
ஆனால், கடுந்தவம் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்ற
மூலகனோ, தவப்பலனை அதர்ம வழியில் உபயோகித்து,
முடிவை அடைந்தான்.

கடுமையாக உழைப்பதில் மட்டுமல்ல, உழைப்பின்
பலனை உபயோகப் படுத்துவதிலும் வாழ்க்கையின்
ரகசியம் அடங்கி உள்ளது.

—————————————

பி.என்.பரசுராமன்

அயப்பாக்கத்தில் அருளும் பாபா!

பட்டடப் பொறியாளர் ஒருவர், சென்னை, அம்பத்தூருக்கு அருகேயுள்ள அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியை மேற்கொண்டிருந்தார்.

ஒருநாள், பணியாளர்கள் மதிய சாப்பாட்டிற்குச் சென்றிருந்த நேரம்… கடுமையான வெய்யில். அச்சமயம் பொறியாளர் அருகேயுள்ள மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தார். அந்த வேளையில் பெரியவர் ஒருவர் வந்து “தாகமாக இருப்பதாகவும் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும்’ என்று கேட்டார். தண்ணீரை கொடுத்தபின்னர், தண்ணீர் அருந்திவிட்டு “”இங்கு பாபா கோயில் கட்டு” என்று கூறியுள்ளார்.

அந்த பொறியாளருக்கு ஒன்றும் புரியவில்லை. அவரது உடல் சிலிர்த்துவிட்டதாம்! பின்னர் சுதாகரித்துக்கொண்டு பார்த்தபோது பெரியவரை அங்கு காணவில்லை. அதன் பின்னர், வீடு கட்டும் பணியை நிறுத்திவிட்டு அங்கு பாபாவிற்கு கோயில் கட்டியுள்ளார். அதோடு தனது பணியை விட்டுவிட்டு 13 வருடங்களாக ஆன்மிக பணியாற்றி வருகிறார் பொறியாளரான அந்த அன்பர்!

அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பிற்கு நடுவில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். அதோடு பக்தர்கள் தாங்களாகவே முன்வந்து தினமும் அன்னதானமும் செய்கிறார்கள். வியாழக்கிழமைகளில் காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்களால் இவ்வாலயம் நிரம்பி வழிகிறது என்றே சொல்லாம். பாபா கோயில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே இந்த “பாபா கோயில்’ அமைந்துள்ளது.

– அம்பத்தூர் ம. தமிழன்.

வெள்ளிமணி

உப்பிலியப்பன்

உப்பிலியப்பன்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோவில்
தஞ்சை மாவட்டத்திலுள்ள திருநாகேஸ்வரத்திற்கு அருகில்
அமைந்துள்ளது.

திருவிண்ணகர் உப்பிலியப்பன் கோவில் என்று அழைக்கப்
படுகின்றது. கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில்
இக்கோவில் அமைந்துள்ளது. தென்திருப்பதி என இக்கோயில்
கருதப்படுகின்றது.

மிருகண்டு மகரிஷியின் மகன் மார்க்கண்டேயன் இலக்குமி
தனக்கு மகளாகவும், ஸ்ரீவிஷ்ணு தனக்கு மருமகனாகவும்
தோன்ற வேண்டும் என இறைவனிடம் வேண்டினார்.

எனவே க்ஷேத்ராடனம் செய்தார். அவ்வாறு செய்து வரும்
பொழுது இவ்வூரை அடைந்த அவர் தான் வரம் பெறத் தகுதி
வாய்ந்த இடம் இதுவே என முடிவு செய்தார். இறைவியின்
அருள் வேண்டி ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்தார்.
அவ்வேளையில் துளசிச் செடிக்குக் கீழ் ஒரு சிறுமியின்
வடிவில் இலக்குமி தோன்ற, அக்குழந்தையைத் தூக்கிச்
சென்று வளர்க்கத் தொடங்கினார்.

இலக்குமி பருவ வயது அடைந்த பொழுது அங்கு வயோதிக
உருவில் தோன்றிய மஹா விஷ்ணு அப்பெண்ணைத் தனக்கு
மணம் முடித்துக் கொடுக்கும்படி வேண்டினார்.

இதனால் திடுக்குற்ற மார்க்கண்டேயர். ”நீரோ வயதானவர்;
என் மகளோ மிகவும் இளையவள். உப்பிட்டு உணவு சமைக்கக்
கூடத் தெரியாது. அதனால் நீவிர் கோபப்படலாம்; சாபம்
இடலாம்; இது நல்லதல்ல. நீவீர் தோற்றத்தில் வயோதிகர்.
ஆனால் மனதால் இளைஞர்; என்னை மன்னித்தருள வேண்டும்.
என்னால் மணம் செய்து கொடுக்கமுடியாது” என்று கூறினார்.

அதற்கு, அந்த முதியவர், ”தங்கள் மகள் உப்பில்லாது
சமைத்தாலும் நான் அதை விரும்பிச் சாப்பிடுவேன்;
ஆனால் அவளை மணம் முடிக்காது இங்கிருந்து செல்ல
மாட்டேன்” என்றார். வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என்பதனை
அறியாத மார்க்கண்டேயர் பெருமாள்தான் தன்னைக் காக்க
வேண்டும் என வேண்டினார்.

பின்னர் தன் தவ வலிமையால் வந்திருப்பவர் மஹாவிஷ்ணு
என உணர்ந்து கண்ணைத் திறந்து பார்த்த பொழுது சங்கு
சக்கரத்தாரியாக பெருமாள் வைகுந்தத்திலிருந்து
பான்மையோடு தன் முன்னர் தோன்றக் கண்டார்.

தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். தன் மகளை
கன்னிகாதானம் செய்து கொடுத்தார். உப்பில்லாத உணவை
விருப்பமுடன் எடுத்துக்கொள்வேன் என்று சொன்னதால்
இன்றும் அக்கோவிலில் நைவேத்யம் உப்பிடாமலேயே
சமைக்கப்படுகின்றது;

உப்பிட்ட உணவை இங்கு கொண்டுவருபவர்கள் நரகத்தில்
தள்ளப்படுவார்கள் என புராணம் கூறுகின்றது.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் இவ் இறைவன் என
நம்மாழ்வார் ‘ஒப்பாரில்லா அப்பன்’ என அழைக்கிறார்.

——————————————
http://www.appusami.com

ஈசனை நோக்கிய சனீஸ்வரன் 16 Jun 2015

கோளறு திருப்பதிகம் பாடிய திருஞான சம்பந்தப்பெருமான் அப்பதிகத்தின் முதற்பாடலில் விடம் உண்ட கண்டனாகிய அந்த ஆலங்குடியான் ஒருவர் தம் உள்ளத்தில் புகுந்தானானால் நவகோள் சாரத்தால் ஏற்படக்கூடிய கொடிய தீங்குகள் அனைத்தும் அகன்று அவை நல்லவையாகவே மாறும் என்று கூறியுள்ளார்.



‘‘ஞாயிறு திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி பாம்பு இரண்டும் உடனே ஆசுஅறும், நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே’’ – என்பதே அந்த ஞானக் குழந்தையாரின் திருவாக்கு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவொற்றியூரில் தம் இரு கண்களின் பார்வையை இழந்தபோது ‘‘மகத்திற் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய் எனக் குறிப்பிட்டு முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்வேன்’’ என்று புலம்புகிறார்.

மக நட்சத்திரத்தை சனி தீண்டும்போது ஒருவர் பெறும் தீங்கினை சுந்தரர்போல் இனியாரால் கூறிட முடியும். அதுபோன்றே சனியுடன் ராகு-கேது என்ற பாம்புகளுள் எது சேர்ந்தாலும் ஒருவர் அடையும் அல்லலைத்தான் திருஞானசம்பந்தர் எடுத்துக்காட்டி சிவபெருமானை உள்ளத்தால் பற்றுகின்ற அடியார்களுக்கு அவை நல்லதையே செய்யும் என்று நான்கு முறை ஆணையிட்டு உரைத்துள்ளார். ராகு- கேது என்ற பாம்புகளுடன் ஈசனார் முன்பு நின்றவாறு சனீஸ்வரன் பரமனை வழிபடும் அடியார்களின் கோள் சார்ந்த துயரங்களைப் போக்குகின்ற ஒரு திருத்தலமே திரு இரும்பூனை எனப்பெறும் ஆலங்குடியாகும்.


-ஆன்மிகம் – குங்குமம்

ஐந்திற்கு இரண்டு பழுதில்லை

ஐந்திற்கு இரண்டு பழுதில்லை

ஓரெழுத்து மந்திரம் ‘ஓம்’
ஈரெழுத்து மந்திரம் ‘ராமா’
மூன்றெழுத்து மந்திரம் ‘முருகா’
நான்கெழுத்து மந்திரம் ‘விநாயகா’
ஐந்தெழுத்து மந்திரம் ‘சிவாயநம’
ஆறெழுத்து மந்திரம் ‘சரவணபவ’
எட்டெழுத்து மந்திரம் ‘ஓம் நமோ நாராயணா’

ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்று சொல்லாவிட்டாலும்,

இரண்டெழுத்து மந்திரமான சிவ, சிவா என்று உச்சரித்தாலே

உடனடிப்பலன் கிடைக்கும் என்பதைத் தான்

ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று சொல்லி வைத்தனர்.

ஆன்மிக சிந்தனைகள்

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

—-

சிவ… சிவ… சிவ… வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்

‘சிவன் எனும் ஓசையல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே!’

நாவுக்கு அரசராம் அப்பர் பெருமானின் திருவாக்கு இது. சிவன் எனும் ஓசை அல்லாது உலகில் வேறொரு செம்மை உளதோ? இல்லை. முத்தி தரும் செம்பொருள் அவன் ஒருவனே. சிவநாமமே முழக்கத்துக்கு உரியது. அது செம்மையானது என்று அறிவுறுத்துகிறார் அவர்.

சிவம் என்ற சொல்லுக்கு அன்பு, உயர்வு, கடவுள், பிரம்மம், மகிழ்ச்சி, நித்ய யோகம், நன்மை, பசு, வேதம், மங்கலம் ஆகிய பல பொருள்கள் உண்டு. இப்படிப் பரவலாக இருக்கும் ஒன்றை- ஒரு பொருளை- இறை வனை ‘சிவம்’ என்ற சொல்லால் அழைத்தனர். தோற்றம், பிறப்பு, அவதாரம், வளர்ப்பு, பால் வேறுபாடு போன்ற மாசு மலங்கள் இல்லாமல், எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட தூய்மையான – மங்கலமான செம்பொருளே சிவபெருமான்.

இப்படி எல்லாமுமாகி நிற்கும் பரம்பொருளுக்கு லிங்க வடிவம் எதற்கு? அதன் அரும்பெரும் தத்துவம்தான் என்ன?

உலகங்களுக்கு கருணை செய்யவே சிவபிரான் லிங்க வடிவில் விளங்குகிறார். உருவ திருமேனிக்கும், கண்ணுக்குப் புலப்படாத அருவ திருமேனிக்கும் மூலமான சிவபெருமானை வழிபடுவதற்கு, ஓர் அடையாளமாக விளங்குவது சிவலிங்கம்.

லிங்கம் என்றால் குறியீடு அல்லது சித்திரித்தல் என்று பொருள். லிங் – லயம்; கம் – தோற்றம். அதாவது, உலகம் தோன்றி ஒடுங்கும் இடம். உலக முடிவில் அண்டசராசரங்களும் லயிப்பதற்கு உரிய இடம் என விளக்குகின்றன ஞானநூல்கள். லிங்கம் என்பதற்கு பிரகாசம் என்றும் பொருள் உண்டு. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் பஞ்ச கிருத்தியங்களால்- ஐந்து தொழில்களால் உலகைப் பிரகாசிக்கச் செய்வது. எனவே, லிங்க வடிவம் என்பது சிவபரம்பொருளுக்கு உரிய அடையாளம்.

லிங்க வழிபாடு இந்தியாவில் மாத்திரம் காணப்படுவது அன்று. முற்காலத்தில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் சிவலிங்க வழிபாடு சிறப்புற்றிருந்தது.

‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்பது மாணிக்கவாசகரின் அருள்வாசகம். விச்வேச்வரன் சர்வேச்வரன் என்ற திருப்பெயர்கள் உலகத்துக்கெல்லாம் இறைவனாக, எல்லோருக்கும் கடவுளாக ஈசன் விளங்குவதை வலியுறுத்துகின்றன.

பாரத நாடு ஜம்புத் தீவின் ஒரு பகுதி என்று வடமொழி ஸ்லோ கம் கூறுகிறது. ‘ஜம்பூத்வீபே – பாரத வர்ஷே – பரதக் கண்டே…’ என்று சங்கல்பத்தில் வருகிறது அல்லவா?

இந்திய நாட்டோடு தொடர்புற்று, தெற்கே விரிந்து அகன்று மேருவை மையத்தில் உடையதாகக் கொண்டு திகழ்ந்த நிலப்பரப்புக்கு  ஜம்பூத்வீபம் – சம்புத்தீவு என்று பெயர். ஜம்புத்தீவை நாவலம் தீவு என்கின்றன தமிழ் இலக்கியங்கள். அதாவது இன்றைய ஆசியாவும், ஐரோப்பாவும் சேர்ந்த பகுதியான யூரேஷியா, அன்றைய ஜம்புத் தீவாக விளங்கியது. இந்த சம்புத் தீவு என்பது சிவன் தீவு என்பதாகும். சம்பு – சிவன்.

வட அமெரிக்காவில் கொலராடோ என்னும் ஒரு ஆறு ஓடுகிறது.

நிலத்தை ஒரு மைல் ஆழம் வரையில் அரித்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் கரையில் உள்ள குன்றின் மீது சுமார் 10,000 ஆண்டுகள் பழைமையான ஒரு சிவாலயத்தை, 1937-ம் ஆண்டில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த ஆலயம் குறித்த கட்டுரைகள் லண்டன், அமெரிக்கா, இலங்கை, முதலான நாடுகளில் உள்ள செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளன. ‘பிமிழிஞிஹி கிவிணிஸிமிசிகி’ என்னும் நூலை எழுதிய ‘சமன்லால்’ என்பவர், அமெரிக்காவின் பல பாகங்களிலும் இன்னும் சிவலிங்க வழிபாடு இருப்பதை நன்கு எடுத்து விளக்கியுள்ளார்.

சிவன் வழிபாடு மேற்கு ஆசியா, கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் மிகப் பழங்காலத்திலேயே பரவியிருந்தது. பின்லாந்தில் வாழும் துரானிய வகுப்பைச் சார்ந்த மக்களின் காத்தற் கடவுள் சிவன். பண்டைய நாட்களில் எகிப்து, பாபிலோன், கிரீஸ், ரோம் முதலான நாடுகளில் லிங்கங்கள் தீவினையை ஓட்டும் அணிகலன்களாக அணியப்பட்டன. பெரும்பாலும் பெண்களே லிங்கங்களை அணிந்தனர். இதனால் மலட்டுத்தன்மை நீங்கும் என்றும், தீய ஆவிகள் அணுகாது என்றும் மக்கள் நம்பி வந்தார்கள்.

ரோமரும் எகிப்தியரும் சிவலிங்கங்களை ‘பிரியாபஸ்’ என்ற பெயரில் வணங்கினர். ‘பிரியாபஸ்’ எனும் சிவலிங்கங்களை நாட்டி கோயில் அமைத்தார்கள். இஸ்ரேலியர்கள் சிவலிங்கத்துடன் நந்தியையும் வழிபட்டிருக்கிறார்கள்.

லிங்க வழிபாடு ரோமானியர்களுடன் பிரான்சுக்கும் சென்றது. இன்றும் லிங்கங்களின் வடிவங்களை அங்குள்ள கிறிஸ்து ஆலயக் கட்டடங்களில் காணலாம். அலெக்சாந்தரியாவில் ‘தாலமி’ என்பவர் நடத்திய விழாவில், 129 முழம் உயரமுடைய லிங்கம் வீதிவலம் கொண்டு செல்லப்பட்டதாம். கிரேக்க நாட்டில் ‘பக்கஸ்’ என்ற சமய விழாவில் லிங்கத்தை வீதி வலமாகக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த விழா இத்தாலியிலும் பரவியிருந்தது. பக்கஸ் என்னும் கடவுளுக்கு, இடபமும் புலியும் மிகவும் பிரியமானவை. பக்கஸ் கடவுள் புலித் தோலை உடுத்தி, கையில் திரிசூலத்தையும் வைத்திருப்பார். அவர் கையில் கபாலமும் உண்டு என்ற தகவல் வியப்பளிக்கிறது.

மேற்கு ஆசிய நாடுகளில் இடபம் (நந்தியும்) வழிபாட்டில் இருந்துள்ளது. கிரேக்கர்களின் ‘தயோனிசிஸ்’ எனும் கடவுள் இடப கடவுளாகவே இருந்தார்.

நமது ஜோதிட சாஸ்திரத்தில் இடபம் என்பது வைகாசி மாதத்தைக் குறிக்கும் சொல்லாகும். கிரேக்கர்கள் இடபத்தை ‘எபாபஸ்’ எனும் பெயரால் வழிபட்டனர். இவ்வடிவம் அவர்களின் பழைய நாணயங்களிலும், கட்டடங்களிலும் காணப்படுகிறது. அமேனியரின் ‘மொலொச்’ எனும் கடவுள் வடிவம் இடபமாகும். யூத மக்களும் ரிஷபத்தை வணங்கியுள்ளனர். இவ்வாறு மத்திய தரைக்கடலைச் சூழ்ந்த எல்லா நாடுகளிலும் இடபம் வழிபடப் பெற்றது.

சிரியா மக்கள், தாங்கள் முழுமுதலாக வழிபட்ட தந்தைக் கடவுளுக்கு ‘அதாத்’ (ஆதி) என்று பெயரிட்டு வணங்கினர். அந்தக் கடவுள் தாடியுடையதாகவும் இடபத்தின் மேல் அமர்ந்த நிலையிலும் காணப்படுவார். வலது கையில் மழுவையும் இடது கையில் சூலத்தையும் வைத்திருப்பார். இடபத்தின் நெற்றியில் பூமாலை காணப்படும். சிரியாவுக்கு வடக்கே உள்ள நாடு ஹெய்ட்டி. இந்நாட்டு மொழிக்கும் தமிழுக்கும் மிகவும் தொடர்பு உண்டு. அங்கு பழைய இடிபாடுகளில் உள்ள ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சிரியாவின் ‘அதாத்’ கடவுள் போன்று, இடபத்தின் மேல் அமர்ந்த நிலையில் உள்ள வடிவம் கையில் மழுவும் கேடயமும் கொண்டு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இடப வழிபாடும், பாம்பு வழிபாடும் இவ்வுலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் காணப்பட்டுள்ளன. சூரிய வழிபாடும் சிவலிங்க வழிபாடும் உள்ள எல்லா நாடுகளிலும் பாம்பு வழிபாடும் இருந்தது.

சிவனைக் குறிக்கும் பசுபதியின் வடிவம் இரண்டு கரங்களுடன் காணப்படுகிறது. கி.பி. 50 வரை வட இந்தியாவில் அச்சடிக்கப்பெற்ற பொற்காசுகளில் காணப்படும் சிவன் வடிவமும், இரண்டு கரங்கள் உள்ளனவாகவே காட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் கிடைத்த சிற்பங்களில் ‘சாஸ்தியன்’ எனும் கடவுள் மூன்று தலையுடைய சூலத்தைக் கையில் பிடித்திருப்பதாகவும், சூலத்தின் கைப்பிடியினின்றும் மழைத்துளி மானின் வாயில் விழுவதாகவும் காட்டப்பட்டுள்ளன.

‘சிந்தோயிஸம்’ என்னும் ஜப்பானிய மதத்தில் சிவலிங்கம் முதன்மையானது. மெக்சிகோ, பெரு, ஹெய்ட்டி முதலான நாடுகளிலும் சிவலிங்க வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஸ்பானிஷ் (SPAIN) மக்கள் முதன் முதலில் அமெரிக்கா சென்றபோது, அங்கு சிவலிங்கங்களை வைத்து வழிபட்டதைக் கண்டார்களாம். ‘முக்கேசி’ என்பவர் எழுதிய ‘இந்திய நாகரிகமும் அதன் பழைமையும்’ என்ற நூலில் மேற்படி விவரம் காணப்படுகிறது.

ஜப்பானிய மக்களின் பழைய தெய்வங்களில் ஒன்று ‘சிவோ’ என்றழைக்கப்பட்டது. வேட்டையாடும் மக்களைப் பாதுகாக்கும் கடவுள் அது என்று கருதினார்கள். சொரியா நாட்டினின்றும் சென்று ஜப்பான் தீவுகளில் குடியேறியவர்கள், சிவலிங்கங்களை முச்சந்தி, நாற்சந்திகளில் வைத்து நட்டு வழிபட்டனர்.

மேற்கு ஆசிய மக்களின் ஆண்டின் மூன்றாவது மாதம் ‘சிவன்’ என்ற பெயர் உடையது. சிவன் மாதம் ‘சிமானு’ எனவும் அழைக்கப்பட்டது.

கம்போடியா நாட்டில் பாலவர்மன் என்ற அரசன் மிகச் சிறந்த சிவபக்தன். இவன் கி.பி. 616-இல் ‘கம்பீரவாணன்’ என்னும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. கம்போடியாவில் சிவவழிபாடே முதன்மை பெற்றிருந்தது. அங்கு பல இடங்களில் காணப்படும் திருவுருவங்கள் சிவன் இடபத்தில் வீற்றிருக்கும் அமைப்பிலே உள்ளன. இத்தாலியில் உள்ள ரோம் அருங்காட்சியகத்தில் இன்றும் ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது.

இவ்வளவு தகவல்களையும் அறியும்போது, மணிவாசகப் பெருமானின் அருள்வரிகள் எவ்வளவு அற்புதமான ஆழமான பொருளுடையவை என்பது நன்கு புலப்படுகிறது.

தென்னாடுடைய சிவனே போற்றி

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

=

http://www.vikatan.com/article.php?aid=93624

« Older entries