`பாசிட்டிவ் சிந்தனை விற்பனைக்கு… விலை 4 கிளிஞ்சல்கள்!’-ஒரு நெகிழ்ச்சிக் கதை

120916_thumb.jpg

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்.
அதிலும் நேர்மறையான விஷயங்களின் மீது மட்டுமே
கவனம் செலுத்துங்கள்’ என்று குறிப்பிடுகிறார்
அமெரிக்க ராக் பேண்ட் இசைக்கலைஞர் மாத் கேமரூன்
(Matt Cameron).

பாசிடிவ்வான அணுகுமுறைக்கு ஒரு சக்தி உண்டு.
அது தொடர்புடையவருக்கு மட்டுமல்ல… அடுத்தவருக்கும்
நன்மை செய்யும். நேர்மறைச் சிந்தனையுள்ளவர்கள்,
வாழ்க்கையை அதன் அர்த்தம் உணர்ந்து வாழ்கிறவர்கள்.
அவர்களைச் சுற்றியிருக்கும் பாசிட்டிவ் அதிர்வலைகள்
பிறரையும் தொற்றிக்கொள்ளும்.

இவர்கள் எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள்;
எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்பவர்களாக
இருப்பார்கள். யாரோ ஒருவர் செய்யும் ஒரு சின்ன
பாசிட்டிவ் செயல்பாடு, எதிர்கால சந்ததியினருக்கு
பலத்தையும், வாழ்வின் மீது பிடிப்பையும், மற்றவர்களின்
மேல் நம்பிக்கையையும், எதையும் சாதிக்கும்
தன்னம்பிக்கையையும் தருமா?

நிச்சயம் தரும். அதை உணர்த்துகிறது இந்தக் கதை.

`கார்மெல் பை தி ஸீ’ (Carmel by the sea)…
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலிருக்கும்
ஒரு சிறு கடற்கரை நகரம்.

அது ஒரு மாலை நேரம். அன்று விடுமுறை நாள்.
ஓர் ஆறு வயதுள்ள சிறுவனும், அவனுடைய தங்கையும்
மதியம் நான்கு மணிக்கே கடற்கரைக்கு வந்துவிட்டார்கள்.
அவர்களுக்கு அங்கே முக்கியமான வேலையிருந்தது.

கடற்கரையோரமாகச் சேரும் கிளிஞ்சல்களைப்
பொறுக்கிச் சேகரிக்கும் வேலை. அண்ணன், தங்கையை
ஓரிடத்தில் உட்காரச் சொல்லிவிட்டு கிளிஞ்சல்களைச்
சேகரிக்க ஆரம்பித்தான்.

பார்த்துப் பார்த்து எடுத்தான். அவனுக்கு நல்லதாக,
சிறந்ததாகத் தோன்றிய கிளிஞ்சல்களை மட்டும் எடுத்து
தன் கால்சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டான்.

ஒரு மணி நேரம் ஆனது. `இன்றைக்கு இது போதும்’
என்று தோன்றிய பிறகு, அவன் தங்கையை அழைத்துக்
கொண்டான். இருவரும் கடற்கரையைத் தாண்டி
கடைவீதி வழியாக நடந்தார்கள்.

கொஞ்ச தூரம் நடந்த பிறகுதான் சிறுவ்ன், தன் தங்கை
உடன் வராததை கவனித்தான். திரும்பிப் பார்த்தான்.
அவள், ஒரு கடையின் முன்னால் நின்று எதையோ
பார்த்துக்கொண்டிருந்தாள்.

சிறுவன் தங்கையின் அருகே போனான். அவள் அந்தக்
கடையில் காட்சிக்குவைக்கப்பட்டிருந்த
ஒரு பொம்மையையே ஆசையோடு பார்த்துக்
கொண்டிருந்தாள்.

சிறுவனும் பார்த்தான். மிக அழகான பொம்மை அது.
“உனக்கு இந்த பொம்மை வேணுமா?’’

அண்ணன் - தங்கை

அவள் `ஆமாம்’ என்பதுபோலத் தலையசைத்தாள்.
சிறுவன் யோசிக்கவேயில்லை. ஒரு பெரிய மனிதனைப்
போல அவள் கைகளைப் பற்றிக்கொண்டான்.

அவளை அழைத்துக்கொண்டு அந்த பொம்மைக்
கடைக்குள் நுழைந்தான். இதையெல்லாம் கடையின்
கண்ணாடி வழியாக அதன் உரிமையாளர் பார்த்துக்
கொண்டேயிருந்தார்.

சிறுவன் நேராக அந்த பொம்மையிருக்கும் இடத்துக்குப்
போனான். அதை எடுத்தான். அவளிடம் கொடுத்தான்.
சிறுமியின் முகம் முழுக்கப் பரவசம்.

அவள் அந்த பொம்மையை ஆவலோடு அணைத்துப்
பிடித்துக்கொண்டாள். கடை உரிமையாளர் ஒரு பெரிய
மனிதனைபோல் நடந்துகொள்ளும் அந்தச் சிறுவனையே
வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

சிறுவன் இப்போது கவுன்ட்டரின் அருகே வந்தான்.
“சார், இந்த பொம்மையோட விலை என்ன?’’ என்று
கேட்டான்.

கடைக்காரர் புன்னகையோடு கேட்டார்…
“உன்னால எவ்வளவு கொடுக்க முடியும்?’’

சிறுவன், கடற்கரையில் ஓடி ஓடி சேகரித்த கிளிஞ்சல்கள்
அத்தனையையும் தன் கால்சட்டைப் பையிலிருந்து எடுத்து
கவுன்ட்டர் மேஜையின் மேல் வைத்தான்.

அந்தக் கடைக்காரர், அந்த கிளிஞ்சல்களை எடுத்து கரன்ஸி
நோட்டுகளை எண்ணுவதுபோல ஒவ்வொன்றாக எண்ண
ஆரம்பித்தார்.

“ரொம்பக் குறைவா இருக்கா?’’ – சிறுவன் கேட்டான்.

“இல்லை, இல்லை… அந்த பொம்மையோட விலையைவிட
ரொம்ப அதிகமா இருக்கு. மிச்சத்தை உன்கிட்டயே
குடுத்துடுறேம்ப்பா…’’ என்றவர், நான்கே நான்கு
கிளிஞ்சல்களை மட்டும் எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை
அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

சிறுவன், மகிழ்ச்சியோடு கிளிஞ்சல்களை வாங்கி தன்
கால்சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டான்.
தங்கையை அழைத்துக்கொண்டு கடையைவிட்டு வெளியே
போனான்.

கிளிஞ்சல்கள்

இதையெல்லாம் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்
ஒருவரும் ஆச்சர்யத்தோடு கவனித்துக்கொண்டிருந்தார்.
அவர் கடை உரிமையாளரின் அருகே வந்தார்.

“சார்… விலை அதிகமுள்ள அந்த பொம்மையை வெறும்
நாலு கிளிஞ்சலுக்கு வித்திருக்கீங்களே…’’ என்றார்.

கடை உரிமையாளர் சிரித்தபடி சொன்னார்..
. “ஆமா, நமக்கு இது வெறும் கிளிஞ்சல்கள்.
ஆனா, இந்த வயசுல அந்தப் பையனுக்கு பணம்னா என்னனு
புரிஞ்சுக்க முடியாது. ஆனா, வளர்றப்போ புரிஞ்சுக்குவான்.

பணத்துக்கு பதிலா கிளிஞ்சலைக் கொடுத்து
ஒரு பொம்மையை வாங்கினது அவன் ஞாபகத்துக்கு
வர்றப்போ, நானும் அவன் நினைவுக்கு வருவேன்.

அப்போ அவனுக்கு இந்த உலகம் முழுக்க நல்ல மனுசங்க
இருக்காங்கனு தோணும்.
அவனும் பாசிட்டிவ் எண்ணத்தை வளர்த்துக்குவான்.
அவ்வளவுதான்…’’

———————————-பாலு சத்யா

பாலு சத்யா
எழுத்தாளர், பத்திரிகையாளர்.
இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல்,
ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு
புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன.

`பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது
பெற்றிருக்கிறார்.
இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது,
பாரத ஸ்டேட் பாங்க் விருது,
இலக்கிய வீதியின் `அன்னம் விருது’,
திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது,
இலக்கிய சிந்தனை பரிசு…

உள்பட பல விருதுகள் பெற்றவர்.
இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப்
பணியாற்றியவர்

———————–
நன்றி-விகடன்

நீதிக்கதை – தங்கத் தூண்டில்

வசந்த், சுந்தர் இருவரும் அண்ணன் தம்பிகள்.
மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.

ஒருநாள் நண்பகல் நேரம், அவர்கள் இருவரும் வீட்டில்
சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது
பிச்சைக்காரன் ஒருவன் அங்கே வந்தான். எலும்பும்
தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக
இருந்தது.

அவர்களிடம் அவன், “”சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகின்றன.
ஏதேனும் உணவு தாருங்கள்!” என்று கெஞ்சினான்.
இரக்கப்பட்ட வசந்த் அவனுக்கு உணவு தந்தான்.

இதைப் பார்த்த சுந்தர், “”அண்ணா! இப்படிப்பட்ட
சோம்பேறிகளிடம் இரக்கம் காட்டக் கூடாது!” என்று
எரிச்சலுடன் சொன்னான். அடுத்த நாளும் அந்தப்
பிச்சைக்காரன் அங்கே வந்தான். அவனுக்கு வசந்த் உணவு
தந்தான்.

மீண்டும் இவன் இங்கே வந்து பிச்சை எடுக்கிறானே என்று
கோபம் கொண்டான் சுந்தர்.

“”சோம்பேறிப் பயலே! அடுத்த
முறை உன்னை இங்கே பார்த்தால் தொலைத்து விடுவேன்!”
என்று கத்தினான் சுந்தர்.

மூன்றாவது நாளும் பிச்சை கேட்டு அங்கே வந்தான் அவன்.
கோபத்தால் துடித்த சுந்தர் அங்கிருந்த தூண்டில் ஒன்றை
எடுத்துக் கொண்டான். அவனைத் தரதரவென்று இழுத்துக்
கொண்டு ஏரிக்கரைக்கு வந்தான்.

”இப்படிப் பிச்சை எடுத்து இழிவான வாழ்க்கை நடத்துகிறாயே?
உனக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருகிறேன். இந்தத் தூண்டிலை
வைத்துப் பிழைத்துக் கொள்!” என்றான்.

அவனுக்கு மீன் பிடிக்கக் கற்று கொடுத்துவிட்டு அங்கிருந்து
சென்றான். அதன் பிறகு அந்தப் பிச்சைக்காரன் அவர்கள்
வீட்டிற்கு வருவதே இல்லை.

பல ஆண்டுகள் சென்றன. செல்வந்தர் ஒருவர் அழகிய
குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் அங்கே வந்தார். அவர்
கையில் தங்கத்தால் செய்யப்பட்ட சிறிய தூண்டில் ஒன்று
இருந்தது.

வசந்த்தும், சுந்தரும் அவரைப் பார்த்தனர். தங்கத் தூண்டிலை
சுந்தரிடம் தந்தார் அவர். “”என் அன்புப் பரிசாக வைத்துக்
கொள்ளுங்கள்!” என்றார்.

தன் வீட்டிற்கு வந்த பிச்சைக்காரன்தான் அவன் என்பது
வசந்த்துக்கு தெரிந்தது.
கோபத்தால் துடித்த அவன்,

”நீ சாகப் பிழைக்க இங்கே வந்தாய். உனக்கு உணவு தந்துக்
காப்பாற்றியவன் நான். எனக்குத்தான் இந்தத் தங்கத்
தூண்டில் உரியது. என்னிடம் தா!” என்று கத்தினான்.

ஆனால், அவரோ, “இது உங்கள் தம்பிக்குத்தான் உரியது!”
என்று உறுதியாகச் சொன்னார். இதை வசந்த் ஏற்றுக்
கொள்ளவில்லை. வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு
சென்றான்.

நடந்ததை எல்லாம் விசாரித்தார் நீதிபதி.

வசந்த்தைப் பார்த்து
அவர், “நீ இவருக்கு உணவு அளித்துக் காப்பாற்றியது
உண்மைதான். நீ செய்த உதவி இவர் வாழ்க்கையில் எந்த
மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உன் தம்பியோ இவர்
வாழ்வதற்கு வழி காட்டினார்.

அதைப் பயன்படுத்தி இவர் இந்த நிலைக்கு உயர்ந்தார்.
நிலையான உதவி செய்த சுந்தருக்கு இவர் தூண்டிலைப் பரிசு
அளித்தது சரியே. இந்தத் தங்கத் தூண்டில் சுந்தருக்கே உரியது.
இதுவே என் தீர்ப்பு!” என்றார்.

————————————–
தி இந்து

விகடகவி தெனாலி ராமன்

download

 

ஒரு ஏழைக் குடும்பத்தில் ராமன் என்ற சிறுவன் இருந்தான்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்தான். அவனுடைய தாய்
மகனை அழைத்துக் கொண்டு பிறந்த ஊரான தெனாலிக்கு
புறப்பட்டார்.

அங்கு ராமன் தாய் மாமா வீட்டில் வளர்ந்தான்.
படிப்பு வரவில்லை. ஆனால், நகைச்சுவையாக பேசும்
திறமை இருந்தது.

ராமன் விடலைப் பருவத்தை கடந்த பிறகு குடும்பத்தைக்
காப்பாற்ற என்ன செய்வது என்ற கவலை எழுந்தது.

ஒரு நாள் தெனாலிக்கு ஒரு துறவி வந்தார். அவரிடம் தன்
நிலையைச் சொல்லி வருந்தினான். இரக்கப்பட்ட துறவி,
காளியின் மூல மந்திரத்தை உபதேசித்து, ‘இந்த
மந்திரத்தை நம்பிக்கையுடன் ஜெபித்துவா. காளி உனக்கு
பிரசன்னமாகி வேண்டும் வரம் தருவாள்’ என்று வழி
காட்டினார்.

அதன்படி ராமனும் அந்த ஊரில் இருந்த காளி கோயிலுக்குச்
சென்றான். மந்திரத்தை 108 முறை ஜெபித்து விட்டு
கண்களைத் திறந்து பார்த்தான். காளியின் தரிசனம்
கிடைக்கவில்லை. இருந்தாலும் செய்ததை விடாமல்
தொடர்ந்தான்.

இரவாகிவிட்டது. ராமன் கோயிலை விட்டு நகரவில்லை.
ஒருவழியாக காளி அவன் எதிரில் தோன்றினாள்.

‘உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டாள்.

‘தாயே! நான் வறுமையில் வாடுகிறேன்.
அதைப் போக்குங்கள். படிக்காத எனக்கு நல்லறிவும்
தாருங்கள்’ என்றான்.

இதைக் கேட்ட காளி கலகலவெனச் சிரித்தாள்.

அடேய்! ‘உனக்கு பேராசைதான். கல்வியும் வேண்டும்.
எல்லாமும் வேண்டுமா?’nஎன்றாள்.

‘ஆமாம், தாயே புகழ் பெற கல்வி வேண்டும்.
வறுமை நீங்கப் பொருள் வேண்டும்’ என்றான்.

காளி தன் இரண்டு கைகளையும் நீட்டினாள்.
அதில் இரண்டு பால் கிண்ணங்கள் இருந்தன.
அந்தக் கிண்ணங்கள் அவனிடம் தந்தாள் காளி.

‘ராமா இதிலுள்ள பால் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி.
இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை
மட்டும் இப்போது குடித்துக் கொள்ளலாம்.
எது தேவை என்பதை நீயே முடிவு செய்து கொள்’ என்றாள்.

ராமன், நான் இரண்டையும் தானே கேட்டேன். ஒன்றை மட்டும்
குடிக்கச் சொன்னால் எப்படி? எதை எடுப்பது என்று
தெரியவில்லையே என்று யோசித்தபடி நின்றான்.

பிறகு சட்டென்று இடது கையிலிருந்த பாலையும் (செல்வம்)
வலது கையிலிருந்த பாலையும் (கல்வி) கலந்து வேகமாகக்
குடித்துவிட்டான். அது கண்டு காளியே திகைத்துப்
போனாள்.

‘அடேய்! உன்னை நான் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே
குடிக்கச் சொன்னேன்’.

‘ஆமாம் தாயே! நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே
குடித்தேன்’ என்றான்.

‘ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?’

‘கலக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லவில்லையே அம்மா!’

அவனது புத்திசாலித்தனத்தால் மகிழ்ந்த காளி! ‘பாலகா
நான் உக்கிர தேவதை. என்னிடம் வரம்பு மீறினால் அவர்களை
அழித்து விடுவேன். என்பதை நீ அறிவாய்.

ஆனால், கோவக்காரியான என்னையே மடக்கி விட்டாயே!
ஏமாற்றினாலும் நீ அறிவில் சிறந்தவன். ‘விகடகவி’ என்ற
பெயருடன் வாழ்வில் சிறந்து விளங்குவாய்’ என்று வரம்
அளித்து மறைந்தாள்.

இந்த ராமன்தான் பிற்காலத்தில் கிருஷ்ண தேவராயரின்
அரண்மனையில் விகடகவி தெனாலி ராமனாக புகழ்
பெற்று விளங்கினார். புத்திசாலிகளைத் தேடி கடவுளும்
வருகிறார் என்பது புரிகிறதல்லவா

———————————
– மயிலை மாதவன்

தியாகமூர்த்தி – சிறுகதை- புதுமைப்பித்தன்

செங்காணி என்ற திவ்வியப் பிரதேசத்தைப் பற்றி,
நீங்கள் எந்தப் பூகோள சாஸ்திரத்தையோ, படங்களையோ,
காருண்ய கவர்ண்மெண்டார் மனமுவந்து அருளிய நன்மைகளில்
ஒன்றாகிய கெஜட்டுகளையோ திருப்பித் திருப்பிப் பார்த்தாலும்
கண்டுபிடிக்க முடியாது.

ஆனால் எனது வார்த்தையையும் அந்தப் பெயர் தெரியாத புலவர்
இசைத்த,
தருவைக்கு மேற்கே செங்காணி வெள்ளம்
தானே வந்தால் இங்கு விடுவானே தோணி

என்ற மேற்கோள் வரிகளையும் நம்புவதாக இருந்தால்தானே
மேலே சொல்ல முடியும்.

தானே எப்பொழுதாவது வெள்ளம் வந்தால் தோணி விடக்கூடிய
அந்த ஆற்றிற்கு ஒரு தாம்போதி, மேற்கே இருக்கும்
செங்காணியையும் கிழக்குக் கரையில் இருக்கும் தருவைத்
திருப்பதியையும் பிணித்து நின்றது.

தாம்போதியைக் கடந்ததும் சாலையின் பக்கத்தில் ஒரு புளியமரம்.
அதன் பக்கத்தில் இருந்த இரும்புப் பட்டடை வீடு என்ற முறையில்
சின்னாபின்னமாக நின்ற ஒரு குடிசையில் இருபது வருஷங்களுக்கு
முன் ராமசாமிப் பத்தரின் திருஅவதாரம் இனிது நடந்தேறியது.

தகப்பனாரைப் போல் ஓட்டைக் கட்டை வண்டிக்குப் பட்டை
போடுவது, பஞ்சத்தில் அடிபட்ட மாடுகளுக்கு லாடம் அடிப்பது,
பொழுது போக்காக ஆணிகளைச் செய்து குவிப்பது என்ற கொல்ல
சமூகத்தின் வைதிக நடவடிக்கைகளுக்கும், காலம் இருக்கிற
தர்பாரில், தனது அபூர்வமான புத்தி விசாலத்திற்கும் ஒத்துவராது
என்று கண்ட ராமசாமிப் பத்தர், தலைமுறை தலைமுறையாகத்
தம் தகப்பனார் வரையில் வந்த செங்காணி மான்மியத்தை முடித்துக்
கொண்டு திருநெல்வேலிக்குச் சென்று குடியேறினார்.

முதலில் ‘ஸைக்கிள்’ ‘கடிகாரம்’ ரிப்பேரில் ஆரம்பித்து, வரவர
‘மோட்டார் கண்டக்டர்’, ‘டிரைவர்’, பிறகு ‘மெக்கானிக்’ என்ற
பருவங்களைக் கடந்து, தமக்குத்தாமே சொந்தமாக வைத்துக்
கொண்ட மோட்டார் என்ஜினீயர் என்ற பட்டத்துடன் ‘ஒர்க் ஷாப்’
என்ற பெயருடைய ஒரு கொல்லப் பட்டடையை ஸ்தாபித்தார்.

இந்தப் பத்து வருஷங்களில் பத்தரைக் கையில் பிடிக்க முடியாது.
கையில் பணம் ஓட்டமிருந்தால் யாரும் அப்படித்தான்.
ஏறாத தாசி வீடு இல்லை; உடலில் வாங்காத வியாதி இல்லை.

இந்தக் காலத்தில்தான் பையன் கெட்டுப் போய்விடுவான்
என்று எண்ணி அவருடைய உறவினர்கள் கல்யாணமும் செய்து
வைத்தார்கள். அந்த அம்மாணி மூன்று வருஷத்தில் இரண்டு பெண்
குழந்தைகளைப் பத்தருக்கு ஒரு பொறுப்பாக வைத்துவிட்டுக்
காலமானாள்.

———————————————

உறவினர்கள், ராமசாமிப் பத்தரின் குடும்ப வாழ்க்கையில்
கவலைப்பட ஆரம்பிக்கு முன்னமே ‘ஒர்க் ஷாப்’ அவர்கள் தடுத்து
விடலாம் என நம்பியிருந்த அந்த நிலைமைக்கு வந்துவிட்டது.

எங்கே பார்த்தாலும் கடன். வேலைக்காரர் தொல்லை. வேலையும்
அவர் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாததனால்
மற்ற கம்பெனிகளைத் தேடிவிட்டன.

இந்த மாதிரி நிலைமை விரைவில் நீங்கிவிடும் என்ற
நம்பிக்கையிலேயே ஒரு பத்து வருஷம் கழிந்தது.

மனிதன் ஒரு நிலைமை வரையில்தான் பொறுத்துக் கொண்டு
இருக்க முடியும். தலைக்கு மேல் வெள்ளம் சென்றால்?

ஒரு சுப தினத்தில் ‘ஒர்க் ஷாப்’ கதவடைக்கப்பட்டது.
அடைத்ததனால் அவருடயை நிலைமை மேலோங்கி விடவில்லை.
‘செட்டி இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தான்’ என்ற கதைதான்.

கொஞ்சநாள், தம் வயசு வந்த பெண்களின் கதியை நோக்கிக்
கண்ணீர் விட்டுக்கொண்டு, ஊரைச்சுற்றி வந்தார். கடன் தொல்லை,
பெண்களின் பொறுப்பு, எல்லாம் சேர்ந்து அவரை நாற்பது
வயசிலேயே ஊக்கங்குன்றிய கிழவனாக்கிவிட்டன.

உடல் வன்மையாவது இருக்கிறதா? பழைய சல்லாப காலங்களில்
சேகரித்த ‘முதல்’ வீணாகப் போகவில்லை. மருந்து என்ற சிறிய
தடையுத்தரவிற்குப் பயந்து இத்தனை நாட்கள் பதுங்கியிருந்த
வியாதிகள் மீண்டும் உறவாட ஆரம்பித்தன.

******

‘இண்டோ -யூரோப்பியன் மோட்டார் மெக்கானிகல் ஒர்க்ஸ்’
முதலாளியான ராமானுஜலு நாயுடு அவருக்கு ஒரு பிட்டர் வேலை
கொடுத்தபொழுது, ‘அன்ன தாதா’ என்று அவரை மனமாரப்
புகழாமல் இருக்க முடியுமா?

நீரும் நானும் இந்த மாதிரி இரண்டு பெண் குழந்தைகளை
வைத்துக் கொண்டு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு
வேலையில்லாமல் திண்டாடியிருந்தால் அம்மாதிரித்தான்
புகழ்வோம்.

மாசம் 20 ரூபாய் சம்பளம். காலை 6 முதல் இரவு எப்பொழுது
பட்டடை அடைக்கப்படுகிறதோ அவ்வளவு நேரமும் வேலை.

இம்மாதிரி ஒரு வருஷம் கொஞ்ச நாட்கள் சற்றுக் கவலையற்ற
தரித்திரம். பொருளாதார மந்தம் என்று நீட்டி முழக்கிச் சாய்மான
நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அடித்து விளாசுகிறார்களே,
அதுவும் வந்தது. அதைப்பற்றிய தத்துவங்கள், காரணங்கள் எல்லாம்
உமக்கும் எனக்கும் பத்தி பத்தியாக நுணுக்கமாக எழுதத் தெரியும்;
பேசவும் தெரியும். ராமானுஜலு நாயுடுவுக்குத் தெரிந்ததுபோல்
நமக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

ராமானுஜலு நாயுடு நல்ல குணமுள்ளவர்தாம்.
சில சமயங்களில் ஐந்து பத்து முன்பின் யோசியாமல் கொடுத்து
உதவுகிறவர்தாம். ஆனால் பணம் சேர்ப்பதற்குத்தான் அவர்
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தாரே ஒழிய,
தொழிலாளிகளுக்குத் தர்மம் செய்து புண்ணியம் சம்பாதிக்க
வரவில்லை.

அவருடைய சிக்கனக் கத்தி விழுந்தது. பத்துப் பேர் வெளியே
போக வேண்டியிருந்தது. அதில் ராமசாமிப் பத்தரும் ஒருவர்.
கெஞ்சினார்கள்; கூத்தாடினார்கள். பத்து ரூபாய் – பாதி சம்பளம் –
கொடுத்தால் கூடப் போதும் என்றார்கள்.
ராமானுஜலு நாயுடு சத்திரம் கட்ட வரவில்லையே!

நல்ல பசுமாடு இருக்கிறது. வேளைக்கு இரண்டு படி பால்
கறக்கிறது. அதற்குப் பருத்தி விதை, தீனி என்ன? ராஜயோகந்தான்.
கண்ணும் கருத்துமாகத்தான் கவனிக்கிறோம்.

மாடு கிழடாகி, வறண்டு போய்விட்டால் வைத்துக் கொண்டு
கும்பிடவா செய்கிறோம்?

தோலின் விலைக்காவது தள்ளிவிடவில்லையா?
அதில் ராமானுஜலு நாயுடு செய்ததில் என்ன குற்றம்?
அது அப்படித்தான். அது நியாயந்தான். இப்பொழுது அதைத் தப்பு
என்று சொல்லுகிறவன் முட்டாள், பைத்தியக்காரன்.
—————————————-

ராமசாமிப் பத்தருக்குச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு
வரும்போது எதுவும் தோன்றவில்லை. நாலு நாள் சம்பளம்
எத்தனை நாட்களுக்குப் போதும்? பிறகு என்ன செய்வது? வேறு எ
ந்தக் கம்பெனியில் எடுப்பார்கள்? எடுத்தாலும் இந்தக் கதிதானே!

உலகமே ஓர் இதயமற்ற திருக்கூட்டம் என்று பட்டது. நெற்றிக்கண்
இருந்தால் எல்லாரையும் எரித்துச் சாம்பலாக்கியிருப்பார்.
இல்லாததனால் நேராகச் சாராயக் கடைக்குப் போனார்.

இனி என்ன செய்வது?

இனி என்னதான் செய்வது? எல்லாவற்றையும் தொலைத்து
விட்டுக் காவியைக் கட்டிக் கொண்டு பிச்சை எடுக்க வேண்டியதுதான்.
சீ! பிச்சையா! அதைப் போல கோழைத்தனம் உண்டா? நம்மைத்
திருடுகிற இந்தப் பயல்களைக் கொள்ளையடித்தால் எந்தத்
தர்மசாஸ்திரம் ஓட்டையாகப் போகிறது?

‘இரவு பத்துப் பதினொரு மணிக்கு ராமானுஜலு நாயுடு
தனியாகத் தான் கணக்குப் பார்த்துக் கொண்டு இருப்பார்.
ஒரு கை பார்த்தால் தான் என்ன?’

வீட்டிற்கு வந்து மிஞ்சி இருக்கிற சில்லறையைப் பெண்களிடம்
கொடுத்தார். கொடுத்தது, சாப்பிட்டது எல்லாம் மெஷின் மாதிரி.
மனசு அதில் லயித்துவிட்டது.

“என்ன அப்பா, இப்படி இருக்கே?” என்றதற்கு ஒன்றும் சொல்ல
முடியவில்லை.

திடீரென்று இருவரையும் கட்டிச் சேர்த்து முகத்தில் மாறி மாறி
முத்தமிட்டார். ஹிந்து சமுதாயத்தில் வயது வந்த பெண்களை
முத்தமிடத் தந்தைக்கு உரிமையே இல்லை.

இருவரும் திடுக்கிட்டார்கள். குடித்துவிட்டாரோ என்ற சந்தேகம்.
பயந்து நடுங்கினார்கள்.

“நமக்கு நல்ல காலம் வந்துவிட்டது. நாயுடு எனக்கு ஐம்பது
ரூபாயில் பட்டணத்தில் வேலை பார்த்துக் கொடுத்தார்.
வழிச்செலவிற்குப் பணம் ராத்திரி தருகிறேன் வா என்றிருக்கிறார்”
என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தமது தீர்மானத்தை
நிறைவேற்றப் புறப்பட்டார்.

எதிர்பார்த்தபடி நாயுடு தனியாகத்தான் இருந்தார்.

“வா ராமசாமி, நான் என்ன செய்யட்டும், நீதான் சொல்.
நீ இங்கே வருவதில் பிரயோஜனமில்லை” என்றார் நாயுடு.

எனக்கு நீங்கள் கொடுத்தது பத்தாது” என்றார் ராமசாமி. குரல்
வித்தியாசமாக இருந்தது.

குடித்துவிட்டு வந்திருக்கிறானோ என்று நாயுடு சந்தேகித்து,
“நீ நாளைக்கு வா” என்றார்.

“நாளைக்கா! பார் உன்னை என்ன செய்கிறேன்.
என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டாயே, திருட்டு ராஸ்கல்”
என்று அவர்மேல் பாய்ந்து மேஜையின் மேல் இருந்த
நோட்டுக்களில் கையை வைத்தார்.

நாயுடு மட்டும் தனியாக இருந்தது உண்மைதான்.
அதற்காக உலகமே நடமாட்டமற்றுப் போய்விடுமா?
ராமசாமி வெகு லேசாகப் பிடிபட்டார்.

நாயுடுவிற்கு அசாத்தியக் கோபம். “உண்ட வீட்டில் கெண்டி
தூக்கிய பயலை விடுகிறேனா பார்” என்றார்.

விவரிப்பானேன்?

பலவந்தத் திருட்டுக் கேஸாகியது. ஆறுமாசக் கடுங்காவல்.

பத்தர் பாடு கவலையற்ற சாப்பாடு.
எந்தத் தொழிலாளர் சங்கம் திருட்டுத் தொழிலாளியின்
குடும்பத்திற்கு இந்தமாதிரி உதவி செய்ய முடியும்? நியாயமான
உலகமல்லவா?

பெண்களின் நிலைமையைப் பற்றி எழுதக் கூசுகிறது.

ஜன்மாந்திர விதி என்ற ஒரு மகத்தான காரணத்தைக் கண்டு
பிடித்த ஹிந்து சமுதாயத்தில் இது இயற்கைதானே?

———————————–
அழியாசுடர்கள் வலைதளத்தில் வலையேற்றியது:
RAMPRASATH HARIHARAN

https://ta.wikisource.org/wiki/

இன்று ஒரு தகவல் !!! சிந்தனைக்கு …..தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க
4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்
,”சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன
வழின்னு” கேட்டாங்க.

அதுக்கு அந்த முனிவர் “தெரியலயப்பான்னு” ஒத்த வரில
பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம.
“என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத்
தெரியலைன்னு சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க.

அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான்உங்கள
ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன்.
போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன்.

அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து
தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளி
விட்டுடும்” அப்டின்னாரு.

சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக
விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி ,
குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு
தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப்
பக்கமா வர ஆரம்பிச்சிச்சி.

இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு
பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி.
மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி
அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும்
குடுத்திச்சி.

அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம்.
இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு
வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர்
இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர்
“இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம
போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம்
கீழ தள்ளிவிட்டுடுச்சு.

அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,”ஏம்பா உன் கருத்து
என்னன்னு?”, ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு,
” இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே
மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு.

ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு.
இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப
உசாரா சொன்னான்,

“ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு”. ஒடனே அவனையும்
அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில
இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,

“ஏம்பா உன் கருத்து என்னன்னு”, அதுக்கு அவன் ,”தெரியலயே
சாமின்னு”, சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம்
கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம்
செய்ய ஆரம்பிச்சிச்சி.

இந்தக் கதையால வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு
எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும்
தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது
அனாவசியம்,

அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு
தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத
விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.

—————————————

எப்படி அவளைக் கொலை செய்வது – சிறுகதை

20180527_082855.jpg

நிதானம்! – சிறுவர் கதை

SM15
சந்திர தேவ் மகரிஷியிடம் அருணனும், பால கோவிந்தும்
சீடர்களாக இருந்தனர். இருவரும் பலசாலிகள்! புத்திசாலிகள்!

இருப்பினும் பால கோவிந்த் சற்று நிதானமானவன்.
அருணனோ துடுக்குத்தனம் நிறைந்தவன்!…

பால கோவிந்தைவிட தான் கெட்டிக்காரன் என்று நிரூபிக்க
வேண்டும் என்று அருணன் விரும்பினான். பாலகோவிந்தோ
எப்போதும் புன்சிரிப்புடன் தன் கடமையைச் செய்துவந்தான்.

சந்திர தேவ் மகரிஷி இதை அறிந்துகொண்டார்.

ஒருநாள் அவர், “”ஹே,… அருணா!…ஹே….பாலகோவிந்த்!…
.இருவரும் இங்கே வாருங்கள்!…” என சீடர்களை அழைத்தார்.
இருவரும் அவர் முன் வந்து நின்றனர்.

“”எனக்கு இன்று ஏனோ அதிகமாகப் பசிக்கிறது……அ
தோ! அந்த மரத்திலிருந்து
பழங்களைப் பறித்துவாருங்கள்…” என்றார்.

உடனே அருணனும், பாலகோவிந்தும் பழங்களைப் பறிக்க
விரைந்தனர். ஆனால் மரத்தை நெருங்க முடியவில்லை…
.மரத்தைச் சுற்றி முட்புதர்கள் இருந்தன.

எப்படியும் ரிஷியிடம் நற்பெயர் வாங்கிவிட வேண்டும் என
நினைத்த அருணன் சற்றே பின்னோக்கி வந்து பின்னர்
முன்னோக்கி வேகமாக ஒடிக் குதித்து மரத்தைப் பிடித்துக்
கொண்டு ஏறிவிட்டான். பழங்களை முடிந்த அளவுக்குப்
பறித்தான். பின் மரத்திலிருந்து குதித்தான் முட்புதரினால்
உடலில் காயங்கள் ஏற்பட்டன. அதைப் பொருட்படுத்தாமல்
வேகமாக ஓடி குருவிடம் பழங்களை அளித்தான்.

பாலகோவிந்தோ, ஒரு அரிவாளை எடுத்து வந்து
முட்செடிகளை வெட்டினான்.

மரத்தின் அருகே செல்லும்படி வசதி செய்தான். இதற்கு சில
நிமிடங்கள் ஆகிவிட்டன….அப்போது சில வழிப்போக்கர்கள்
வந்தனர். அவர்கள் மரத்தை பாலகோவிந்த அமைத்த பாதை
வழியே மரத்தை அடைந்தனர்.

பழங்களைப் பறித்துச் சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து
இளைப்பாறினர். பாலகோவிந்தும் சில பழங்களைப் பறித்துக்
கொண்டான். பறித்த பழங்களை சந்திரதேவ் மகரிஷியிடம்
தந்தான்.

அருணன் கொடுத்த பழங்களைச் சாப்பிட்டுக்
கொண்டிருந்தார் ரிஷி! அருணனுக்குப் பெருமை
பிடிபடவில்லை!

மகரிஷி அருணைப் பார்த்து, “”உன் வேகமும்,, சாமர்த்தியமும்
அருமை! ஆனால் நீ மிகவும் அவசரபுத்தியுடன் செயல்
பட்டிருக்கிறாய்….உடலில் காயம் வேறு! …. பாலகோவிந்தைப் பார்….
அவன் பொறுமையினால் எனக்கு மட்டுமல்ல….
வழிப்போக்கர்களுக்கும் அல்லவா பசியாற்றிவிட்டான்!…

பொறுமையின் பயன் பலரைச் சென்று அடையும்…அருணா,
குழந்தாய்!…வெறும் வேகம் மட்டும் போதாது! சற்றே நிதானமாக
சிந்தித்து செயல் படுவாய்!”

அருணனுக்கு இப்போதெல்லாம் பால கோவிந்தனிடம்
பொறாமை என்பதே இல்லை. இருவரும் மிகச் சிறந்த
சீடர்களாக புன்சிரிப்புடன் கல்வி கற்கின்றனர்.
புன்னகையுடன் பணிகளைச் செய்கின்றனர்.

—————————————
By – சி.பன்னீர்செல்வம்
சிறுவர் மணி

மதிப்பு குறைவதில்லை – சூஃபி கதை

IMG_1782.jpg

IMG_1783.jpg

பார்வையை விரிவுபடுத்துங்கள் – புதிய முயற்சியினால் வெற்றி நிச்சயம்!!

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி
தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில்
யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க
அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான்.

“யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு
விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை
நிர்வகிக்கத் தகுதியானவன்” என்று அறிவித்தான்.

“மொட்டை அடித்துள்ள புத்த பிச்சுகளிடம் சீப்பு
வியாபாரமா?” என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில்
திகைத்தனர். “ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே!”
என்று நினைத்தனர்.

ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு
செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த
சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது
முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு
வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன், “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு
விற்றேன்” என்றான். வியாபாரி, “எப்படி?” எனக் கேட்டான்.
“புத்த பிச்சுகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும்
உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன்.

இரண்டு புத்த பிச்சுகளுக்கு அது சரியென்றுபட்டது.
அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள்
வாங்கினார்கள்” என விளக்கினான்.

இன்னொரு மகன்,
“நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்” என்றான்.
வியாபாரி ஆச்சரியத்துடன், “எப்படி?” என கேட்டான்.
“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல்
உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போகிறவர்கள்
தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது.

அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க
பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும்
அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த
மடாலயத்தில் சொன்னேன்.

ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால்
அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு
புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்ற
ஆலோசனையும் சொன்னேன்.

ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”
என்றான். வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.

மூன்றாம் மகன், “நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை
செய்தேன்” என்றான். வியாபாரி ஆச்சரியத்தின்
எல்லைக்கே சென்றான். “எப்படி?” எனக் கேட்டான்.

“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து
பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி
புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம்
அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால்
அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத்
தூண்ட உதவும் என்றேன்.

அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலாம்
என்று மடாலயத் தலைவர் என்னை கேட்டார்.
நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில
சீப்புகளை நீட்டினேன்.

அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு
அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும்
கிடைக்கும். அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும்
வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன்.

அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர்
உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம்
சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்” என விளக்கினான்.

மொட்டை பிச்சுகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக
ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம்
காணக்கூடிய மனோபாவம். சில சமயங்களில் நம்மைக்
கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட
இதே போலத் தான் இருக்கும்.

அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில்
தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி
நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு
விட்டோம் என்பது பொருள். எனவே எந்தவொரு கடினமான
சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள்.

முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு
அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள்.
புதிய கோணங்களில் சிந்தியுங்கள்.

சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த
முடியுமா என்று யோசியுங்கள். பொறுமையுடனும்,
நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக்
கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும்
அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.

———————————
படித்ததில் பிடித்தது

சிங்கமும் நரியும்:பஞ்ச தந்திர கதை

The Old Lion and the Fox

நீதிக்கதை

ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன.
அதில் ஒரு சிங்கமும், நரியும் வெகு நாளாக உணவின்றி
அலைந்து திரிந்து கொண்டிருந்தன.

ஒரு நாள் இரண்டும் நேருக்கு நேர் சந்தித்து தத்தமது
நிலைமையை புலம்பிக் கொண்டன.

இறுதியாக இரண்டும்
சேர்ந்து வேட்டையாடுவது என்ற முடிவுக்கு வந்தன.

அதற்கு சிங்கம் ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தது.
அதாவது, நரி பலமாக சத்தம் போட்டு கத்த வேண்டும்.
அந்த சத்தத்தைக் கேட்டதும் காட்டு விலங்குகள் மிரண்டு
அங்கும் இங்கும் ஓடும்.

அப்படி ஓடும் மிருகங்களை சிங்கம் அடித்துக் கொல்ல
வேண்டும்.

இந்த யோசனை நரிக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதனால் உடனே ஒப்புக் கொண்டது. அதன்படி, நரி தனது
பயங்கரமான குரலில் கத்தத் துவங்கியது.

அதன் விசித்திரமான சத்தத்தைக் கேட்ட காட்டு விலங்குகள்
அங்கும் இங்கும் வேகமாக ஓடின.
அந்த சமயத்தில் சிங்கம் நின்றிருந்த பக்கம் வந்த
விலங்குகளை எல்லாம் சிங்கம் வேட்டையாடிக் கொன்றது.

ஒரு கட்டத்தில் நரி கத்துவதை நிறுத்தி விட்டு சிங்கத்தின்
பக்கம் வந்தது. அங்கு வந்ததும் நரிக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.
ஏனெனில் நிறைய மிருகங்கள் அங்கு இறந்து கிடந்தன.

அதைப் பார்த்ததும் நரி, தான் அகோரமாகக் கத்தியதால்தான்
இந்த மிருகங்கள் இறந்துவிட்டன என்று கர்வம் கொண்டது.
சிங்கத்தின் அருகில் வந்து, என்னுடைய வேலையைப் பற்றி
என்ன நினைக்கிறாய்.. நான் கத்தியே இத்தனை மிருகங்களை
கொன்றுவிட்டேன் பார்த்தாயா என்று கர்வத்துடன் கேட்டது.

அதற்கு சிங்கம்..
ஆமாம்.. உன் வேலையைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?
நீதான் கத்துகிறாய் என்று தெரியாமல் இருந்திருந்தால்
ஒரு வேளை நானும் பயத்திலேயே செத்துப் போயிருப்பேன்
என்று பாராட்டியது

————————————–

« Older entries