அரு உருவ கொளஞ்சி குமரன்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள
மணவாள நல்லூரில் முருகப்பெருமான் பிற
திருக்கோயில்களிலிருந்து மாறுபட்டு உருவமின்றி
அரூபமாகத் திருமேனி கொண்டு “கொளஞ்சியப்பர்’
என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார்.

நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படையில் முருகன்
விரும்பி உரையும் இடங்களைப் பட்டியலிட்டு கூறுமிடத்து
தன் அடையாளமாக நடப்பட்ட கல் நிற்கும் இடத்திலும்
முருகன் வீற்றிருப்பான் என்கின்றார். இவ்வாறு ஒரு கல்லில்
ஆவேசித்து (ஆபிர்வித்து) நிற்கும் முருகனின்
தொன்மையான நிலைக்கு கந்துடை நிலை என்று கூறுவார்கள்.

மேலும் கந்து என்ற சொல்லுக்கு தண்டாயுதம் கொண்டவன்
என்ற பொருளும் உண்டு. இனி கொளஞ்சியப்பர் கோயில்
கொண்ட வரலாற்றினைக் காண்போம்:

பல ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலத்திலிருந்து சுமார்
2 கி.மீ. தொலைவில் உள்ள மணவாள நல்லூர்ப்பகுதி காட்டுச்
செடிகளும், மரங்களும் முக்கியமாகக் கொளஞ்சி செடிகள்
மண்டி புதராக இருந்ததாம். காட்டுப்பகுதியில் மேயச்சென்ற
பசு மாடு ஒன்று செடிகளுக்குள் மறைந்திருந்த பலிபீட உருவில்
இருந்த ஒரு கல்லின் மீது பால் சொரிவதை வழக்கமாய்
கொண்டிருந்ததாம். இதைக்கண்ணுற்ற மக்கள் இந்த பீடத்தைப்
புனிதமானதாகக் கருதி முருகன்தான் அதில் ஆபிர்வித்துள்ளான்
என உணர்ந்து வழிபட்டு வரலாயினர்.

அவர்கள் அவ்வாறு கருதியதற்கு ஒரு காரணமும் உண்டு.
விருத்தாசலபுராண வரலாற்றில், இப்பகுதிக்கு தலயாத்திரையாக
வந்த சுந்தரர் திருமுதுகுன்றம் என்று அழைக்கப்படும் இத்தல
இறைவனை பாடாமல் சென்றாராம். இறைவன் திருவுளக்
குறிப்பறிந்த முருகன் ஒரு வேட்டுவக் குமரனாக சுந்தரரை
எதிர்சென்று அவரது பொன்னையும், பொருளையும் கவர்ந்து
கொண்டு திருமுதுகுன்றம் வந்து பெற்றுக் கொள்ளுமாறு
பணித்தாராம். தன் தவற்றினை உணர்ந்த சுந்தரரும்
விருத்தாசல இறைவனை தரிசித்து பாடிச் சென்றாராம்.

அவ்வாறு வேட்டுவக் குமரனாக வந்த முருகனே காவல்
தெய்வமாக
விருத்தாசலத்தின் நாற்புறங்களிலும் கோயில் கொண்டு
அமர்ந்தான் என்றும், அதில் மேற்கு திசையில் வீற்றிருப்பவர்
கொளஞ்சியப்பர் எனவும் செவிவழி செய்திகள் கூறுகின்றன.

ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் அழகுற அமைந்துள்ள இந்த
ஆலயத்தில் கருவறையில் பீடத்திருமேனிக் கொண்டு
கொளஞ்சியப்பர் அருள்புரிகின்றார். பீடத்தின் கீழ் முருகனது
சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டையாகிவுள்ளது.
அபிஷேக, ஆராதனைகள் யாவும் பீட வடிவில் உள்ள முருகனுக்கே.

இதைத் தவிர பெரிய உருவில் சித்தி விநாயகர் தனிச் சந்நிதி
கொண்டுள்ளார். இடும்பன், கடம்பன் சந்நிதிகளும், முனியப்பர்,
வீரனார் சந்நிதிகளும் ஆலயத்தில் நாம் தரிசனம் செய்யும் இதர
தெய்வமூர்த்தங்கள். கொளஞ்சி மரம் தல விருட்சமாகத்
திகழ்கின்றது.

இத்திருக்கோயிலிலில் அருள்மிகு கொளஞ்சியப்பர்
நீதிபதியாகவும், வைத்தியராகவும் அருள்பாலித்துவருகிறார்.
எழுத்து மூலம் பிராது செலுத்தி 90 நாட்களுக்குள் அது நிறைவேறி
பிராதை திரும்பப்பெறும் அதிசயத்தினை இன்றளவும் கண்
கூடாகக் காணலாம். இவ்வழிபாடு இத்திருக்கோயிலின் மிக
முக்கியப் பிரார்த்தனையாகும்.

முனியப்பர் சந்நிதியில் நடக்கும் இந்த பிரார்த்தனைக்கு
விதிமுறைகளும், பிரத்யேகக் கட்டணங்களும் உண்டு.
அருள்கருணையோடு மறக்கருணையும் நல்கும் இந்த முருகன்
சந்நிதியில் பூஜித்து வழங்கும் வேப்பெண்ணெயினை பக்தர்கள்
உடம்பில் பூசியும், அருந்தியும் பூரணகுணமடைந்து செல்வதும்
இத்திருக்கோயிலின் முக்கிய மகிமையாகும்.
இப்பகுதி மக்களில் பெரும்பாலோருக்கு இந்த முருகன்தான்
குல தெய்வமாகும்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ்
இயங்கிவரும் இத்திருக்கோயிலில் பால்குடம் எடுத்தல்,
காவடி எடுத்தல், அலகு குத்திக்கொள்ளுதல், மாவிளக்கு இடுதல்,
குழந்தைகளுக்கு காதணி அணிவித்தல், முடி காணிக்கை என்று
ரு முருகன் ஆலயத்திற்கு உரிய அனைத்து வைபவங்களும்,
முக்கிய விசேஷ தினங்களும் முறையாக நடத்தப்படுகின்றது.

ஆண்டுதோறும் வைகாசித் திங்கள் வசந்த உற்சவம்
அதிவிமரிசையாக நடைபெறும். வரும் ஆடிக்கிருத்திகை
நன்னாளில் இத்திருத்தலத்திற்குச் சென்று அன்று நடைபெறும்
சிறப்பு அபிஷேக வழிபாட்டில் பங்கேற்று

அருணகிரி நாதரின்,

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய்க் குகனே

என்ற கந்தரநுபூதிப் பாடலைப்பாடி பேரானந்தப் பெறுவாழ்வு
பெறுவோம்.

———————————————–
தினமணி

ஜோதிட பழமொழிகள்

பத்தில் குரு பதவிக்கு இடர்
இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே
பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்
நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.

வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்
கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்
ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
குரு பார்க்க கோடி நன்மை
கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்

மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,
மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்
துலா கேது தொல்லை தீர்க்கும்
சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்

சுவாதி சுக்ரன் ஓயா மழை
மறைந்த புதன் நிறைந்த கல்வி
சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்
சித்திரை அப்பன் தெருவிலே
பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்

விதி போகும் வழியே மதி போகும்.
அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்
குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின்
எவர் தடுப்பார்?
சனி பார்த்த இடம் பாழ்
சனி நீராடு

விழுப்பு இருக்குமிடத்தில் வேப்பிலைக்காரி தங்க மாட்டாள்.
ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு
பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்
எட்டில் சனி நீண்ட ஆயுள்
சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை;
கொடுப்பாரும் இல்லை
அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி

குரு நின்ற இடம் பாழ்
சனி பார்க்கும் இடம் பாழ்

—————————————————-

http://pookal.blogspot.in/

ராமநாமத்தின் விலை!

=-

தினமும் காலை, நாராயண நாமத்தையும்,
இரவில் தூங்கும் முன், சிவ நாமத்தையும் சொல்லுங்கள்…’
என, கூறியிருக்கிறார் காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்.

மிக எளிய வழிபாடு தான்; ஆனால், நம்மில் எத்தனை பேர்
இதை கடைபிடிக்கின்றனர். இறைவனின் நாமத்தை
உச்சரிப்பதன் மகிமையைப் பற்றிய கதை இது:

பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம்
பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம்
செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி
ஒருவர், ‘இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு
முறையாவது சொல்லிப் பார்…’ என்றார்.

அவனும் அப்படியே செய்தான்.
காலகிரமத்தில் இறந்து போனான். அவன் ஆத்மாவை
இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர்.
அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை
பரிசீலித்து, ‘ஒருமுறை ராம நாமத்தை சொல்லி
இருக்கிறாய்; அதற்காக, என்ன வேண்டுமோ கேள்…’
என்றார்.

ராம நாமத்தை உபதேசித்த ஞானி, ‘அதை விற்காதே…’
என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால்,
அதற்கு விலை கூற மறுத்து, ‘ராம நாமத்திற்கு, நீங்கள்
என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத்
தாருங்கள்…’ என்றான்.

திகைத்த யமதர்ம ராஜா, ‘ராம நாமத்திற்கு, நாம் எப்படி
மதிப்பு போடுவது…’ என்று எண்ணி, ‘இந்திரன் தான்
இதை தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம்
போகலாம்…’ என்றார்.

‘நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன்.
அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும்
ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா…’ என்றான்.

‘இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான்
என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத்
தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம்
பேசுகிறான்…’ என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு
சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து
கொண்டு இந்திரனிடம் போனார்.

இந்திரனோ, ‘ராம நாமத்தை என்னால் எடை போட
முடியாது; பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்…’
என்றார்.

‘யமதர்மனோடு, இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால்
தான் வருவேன்…’ என்று மீண்டும் அவன் நிபந்தனை
விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான்.
பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.

அவரும், ‘ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது;
வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம்
வாருங்கள்…’ என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்
படியாக ஆயிற்று.

அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று, ‘இந்தப் பல்லக்கில்
இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை
சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம்
என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால்
முடியவில்லை…’ என்றனர்.

‘இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும்
சுமந்து வருகிறீர்களே… இதிலிருந்தே ராம நாம மகிமை
தெரியவில்லையா…’ என்று சொல்லி, பல்லக்கில் வந்த
ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்.

அலட்சியமின்றி, ஆண்டவன் நாமம் சொல்வோம்;
அவனருளாலே அல்லல்களை வெல்வோம்!

——————————————–

பி.என்.பரசுராமன்
வாரமலர்

கடவுளை நேசியுங்கள்!

ஆண்டவன் மீது பக்தி வைத்தவர்கள் உண்டு.
ஆனால், பாசம் வைத்திருந்தோர் சிலரே.
அவர்களில் ஒருவர் தான் பெரியாழ் வார்.

அவர் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயி கோவில் இருக்கிறது.
ஆண்டாள் இங்கு தான் வாசம் செய்கிறாள். இந்த ஊரில்
முகுந்த பட்டர், பத்மவல்லி தம்பதியினர் மகனாகப்
பிறந்தவர் விஷ்ணு சித்தர்.

படிப்பில் நாட்டமில்லாத விஷ்ணு சித்தருக்கு,
பெருமாளுக்கு சேவை செய்வதே விருப்பமாக இருந்தது.
இறைவனுக்கு தொண்டு செய்து வாழ்நாளைக் கழித்து
விட வேண்டுமென நினைத்தார். கிருஷ்ண அவதாரத்தில்,
மலர் மாலைகள் சூட்டுவதில் பெருமாள் ஆர்வம்
காட்டியது பற்றி அறிந்தார். அதனால், தங்கள் ஊரிலுள்ள
வடபத்ரசாயிக்கு தினமும் புத்தம்புது மலர்களைப் பறித்து,
மாலை தொடுத்து, அணிவிக்கும் கைங்கர்யத்தை செய்ய
முடிவெடுத்தார்.

சுயலாபத்துக்காக சொத்தை விற்பவர் உண்டு. ஆனால்,
விஷ்ணுசித்தர் தன் சொத்தை விற்று, நிலம் வாங்கினார்.
அதை நந்தவனமாக்கி, அழகிய மலர்ச்செடிகளை நட்டார்.
நிலத்தைப் பண்படுத்தி, தினமும் தண்ணீர் பாய்ச்சி,
குழந்தையை வளர்ப்பது போல் மலர் செடிகளை வளர்த்து
வந்தார். அவரது தோட்டத்தில் துளசிச்செடிகளுக்கு மிகவும்
முக்கியத்துவம் தரப்பட்டது.

மலர்கள் மலர்ந்தன, துளசி மணத்தது. விஷ்ணுசித்தர்
அவற்றைப் பறித்து மாலையாக்கி வடபத்ரசாயிக்கு
அணிவித்து கண்களில் நீர் மல்க, பார்த்து ரசித்தார்.
மனதுக்குள் ஆனந்தம் பொங்கியது. அப்போது, மதுரையில்
வல்லபதேவனின் ஆட்சி நடந்தது. அவனுக்கு, வேதத்தின்
தத்துவம் என்ன, பரம்பொருள் என்பவர் யார்? என்பது
குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

அமைச்சர் செல்வநம்பியின் ஆலோசனையின் பேரில், இது
குறித்து விளக்க, அறிஞர்களை அழைக்க முடிவெடுத்து,
ஒரு போட்டியை அறிவித்தான். சிறந்த கருத்துக்களைத்
தருவோருக்கு பொற்கிழி பரிசளிக்கப்படும் என
அறிவிக்கப்பட்டது.

அவையின் நடுவே, ஒரு கம்பத்தில் பொற்காசுகள் கொண்ட
பணமுடிப்பு தொங்க விடப்பட்டது. எல்லா அறிஞர்களும்
தங்கள் கருத்தைச் சொல்ல வேண்டும். சரியான கருத்தை
யார் சொல்கிறாரோ, அவரை நோக்கி அந்த கம்பம் சாயும்.
அவர் பணமுடிப்பை எடுத்துக் கொள்ளலாம் என்பது போட்டி.

பல அறிஞர்கள் கருத்தைக் கூறினர். ஆனால், கம்பம்
சாயவில்லை. அப்போது, திருமால், விஷ்ணு சித்தர் கனவில்
தோன்றி, மன்னனின் சந்தேகத்தை தீர்த்து, பரிசைப் பெற்றுக்
கொள்ள அருளினார்.

கல்வியறிவற்ற தன்னால் எப்படி அதற்கு விளக்கமளிக்க
முடியும் என்று விஷ்ணு சித்தர் கேட்க, “அதை நான் பார்த்துக்
கொள்கிறேன்…’ என்றார்.

இதேபோல், செல்வநம்பியின் கனவிலும் தோன்றி, விஷ்ணு
சித்தரை மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்து வர
கட்டளையிட்டார். விஷ்ணு சித்தரும் மதுரை வந்தார்.
கல்வியறிவற்ற அவரைக் கண்டு பண்டிதர்கள் ஏளனம்
செய்தனர்.

அவர் அதை பொருட்படுத்தாமல் விளக்கத்தை ஆரம்பித்ததும்,
அவையே நிசப்தமானது. விஷ்ணு சித்தரின் வாயிலிருந்து
மழை போல் அரிய கருத்துக்கள் வெளிப்பட்டன. கம்பம் அவர்
முன்னால் வளைந்து நின்றது.

மன்னன் மகிழ்ந்து அவரை வாழ்த்த, “இது என் திறமையல்ல…
பெருமாளின் அருள்’ என்றார். மன்னன் அதை அவரது
தன்னடக்கமாகக் கருதி, பட்டத்து யானையில் ஏற்றி ஊரையே
பவனி வரச்செய்தான். அப்போது, திருமால், ஸ்ரீதேவி
பூதேவியுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சி தந்தார்.

உடனே அவர், “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு’
என்ற பாசுரம் பாடி, “பெருமாளே… இவ்வளவு அழகாக
இருக்கிறாயே… உன் மேல் ஊரார் கண்பட்டால் உனக்கு திருஷ்டி
வந்து விடாதா?’ என்று பாசத்தோடு கேட்டார். இதன் பின் ஊர்
திரும்பி, பூமாலையுடன் பாமாலையும் சாத்தி வழிபட்டு வந்தார்.

பெருமாளையே வாழ்த்தியவர் என்பதால், விஷ்ணுசித்தர் என்ற
பெயர் மாறி, “பெரியாழ்வார்’ என்ற பெயர் ஏற்பட்டது.
தன்னை கண்ணனின் தாய் யசோதை போல் கற்பனை செய்து,
பல பாசுரங்களை பாடியுள்ளார் பெரியாழ்வார்.

பெரியாழ்வார் திருநட்சத்திர திருநாளில், அவரை வணங்கி,
கடவுளை நேசிக்கும் பண்பைப் பெறுவோம்.

—————————————–
தி. செல்லப்பா
வாரமலர்

வழித்துணை மட்டுமல்ல.. வாழ்க்கைத் துணையும்!

குலதெய்வம், காவல் தெய்வம், இஷ்ட தெய்வம் –
இந்த தெய்வங்களை எந்தக் காலத்திலும் கைவிட்டு
விடக்கூடாது. இந்த அனைத்து தெய்வங்களும் நம்
குலம் காக்க வந்த தெய்வங்கள். நம் குடும்பத்தின் ந
ன்மைக்காக நம்முடனே அரூபமாக (உருவம் இல்லாமல்)
இருந்து வருபவர்கள்.

காவல் தெய்வத்தின் முக்கியத்துவம் என்ன என்று
பலருக்கும் தெரியவில்லை.

“காவல் தெய்வம்’ என்று நாங்கள் வணங்குகிற ஒரு தெய்வம்
கிராமத்தில் இருந்து வந்தது. குழந்தையாக இருந்தபோது
எல்லா வழிபாடும் செய்வோம். நகரத்துக்கு வந்த பின்பு வெளி
நாட்டுக்குப் போனபின் படிப்படியாக எல்லாம் மறைந்து
போயிற்று. காவல் தெய்வம் இருக்கிற ஊருக்கு எப்போது
சந்தர்ப்பம் அமைகிறதோ அப்போது தான் செல்கிறோம்…
இது சரியா? என்று பலருக்கு சந்தேகம் வருகிறது.

எப்படி ஃபேமிலி டாக்டர் இருக்கிறாரோ, அதுபோல்தான் காவல்
தெய்வம்!

எதுவாக இருந்தாலும், முதல் அறிவிப்பு காவல் தெய்வத்துக்குதான்
இருக்க வேண்டும்.

வீட்டில் திருமணம் போன்ற சுப விசேஷமா?
காத்திருந்து காத்திருந்து ஒரு உத்தியோகத்தில் சேர்ந்து வாங்கிய
முதல் சம்பளம் சமர்ப்பணிப்பா?
தவழ்கின்ற குழந்தைக்கு முதல் மொட்டையா?
சொந்த வயலில் விளைந்த முதல் அறுவடையாக் காணிக்கை
செலுத்த வேண்டுமா? இதுபோல் இன்னும் எவை எல்லாம் முதன்
முதலாக அர்ப்பணிகிறோமோ, எல்லாமே குல தெய்வத்துக்கும்,
காவல் தெய்வத்துக்கும் மட்டும் சொந்தம்!

எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும், காவல் தெய்வம் இருக்கின்ற
ஊருக்கு போக முடிகிறதோ, இல்லையோ நகரங்களில்
வசிப்பவர்கள் பூஜை அறையில் ஒரு தொகையை நேர்ந்து கொண்டு
விட்டு, காவல் தெய்வம் இருக்கும் திசை நோக்கி விழுந்து
கும்பிடுவார்கள்.

எப்படி நந்திதேவர் இல்லாத சிவாலயத்தையும், கருட பகவான்
இல்லாத வைணவ ஆலயத்தையும் பார்க்க முடியாதோ, அதுபோல்
கருப்பர் அல்லது கருப்பு சாமி இல்லாத காவல் தெய்வ ஆலயத்தைக்
காண முடியாது. கருப்பரே பிரதானமாக ஆட்சி புரியும் ஆலயமும்
உண்டு. கருப்பர் பரிவார தெய்வமாக அருளும் ஆலயமும் உண்டு.

தவறு செய்வோரை தண்டிக்கும் தன்மை இந்தக் காவல்
தெய்வங்களுக்கு உண்டு என்பதால், பெரும்பாலும் காவல் தெய்வ
ஆலயங்கள் கிராமத்தை விட்டு சற்றுத் தள்ளியே அமைந்திருக்கும்.

சொந்த ஆசைகளை நிறைவேற்றுமாறும், இஷ்ட தெய்வத்திடம்
ஏகத்துக்கும் கோரிக்கைகள் வைக்கும் இந்தக் காலத்து பக்தர்கள்,
காவல் தெய்வம் அருளும் ஆலயம் வந்தால், கட்டுப்பெட்டி ஆகி
விடுகிறார்கள். அதாவது, காவல் தெய்வத்திடம் சரணாகதி
ஆகிறார்கள்.

காரணம் – அனுதினமும் நம்மைக் காத்துவரும் காவல் தெய்வத்துக்கு
நமக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது புரியும் என்பதால்!

காவல் தெய்வத்தின் சன்னதி முன்னால் நிற்கும் போது மட்டும் எந்த
விதமான எதிர்பார்ப்பும் பெரும்பாலான பக்தர்கள் மனதில்
இருப்பதில்லை என்பது நிஜம்! “எனக்கு எது நல்லதுன்னு தோணுதோ,
அதை நீயே பார்த்துக் குடு’ என்று பொத்தாம்பொதுவாக வேண்டுதல்
வைக்கிறார்கள்.

உள்ளூர் காவல் தெய்வ ஆலயங்களில் திருவிழா என்றால், ராட்சத
பலூன் கடைகளும், இன்று காணக் கிடைக்காத குச்சி ஐஸ் மற்றும்
கமர்கட் கடைகளும், பெண்களின் ஒப்பனைப் பொருட்கள் விற்கும்
கடைகளும், ரங்க ராட்டினமும் களை கட்டும்.

ஊர்கூடி வைக்கும் மண்சட்டிப் பொங்கலும், நாவை மடித்தக்
கொண்டு பக்தைகள் இடும் குலவை சத்தமும், அருள் வந்து ஆடி ஆசி
வழங்கும் பூசாரிகளும் கருப்பர் ஆலயங்களின் அடையாளங்கள்.
பாரத தேசத்தின் பாரம்பரிய சொத்து, இங்கிருந்து இடம்
பெயர்ந்தவர்கள்தான் இந்த வழிபாட்டைத் தங்கள் நாடுகளுக்கும்
கொண்டு சென்று வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறார்கள். கருப்பரின்
ஆட்சி உலகெங்கும் உள்ளது.

ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா? வைணவ திவ்ய
தேசங்களுள் பிரதானமாகத் திகழும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர்
ஆலயத்திலும் கருப்புசாமியை தரிசிக்க முடியும்.
ஆம்! இங்கே இவருக்கு ஒரு சிறு சிலை இருப்பதைப் பலரும் அறியார்!
கொடிமரம் தாண்டி இடப்பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தால் –
அதிசத்திலும் அதிசயமாக அங்கே ஒரு கருப்புசாமியை நீங்கள்
தரிசிக்க முடியும். மரத்தால் ஆன சிலை இது.

நான்கு பெண்களுடன் (இவர்கள் கருப்பரின் மனைவியர் என்று
ஒரு குறிப்பு சொல்கிறது) கையில் ஒரு தண்ணீர் குழாயை வைத்துக்
கொண்டு விளையாடுகிற இந்தக் கருப்புசாமி சிலை சற்றே
சிதிலமடைந்திருந்தாலும் இந்த காவல் தெய்வத்தை மனதில் நிறுத்தி
இங்கே தரிசிக்கிற ஓரிரு பக்தர்களும் இருக்கிறார்கள்.

கருப்புசாமியை தரிசித்துவிட்டு மீண்டும் கோயிலுக்குள் புகுந்து
மண்டத்தை வலம் வந்து ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க உள்ளே போக
வேண்டும்.

முறுக்குக்குப் பேர் போன மணப்பாறைக்கு அருகே, திண்டுக்கல் –
திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே ஓடிக் கொண்டிருக்கும் நதி
மாமுண்டி. இந்த நதியின் கரையில் அருளிக் கொண்டிருக்கிறார்
ஆண்டவர் சுவாமிகள். இங்கு கருப்புசாமி காவல் காத்துக்
கொண்டிருக்கிறார்.

இந்த கருப்புசாமி எங்கே இருக்கிறார் தெரியுமா? இங்குள்ள ஒரு
புளிய மரத்தின் பொந்தில் அவர் குடி இருந்து வருவதாக ஒரு நம்பிக்கை.
பொந்துக்குள் மறைந்திருக்கும் கருப்பர் என்பதால், அவரை
பொந்துப்புளி கருப்பர் ( சிலர் பொத்துப்புளி கருப்பர் என்று சொல்வர்)
என்று அழைக்கிறார்கள்.

கருப்பர் என்பவர் கோடானு கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு
காவல் தெய்வமாக இன்றளவும் விளங்கி வருகிறார். தன்னை
நம்பிய பக்தர்களுக்கு மிகப் பெரிய ஆதார சக்தியாக உடன் இருந்து
அவர்களை அரவணைத்து ஆட்கொள்கிறார் கருப்பர்.

உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வசிக்கின்றார்களோ, அத்தனை
பேரின் இதயத்திலும் கருப்பர் உள்ளார்.

நாம் தரிசிக்கின்ற ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமான
கருப்பரைத் தரிசிக்க முடியும். ஆயுதங்களைத் தாங்கியபடி நின்ற
திருக்கோலம், கம்பீரமாக அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி
ஆவேசமாக புறப்படும் கோலம் என்று விதம் விதமான கருப்பர்களை
நாம் தரிசிக்கலாம்.

சில ஆலயங்களில் கருப்பரின் மனைவி கருப்பாயியையும்
தரிசிக்கலாம். தன் குடும்பத்தினருடன் கருப்பர் அருள்வது காண
கிடைக்காத அபூர்வ வடிவம்.

இனி, எந்தக் கிராமப்புற ஆலயம் சென்றாலும், அங்கு குடி
கொண்டிருக்கும் கருப்பரை தேடித் தேடி தரிசனம் செய்யுங்கள்.
உங்களுக்கு வழித்துணை மட்டுமல்ல.. வாழ்க்கையிலும் துணையாக
இருப்பார்.

————————————————-

– ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
மங்கையர் மலர்

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை

-ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை
செய்வதைப் பல பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தப் பூஜை என்ன மாதிரியான பலனை தருகிறது
என்பதைத் தெரிந்தோ, தெரியாமலோ செய்து வருகிறார்கள்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை செய்தால்,
ஒரு கோடி சுமங்கலிப் பிரார்த்தனைகள் செய்த பலன் உண்டு.
மேலும் கணவரின் தீர்க்காயுளுக்காகவும், பிரிந்த குடும்பம்
ஒன்று சேர்வதற்காகவும், பிரிந்த தம்பதிகள் கூடுவதற்காகவும்,
குடும்ப சுபிட்சத்திற்காகவும் விளக்கு பூஜை செய்தல் நல்லது.

ஆடி மாதத்தில் மலையில் இருக்கும் தெய்வங்களை வழிபடுதல்
நல்லது. (முருகன், அம்பாள் போன்ற தெய்வங்கள்). ஏனென்றால்
மலைமேல் இருக்கும் தெய்வங்களுக்கு சக்தி அதிகம். காளியை
உபாசனை செய்பவர்கள் ஆடி மாதத்தில் தான் காளி
உபாசனையை ஆரம்பிக்க வேண்டும். மந்திர சாஸ்திரங்களில்
சித்து, அசித்து, சம்ரக்ஷணம், சம்ஹாரம், அபிசாரம் போன்றவை
உண்டு. இவற்றை உபாசனை பெறவும். உபதேசிக்கப் படவும்,
சங்கல்பம் சொல்லி ஆரம்பிக்கவும் ஆடி அமாவாசையில்தான்
துவங்க வேண்டும்.

ஆடியில் ÷க்ஷத்திராடனங்கள் செல்வது மிகுந்த பலனைக்
கொடுக்கும். அந்தக் காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்,
காசி ராமேஸ்வரம் செல்வதற்கு இந்த மாதத்தைத் தான்
தேர்ந்தெடுப்பார்கள். பூமி வாங்க, பத்திரப்பதிவு செய்ய, ஆடு மாடு
வாங்க, பசு வாங்கி, வீட்டில் கட்ட ஆடி மாதம் மிகவும் விசேஷமான
மாதமாகும்.

சிலர் ஆடி மாதத்தில் வீடு மாறக் கூட இக்காலத்தில் செலவிற்கு
பணம் பற்றாக்குறை இருந்ததுதான் காரணமேயன்றி வேறெதுவும்
இல்லை.

ஆடி மாதத்தில் மூன்று நதிகள் கூடும் இடத்தில் ஸ்நானம் செய்வது
நல்லது. ஏனென்றால் அநேக கனிமப் பொருட்கள் சங்கமிக்கும்
இடமாக இது அமைவதால் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஆடி மாதத்தில், முந்தைய நாட்களில் உழுவது, விதை விதைப்பது
என்று விவசாயத்தில் படு பிசியாக இருப்பார்கள்.

அந்த நேரத்தில் பொருட்களை வாங்க பணமும் இருக்காது.
மாடுகளுக்கும் வேலை இருக்கும். வண்டி கட்டிக் கொண்டு
பொருட்கள் வாங்க வெளியூர் போக முடியாத நிலை. இந்த
சமயத்தில் வியாபாரம் குறைந்ததால், வியாபாரிகள் குறைந்த
விலைக்கு பொருட்களை விற்க ஆரம்பித்தார்கள்.
அதுவே வழிவழியாக இன்றைக்கும் தொடரும் ஆடித் தள்ளுபடி
விற்பனை.

“கால தேச வர்த்தமானம்’ என்று ஒரு சொல் உண்டு.
அதாவது நாம் இருக்கும் காலம், நாம் இருக்கும் நேசம், நாம்
ஈடுபட்டிருக்கும் தொழில் இவற்றை மனதில் கொண்டு
காலத்திற்கேற்றவாறும், சமுதாயத்திற்கு ஏற்றவாறும் மாற்றிக்
கொள்வதில் எந்தவிதத் தவறும் இல்லை என்று சாஸ்திரத்தில்
கூறப்பட்டிருக்கிறது. ஆகையால் எக்காலத்திலும்,
எந்த ஒர காரியத்தையும் இறையுணர்வோடு செய்தல் நல்லது.’

——————————————————–

– மாலதி சந்திரசேகரன்
மங்கையர் மலர்

நன்றி-குமுதம் பக்தி

-நன்றி-குமுதம் பக்தி

போதுமென்ற மனமே – பக்திக் கதை

சுப்ரபாதம் என்றால் என்ன அர்த்தம்?

su

அது ஒரு வடமொழிப் பெயர். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம். இன்னும் உங்களுக்கு மாடர்ன் ஆக சொல்ல வேண்டுமென்றால் Good Morning. கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம்

அதாவது “Good morning to God and wake up him…” இன்று பற்பல கோயில்களிலும்… காலை வேளைகளில் ரம்யமான விடியல் போதில்… ஸ்பீக்கரில் போடுகிறார்கள் சுப்ரபாதத்தை. அந்த இசை கேட்கும்போதே நம்மை மயக்குகிறது. ஆனால் அதன் அர்த்தம் உங்களுக்குப் புரியுமா?… என்ன பாடுகிறார்கள் என்று தெரியாமலேயே… அதை நாம் திரும்பப் பாடி முணுமுணுக்கிறோம்.

தினமும் காலையில் அதை டேப் ரெக்கார்டரில் போட்டு விடுகிறோம். எம்.எஸ்.சுப்புலட்சுமி தன் வசீகர குரல் வளத்தால்…”கௌசல்யா சுப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்ததது…” என ஆரம்பிக்கிறார். அப்படியே விடியும்வரை கேட்கிறீர்கள்.

இது யார் எழுதியது?… இதன் அர்த்தம் என்ன?… தமிழ்நாட்டில் பற்பல பிராமணர் அல்லாதோர் வீடுகளிலும் இந்த சுப்ரபாதப் பாடல் ஒலித்து மயக்குகிறதே… இந்த சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?…

இந்த சுப்ரபாதத்தை அதாவது சமஸ்கிருத “Good morning’ ‘ஐ இயற்றியவர் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா. (மத விஷயங்களில் தன்னோடு வாதம் பண்ண வருபவர்கள் யாராக இருந்தாலும்… தன்னுடைய பயங்கரமான பிரதிவாதம் மூலம் அவர்களை தோற்கடித்து விடுவார் அண்ணா. அதனால்தான் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா என பெயர் பெற்றார்.) இவர் மணவாள மாமுனிகளின் சிஷ்யர். “ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி’ என்று வாழ்த்தினாரே அதே மணவாள மாமுனிகளின் சிஷ்யர்தான் அண்ணா.

“கௌசல்யா சுப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்தது…” என்ற இந்த முதல் வரிகள் வால்மீகி ராமாயணத்திலிருந்து உருவப்பட்டது அதாவது… விஸ்வாமித்ரர் ராமனை எழுப்புகிறார். “கௌசல்யை புண்ணியம் செய்து பெற்ற ராமா… அங்கே காட்டுப் பக்கம் அரக்கர்கள் அடாவடி செய்து தவ முனிவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். நீ வந்து அவர்களை வீழ்த்து…’ என ராமனை எழுப்பி அழைக்கிறார்

விஸ்வாமித்ரர்.இதை முதல் வரியாக போட்டு… வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியிருக்கிறார் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா.

=Ramganesh
http://www.pasumaikudil.com/

நட்பை வளர்ப்போம்!

ஜூலை 9, கலிக்காமர் குருபூஜை

மனிதர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது
சகஜம். அத்தகைய மன வேறுபாடுகளை மறந்து,
உறவை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும்
விதமாக சிவபெருமான் ஒரு லீலையை நிகழ்த்தினார்.

தேவாரம் பாடிய சுந்தரர் முற்பிறப்பில்,
ஆலாலசுந்தரராக கைலாயத்தில் சிவ தொண்டு
புரிந்து வந்த போது, பார்வதி தேவிக்கு பணிவிடை
செய்து வந்த கமலினி, அநிந்திதை என்ற சேடிப்
பெண்கள் மீது காதல் கொண்டார்.
அந்தப் பெண்களும் சுந்தரரை விரும்பினர்.

சிவலோகம் என்பது வழிபாட்டுக்குரியது; அங்கே
காதலுக்கு இடமில்லை என்பதால், அவர்கள்
பூலோகத்தில் பிறந்து, உலக வாழ்வை அனுபவித்த
பின், கைலாயம் வரும்படி அருள்புரிந்தார் சிவன்.

அப்பெண்களே பரவை மற்றும் சங்கிலி என்ற
பெயருடன் பூலோகத்தில் பிறந்தனர்.
ஆலால சுந்தரரும், திருநாவலூரில் பிறந்தார்.

பரவையை திருமணம் செய்த சுந்தரர்,
சிவ தலங்களுக்கு யாத்திரை செல்வதாக கூறிக்
கிளம்பினார். வழியில், திருவொற்றியூரில்
சங்கிலியாரைக் கண்டார். விதிப்பயனால்,
அவரைத் திருமணம் செய்யும் எண்ணம் அவருக்கு
தோன்றி, திருமணமும் முடிந்தது.

இந்த தகவல் பரவைக்கு தெரியவே, அவர் சுந்தரருடன்
வாழ மறுத்து விட்டார்.

பக்தியில் பலவகை உண்டு. சுந்தரர், இறைவனை
தன் நண்பனாகக் கருதி, தன் பாடல்கள் மூலம்
சிவனின் அன்பைப் பெற்றிருந்தார். அதனால்,
தனக்காக, முதல் மனைவியிடம் தூது சென்று
சமாதானம் செய்யும்படி இறைவனை வேண்டினார்.
சிவனும், அவர்களைச் சமாதானம் செய்து சேர்த்து
வைத்தார்.

இந்நிகழ்வு, சோழ நாட்டிலுள்ள பெருமங்கலம்
கிராமத்தில் வசித்த சிவபக்தரான கலிக்காமருக்கு
தெரிய வந்தது. இவர் மானக்கஞ்சாற நாயனாரின்
மகளைத் திருமணம் செய்தவர்.

‘இரண்டாவது மனைவிக்காக, முதல் மனைவியிடம்
இறைவனையே தூது போகச் செய்து விட்டாரே சுந்தரர்…
அவரைப் பழி வாங்க வேண்டும்…’ என்று நினைத்தார்
கலிக்காமர்.

சிவபக்தர்களான அவர்களை, நண்பர்கள் ஆக்குவதற்காக,
திருவிளையாடல் புரிந்தார் சிவன்.

கலிக்காமருக்கு கடுமையான வயிற்று வலியைக்
கொடுத்தார். வலியால் துடித்த கலிக்காமரின் கனவில்
தோன்றி, ‘இந்நோயை சுந்தரரால் மட்டுமே தீர்க்க முடியும்;
அவரை வரவழை…’ என்று சொல்லி மறைந்தார்.

அதுபோல், சுந்தரர் கனவில் தோன்றிய சிவன், கலிக்காமரின்
மன வருத்தங்களை கூறினார். இதனால், ‘சிவபக்தரின்
மனதை புண்படுத்திய பாவத்திற்கு ஆளானோமே…
அவரிடம் மன்னிப்பு கேட்பதுடன், அவரது நோயையும்
குணப்படுத்த வேண்டும்…’ என நினைத்து, பெருமங்கலம்
புறப்பட்டார் சுந்தரர்.

காதலுக்காக, தன் அன்பிற்குரிய இறைவனையே தூது
செல்ல வைத்தவரின் உதவி, தனக்கு தேவையில்லை
என்று நினைத்த கலிக்காமர், கத்தியால் வயிற்றில் குத்தி
இறந்து போனார்.

கலிக்காமர் வீட்டுக்கு வந்த சுந்தரர், நடந்ததை எண்ணி
வருந்தினார். அப்போது, அங்கே தோன்றிய சிவன்,
கலிக்காமருக்கு உயிர் கொடுத்து, முன்வினையை
எல்லாருமே அனுபவித்தாக வேண்டும் என்பதை விளக்கி,
இருவரும் நட்புடன் திகழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சுந்தரரால், சிவதரிசனத்தை நேரடியாகப் பெற்ற கலிக்காமர்
மகிழ்ந்தார். தவறு செய்வது மனித இயற்கை; அதை,
பெரிதுபடுத்தாமல் நட்பு கொள்வதே உயர்ந்த பண்பு
என்பதற்கு உதாரணம் கலிக்காமரின் வாழ்க்கை.

இவரது குருபூஜை, ஆனி ரேவதி நட்சத்திரத்தில் நடக்கிறது.

————————————————–

தி.செல்லப்பா
வாரமலர்

« Older entries