சலசலத்து ஓடிய ஆறு
சாக்கடையாய் சீரழிந்தது
சீராய் பெருகியிருந்த சிறு மணலும்
சில்லரைக்கு விலை போனது!
–
வானத்திற்கே விசிறிகளாய்
விரிந்திருந்த வரிசை மரங்கள்
வெட்டப்பட்ட நெடுஞ் சாலைகளில்
வெப்பம் ஒன்றே மிச்சம் உள்ளது!
–
புழுதியில் ஆடியதும், பனியில் நனைந்ததும்
புல்லில் நடந்ததும், பூக்களுடன் பேசியதும்
பழங்கதையாய் புதைய, தினம் முளைக்கும்
புதுக் கல் மரங்களே கண்ணில் பதிகிறது!
–
நதியைக் கொன்றதால்
காசுக்கு நீர் என ஆனது
நச்சுப் புகை பரப்பியதால்
நல்ல காற்றும் காசு ஆகிறது
–
நல்ல வளங்களுடன் நாம் நடந்து வந்த பூமி
நம் வாரிசுக்கு இல்லை என ஆனது!
–
இன்னல் பல பட்டதால் இயற்கையின்
இனிய முகம் மாறி, சினத்தின் அலைகளால்
இன்னுயிர் பல சுருட்டிக் காட்டி விட்டாள் – கடலில்
இதயம் சிதறிக் குமுறுகிறாள் பூமியில்!
–
இதமாய் இயங்கிய நிலமின்றி
இறப்பைத் தழுவும் உழவன்
இற்று விட்ட வேராய் இருண்டு விட்ட
இன்றைய உலகம்…
இத்தனையும் பார்த்த பின்னும்
–
இழப்பின் விளிம்பை எட்டிய பின்னும்
இதுவே நேரம் என விழிக்காமல்
இன்னுமா நீ உறங்குகிறாய்?
——————————
–
—யசோதா சுப்ரமணியன், மதுரை.
நன்றி-வாரமலர்
இன்றே விடியட்டும்! – கவிதை
ஜூன் 27, 2024 இல் 11:35 முப (Uncategorized)
Tags: கவிதை
பின்னூட்டமொன்றை இடுக