நரன் கவிதைகள்
நரன்
1.அவன் சிலநேரம்
காற்றில்
அப்படியும்
இப்படியுமாய்
வாளை வீசும்போது
அம்மரத்திலிருந்து
ஓரிரு இலைகள்
உதிர்கின்றன.
*****
2.எதிர்பார்த்தல்
எதுவுமின்றி
நூறாண்டுக்குப் பின்வருபவர்களுக்கும்
உபயோகமாய்
வாழத் தீர்மானித்தேன் .
நூறாண்டுக்கும் முன்
யாரோ
புதைத்து வைத்த
ஒயின் பீப்பாயை
மண்ணிலிருந்து
தோண்டி எடுக்கும் போது .
*****
3.பச்சைநிற வயற்பரப்பிலிருந்து
பச்சைநிறத் துண்டு வயற்பரப்புகள்
ஆகாசம் நோக்கிப் பறக்கின்றன
வசந்த காலத்தின்
ஆயிரமாயிரம் வெட்டுக்கிளிகள் .
*****
4.கொஞ்சம் அரிசியையும்
கட்டுச் சுள்ளியையும்
கொடுத்து உதவினான் .
திரும்ப ஒரு புன்னகையை
வழங்கினேன் அவனுக்கு .
அது மட்டும் தான்
அது மட்டும் தான்
அளிக்க முடிந்தது என்னால்
அப்போதைக்கு .
*****
5..ஆறு மாதத்திற்குப் பின்
இங்கே வந்திருக்கிறேன்
தியானத்திற்காய் …..
உதிர்ந்த இலைகள்
பொலிவிழந்த மரங்கள்
ஹோ …..
என் தியானம்
எப்படிக் கழியும் அமைதியுடன் .
*****
6.வனாந்திரத்தில்
உதிர்ந்த பூக்களை
மிதித்தபடி
மரத்திலிருக்கும் பூக்களை
ரசித்துக் கொண்டிருக்காதே .
அதனதன் இயல்பிலிருக்கின்றன
பூக்கள் .
*****
7.வனத்தில் அமர்ந்து
சிறிது நெருப்பைப் பற்ற வைத்தேன் .
மரங்கள் அவற்றை
தன் அருகிலிருக்கும் துணைமரங்களுக்கு
கைமாற்றி விட்டுக் கொண்டிருந்தன .
*****
8.தொடர்ந்து
இயற்கையை அவதானித்துக்
கொண்டிருந்தேன்….
………தொடர்ந்து..
வயதாகி விட்டது .
என் மகனிடம் கையளித்துவிட்டு
செல்கிறேன் .
மரங்களும்
தன் பங்கிற்கு
கிளை மரங்களை எழுப்பியிருக்கின்றன .
*****
9.என்னோடு
இந்த தியானவிரிப்பின்
மூலையில்
ஓர் எறும்பும் அமர்ந்திருக்கிறது .
கண்களை மூடி
தியானிக்கத் துவங்கினேன்
தியானம் இப்போது
மூலையிலிருந்து
எறும்புகள் சாரைசாரையாய்
நகர்ந்து கொண்டிருந்தன
தியானத்தின் மேல் .
*****
10.தியானத்திற்குப்பின்
மூன்று துறவிகளும்
ஒரே கிணற்றுக்குள் இறங்கி குளித்தனர் .
குளித்து முடித்து வெவ்வேறு
கிணறுகளிலிருந்து வெளியே வந்தனர் .
முதல் துறவி சொன்னார் .
நான் குளித்த கிணற்றில் பாசிபடர்ந்திருந்தது .
இரண்டாம் துறவி ……..
நான் குளித்த கிணற்றில் நீர் உப்பு கரித்தது.
மூன்றாம் துறவி ………..
நான் குளித்த கிணற்றில்
27தவளைகளும் ,
நீர்ப் பாம்பொன்றும் இருந்ததென .
பின் ஒரே கிணற்றின் கரையில் நின்று
தத்தம் ஈர உடலை துடைத்துக்கொண்டன.
*****************
Thanks:http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=377
Vijayakumari said,
ஜூன் 26, 2021 இல் 5:39 முப
அருமை.கடைசி கவிதை மிகவும் சிறப்பு