சமீபத்தில் படித்து ரசித்த நூல் பற்றி…?
தென்கச்சி பதில்;
—————————-
படித்து ரசித்த நூல் எதுவுமில்லை… ஆனால் படித்து ரசித்த “ஜோக்’
ஒன்று உண்டு (நன்றி: பெண்ணே நீ! ஜூலை 2004) அதைச் சொல்லுகிறேன்…
கேளுங்கள்.ஒரு மனிதன் டாக்டரைத் தேடிவந்தான்.
“”டாக்டர்… எனக்கு ஒரு பிரச்னை?”
“”என்ன… பிரச்னை?”
“”நான் செத்துப்போயிட்டேன்!”
டாக்டருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவர் புரிந்து கொண்டார். இவனிடம்
நயமாகப் பேசிதான் சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.
பேச ஆரம்பித்தார்.
“”இங்கே பாருப்பா… நான் நாற்காலியில் உக்கார்ந்திருக்கேன்… நீ ஸ்டூல்லே
உக்கார்ந்திருக்கே… நானும் நீயும் பேசிக் கொண்டிருக்கிறோம்….
அதனாலே நீ சாகலே….!”
“”இல்லே சார்… இப்ப நீங்க பேசிக்கிட்டிருக்கிறது என்னோட ஆவிகிட்டே…!”
டாக்டருக்கு மேலும் அதிர்ச்சி… ரொம்பவும் வில்லங்கம் பிடிச்ச
ஆசாமியா இருக்கானே…! மறுபடியும் ஆரம்பித்தார்.
“”இங்கே பாருப்பா… செத்துப் போனவங்களுக்கும் உயிரோட
இருக்கிறவங்களுக்கும் வித்தியாசம் இருக்குமா? இருக்காதா?”
“”இருக்கும்!”
“”என்ன வித்தியாசம்?”
“”நீங்கதானே டாக்டர்… நீங்களே சொல்லுங்க!”
இவனை அறிவியல் பூர்வமாக நிரூபித்துப் புரியவைக்கலாம் என்று முடிவு
எடுத்த டாக்டர் மறுபடியும் ஆரம்பித்தார்.
“”இதோ பாருப்பா… உயிரோட இருக்கிறவங்களுக்கு உடம்புலே இரத்தம்
ஓடும்! செத்துப் போனவங்களுக்கு இரத்தம் ஓடாது… சரியா?”
“”சரி!”
“”உனக்கு அதை பரீட்சை பண்ணி பார்க்கலாமா?”
“”பார்க்கலாம்!”
இப்போது டாக்டர் உற்சாகமானார்.
அவனுடைய ஒரு விரலைப் பிடித்தார். ஸ்பிரிட்டால் துடைத்தார்.
ஓர் ஊசியால் இலேசாகக் குத்தினார். இரத்தம் வந்தது. டாக்டர்
மகிழ்ச்சியோடு, “”பார்த்தாயா… இரத்தம் வந்துடுச்சி!”
“”ஆமாம் வந்துடுச்சி!”
“”என்ன நினைக்கிற என்னைப்பத்தி?”
“”நீங்க ஒரு திறமையான டாக்டர் தான்!”
“”ஹி! எதனாலே அப்படி சொல்றே?”
“”செத்துப்போன உடம்புலேயே இரத்தம் வரவழைச்சிட்டீங்களே!”
—————
பின்னூட்டமொன்றை இடுக