ஓம் சரவண பவ

ஓம் சரவண பவ  Main-qimg-2a464650aefdb627df08e568583f40cf-lq

அருள் வடிவாய் ஆறுமுகம் துன்பமெல்லாம் போக்குதே

நூறு முகம் ஆகி வந்து இன்பமெல்லாம் சேர்க்குதே

ஈராறு கரமும் ஒன்று சேர்ந்து மாய வினைகள் அழிக்குதே

கந்தன் பெயரை சொல்லி சொல்லி மனங்கள் எல்லாம் வாழ்த்துதே

மாயவனோ தூயவனோ மன மயக்கம் நாயகனோ

மாமயில் மேல் ஏறி வரும் மங்கை வள்ளி காதலனோ

கோடி கோடி கண்கள் காண கோமகனாய் வாழ்பவனோ

அச்சம் தீர்த்து அபயம் தந்து ஆண்டருள் தான் செய்பவனோ

அழகன் முருகன் பெயரை சொன்னால் கவலை எல்லாம் போகுதே

அவன் அன்பில் தோய்ந்த அருளினாலே நெஞ்சம் மலராய் பூக்குதே

பாத நிழலின் குளுமையாலே வாழ்வில் சாந்தி தோன்றுதே

அவன் காவல் தந்த துணிவுனாலே அருமை இன்பம் காணுதே.

படித்ததில் பிடித்தது.

;நன்றி-தமிழ் கோரா

முருகனின் ஒரு படை வீட்டில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை ஏன் தெரியுமா?

பிரசித்தி பெற்ற அனைத்து முருகன் தலங்களிலும்
கந்த சஷ்டித் திருவிழாவின் ஆறாம் நாளில்
சூரசம்ஹாரம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு
வருகின்றது.

இந்நிலையில், முருகப்பெருமானின் ஒரு படைவீடு மட்டும்
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக
இருக்கிறதென்றால் அது வியக்குரியது அல்லவா?

அந்தத் திருத்தலம் தான் திருத்தணிகை!

ஆம் முருகப்பெருமான் சினம் தணிந்து சாந்த
ஸ்சொரூபமாகி அமர்ந்த தலம் என்பதால், அங்கே
சூரசம்ஹாரம் நிகழ்த்துவதில்லை.

சினம் தணிந்து அமர்ந்த காரணத்தினால்தான்,
முருகப்பெருமானைத் தரிசிக்கும்போது நம்முடைய
வல்வினைகள், பிணிகள் அனைத்தும் தணிந்து
போகும் என்பதாலும் இது தணிகை என்று பெயர்
பெற்றதாகவும் கூறுவர்.

புகழ்பெற்ற முருகன் திருத்தலமான திருத்தணிகை
கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள்
மூலவரை தரிசித்துச் செல்கின்றனர்.

முருகப்பெருமானின் சினம் தணிந்து அருளும் தலம்
என்பதால் தான் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம்
திருவிழா நடைபெறுவதில்லை.

சூரசம்ஹாரம் நடைபெறாமல் கந்த சஷ்டி விழா
கொண்டாடப்படுகிறது.
விழாவின் கடைசி நாள் மட்டும் வள்ளி திருமணம்

சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது.

==================================
தினமணி

`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!

தேவர்களின் துன்பம் போக்க அவதரித்த சிவபாலன், சிவசக்தி வேலன் ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும், திருக்கரங்களில் பலதரப்பட்ட ஆயுதங்களும் கொண்டு அருட்காட்சி தருகின்றார்.

தணிகைப் புராணம், குமாரதந்திரம், திருப்புகழ்,  ஸ்ரீதத்வநிதி, அகத்தியர் அருள்பெறு படலம், தியான ரத்னாவளி போன்ற நூல்கள் முருகப்பெருமானின் ஆயுதங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளன. பன்னிரு கரங்களை உடைய கடவுள் என்பதால் முருகனுக்கே பல்வேறு ஆயுதங்கள் போர்க்கருவிகளாக அமைந்துள்ளது.

குறிப்பாக முருகனின் ஆயுதங்களில் வேலுக்குத் தனிச் சிறப்பு உண்டு. முருகப் பெருமானின் திருக்கை வேலே முருகனின் வடிவமாகவும் போற்றித் துதிக்கப்படுகிறது. முருகப் பெருமானின் திருக்கரங்களை அலங்கரிக்கும் ஆயுதங்களைப் பற்றி பார்ப்போம்.

முருகப்பெருமானின் ஆயுதங்கள்
சக்தி வேல் – முருகனின் ஆயுதங்களில் முதன்மையான இடம் வேலுக்குத்தான் உண்டு. காரணம், அன்னை பராசக்தி தன் சக்தி முழுவதையும் ஆவாஹணம் செய்து, முருகப் பெருமானுக்குக் கொடுத்த காரணத்தினால், சக்திவேல் என்று சிறப்பிக்கப்படுகிறது.

இன்றைக்கும் கந்த சஷ்டி சூரசம்ஹார வைபவத்தின்போது, அம்பிகை முருகனுக்கு சக்திவேல் வழங்கும் வைபவம் சிக்கலில் நடைபெறுகின்றது.

அங்குசம் –  அங்குசம் என்பது சிறிய ஆயுதம்தான். ஆனால், அந்தச் சிறு ஆயுதமே, மிகப் பெரிய யானையை அடக்கி ஆள்கிறது. அதைப்போல் மும்மலங்களால் (ஆணவம், கண்மம், மாயை)  மதம் பிடித்துத் திரியும் நம்மையெல்லாம் அடக்கி ஆள்வதற்கே முருகப் பெருமானின் திருக்கரத்தில் இருக்கும் அங்குசம் உணர்த்துகிறது.

முருகப்பெருமானின் ஆயுதங்கள்

பாசம் – பகைவர்களின் உடலைக் கட்ட உதவும் கயிறு இது.

பகைவர்களின் உடலை மட்டுமல்ல, புலன்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லும் நம் மனதைக் கட்டி அடக்கும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

வில் – குறிஞ்சி நிலக்கடவுளான முருகப்பெருமான், வேடனாக வந்து வள்ளியை ஆட்கொண்டபோது தாங்கிய வில் ஒரு முக்கிய ஆயுதமாக உள்ளது.

தரிசித்தவர் நெஞ்சில் ஆழமாக தைக்கும் அற்புத வில் என்று ஆன்மிகப் பெரியோர்கள் இந்த வில்லைக் குறிப்பிடுவர்.

அம்பு – வில்லிருந்தால் அம்பு இல்லாமலா? கழுகின் இறகினைக் கட்டிய அம்பு முருகப்பெருமானின் கரங்களில் உள்ளது. இது குற்றங்களைத் தைத்து செல்லக்கூடியது.

முருகப்பெருமானின் ஆயுதங்கள்

கத்தி – தேவசேனாபதியின் கம்பீர அடையாளமாக கத்தி உள்ளது. இடுப்பில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கத்தி வீரபாகுவின் பரிசு என்பார்கள்.

கேடயம் – எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவுவது கேடயம். தன்னை நம்பிச் சரணடைந்தவர்களைக் காப்பாற்றும் கேடயமாகத் திகழும் முருகப் பெருமானின் திருக்கரங்களில் கேடயம் இருப்பது பொருத்தம்தானே!

வாள் – முருகப் பெருமானின் வீரத்தின் வெளிப்பாடாகத் திகழும் நீண்ட வாளுக்குக் கட்டுவாங்கம் என்று பெயர். இந்த வாள் அனைத்துத் துயரங்களையும் அறுக்கவல்லது.

சூலம் – சிவனாரின் ஆயுதமான சூலத்தை முருகனும் தங்கியுள்ளார்.

ஆணவம், கன்மம், மாயை என்னும் தீயவைகளைச் சாய்க்க சூலத்தின் மூன்று கூர்முனைகளும் தயாராக இருக்கின்றன என்பதை சூலம் உணர்த்துகிறது.

கரும்பு வில் – மன்மதனைப்போலவும், அன்னை காமாட்சியைப்போலவும் முருகப்பெருமான் கரும்பு வில்லைத் தாங்கியுள்ளார். போகசக்தியின் வடிவாகவே இதைத் தாங்கியுள்ளார்.

மலரம்பு – கரும்பு வில்லுக்குத் துணை இது. மலரம்பு கொண்டு மனம் கவர்ந்தவர்களைத் தாக்கித் தன்வசப்படுத்திக் கொள்பவர் முருகப்பெருமான்.

கதை – திருமால் தாங்கும் கதை, முருகப்பெருமானின் கையில் திகிரி என்ற பெயரில் உள்ளது. எதையும் சுக்குநூறாக உடைக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது.

சங்கு – வெற்றி நாதம் எழுப்பும் சங்கு முருகப்பெருமானின் அவசியமான ஆயுதமாக உள்ளது.

முருகப்பெருமானின் ஆயுதங்கள்

சக்கரம் – விஷ்ணுவின் சக்கராயுதத்தை முருகப்பெருமான் ஏந்தியுள்ளார். உண்மையில் விஷ்ணுவுக்கு முன்பே முருகன்தான் சக்கரம் கொண்டிருந்தார் என்று திருத்தணிகை புராணம் கூறுகிறது.

கும்பகோணம் அருகேயுள்ள அரிசிற்கரைபுத்தூர் தலத்திலுள்ள முருகப் பெருமான் சக்கரம் ஏந்தியுள்ளார்.

வஜ்ரம் – இந்திரனின் வஜ்ராயுதத்தையும் முருகப்பெருமான்  தாங்கியுள்ளார். ஆயிரம் கூர் முனைகளைக் கொண்ட இது எதையும் குத்திக் கிழிக்க வல்லது.

முருகப்பெருமான்

தண்டம் – நீளமான இந்தக் கைத்தடி எதையும் தாக்கும் திறன் கொண்டது. தண்டாயுதபாணி வடிவமே அற்புதமானது அல்லவா!

உலக்கை – தோமரம் என்ற உலக்கையைத் தாங்கிய கோலத்தை சூரபத்மனை சம்ஹரித்த தாரகாரி வடிவத்தில் காணலாம்.

தீமைகளை அழிக்க இத்தனை படைக்கலன்களை முருகப்பெருமான்  தாங்கினாலும், அவன் பக்தர்களை அன்பு செய்து அடைக்கலம் தருவது அபய, வரக் கரங்களினால்தான். எனவே ‘யாமிருக்க பயமேன்’ என்று சொன்ன முருகன் உள்ளவரை நமக்கென்ன கவலை?


மு.ஹரி காமராஜ்
நன்றி- விகடன்

 

என்றென்றும் வெற்றி!

முருகப்பெருமானின் ஆயுதங்கள்

என்றென்றும் வெற்றி!

சிவனின் மறுவடிவே முருகன்.
பாம்பன் சுவாமிகள் ‘அறுமுகச் சிவனார்’
என்றே முருகனை சிவனாகவே தன்
பாடல்களில் குறிப்பிடுகிறார்.

தாயான பார்வதியும் முருகனை விட்டு
அகலுவதில்லை. சூரபத்மனை வெல்ல
போருக்கு புறப்பட்ட போது முருகன்,
தாயிடம் ஆசி பெற்றார்.

அப்போது பார்வதி தன் சக்தியையெல்லாம்
ஒன்று திரட்டி வேலாகத் தந்தாள். ‘சக்திவேல்’
இன்றி முருகன் தனித்து காட்சி தருவதில்லை.

சக்திவேல் தாங்கிய முருகனே சூரசம்ஹாரத்தை
வெற்றியுடன் முடித்தார்.
அவரைச் சரணடைந்தால் என்றென்றும் வெற்றியே
சேரும்.

—————————————-

தினமலர்

முருகனின் முற்பிறவி ரகசியம்

முருகன் கோயில்கள் க்கான பட முடிவு

முருகன் எப்படி அவதரித்தார் என்பது குறித்து
காஞ்சிப்பெரியவர், ‘திரிபுரா ரகஸ்யம்’ என்ற நுாலில்
மேற்கோள் காட்டியுள்ளார்.

பிரம்மாவின் புத்திரர் சனத்குமாரர்.
இவர் ஒருமுறை அசுரர்களுடன் போர் புரிந்து வெல்வது
போல கனவு கண்டார். இது பற்றி தந்தை பிரம்மாவிடம்
விளக்கம் கேட்டார்.

“முற்பிறவியில் அசுரர்களின் அட்டகாசத்தைக் கண்ட நீ
அவர்களை ஒழிக்க முடிவெடுத்தாய். அதுவே கனவாக
வெளிப்பட்டது. எல்லா உயிர்களையும் தெய்வமாக
நீ கருதுவதால் போர் புரிய மாட்டாய்.

அடுத்த பிறவியில் கனவு பலிக்கும்” என்றார். இப்படிப்பட்ட
ஞானியான சனத்குமாரிடம் வேண்டும் வரம் அருள்வதாக
சிவபார்வதி தெரிவித்தனர்.

”வரம் பெற்று பிழைக்கும் தேவை எனக்கில்லை.
வேண்டுமானால் நான் வரம் தருகிறேன்,” என்றார்.
ஆசை துளியும் இல்லாத சனத்குமாரரைக் கண்டு மகிழ்ந்த
சிவன் “அப்படியானால்… ஞானியான நீ எனக்கு
குழந்தையாகப் பிறக்க வேண்டும்” என்றார்.

‘சரி..’என்று ஒப்புக்கொண்ட சனத்குமாரர் அதிலும் ஒரு
புள்ளி வைத்தார். “சிவனே! நீர் மட்டும் தான் என்னை
பிள்ளையாகப் பிறக்கக் கேட்டீர். எனவே, தாயின்
சம்பந்தமின்றி பிறப்பேன்” என்றார்.

இதையறிந்த பார்வதி வருந்தினாள். அதற்கு சிவன்,
“கவலை வேண்டாம்! பஸ்மாசுரன் என்பவன் யார் மீது கை
வைத்தாலும் அவர்கள் சாம்பலாகும் வரத்தை பெற்றான்.

அதைச் சோதிக்க என் தலையிலேயே கை வைக்க
முயற்சிக்கவே, நான் மறைந்தேன். என்னைக் காணாத
சோகத்தில் தண்ணீராக உருகிய நீ பொய்கையாக
மாறினாய். அதுவே இப்போது சரவணப்பொய்கையாக
இருக்கிறது.

நெற்றிக்கண் மூலம் நான் சனத்குமாரனை
தீப்பொறிகளாக உண்டாக்குவேன். அத்தீயை தாங்கும்
சக்தி அந்த பொய்கைக்கு மட்டுமே உண்டு.

சரவணப்பொய்கையில் தாங்கும் போது உனது
சம்பந்தமும் பிள்ளைக்கு வந்து விடும்” என்றார்.
அதன்படியே சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து
முருகன் அவதரிக்க சரவணப் பொய்கையாக
தாங்கினாள் பார்வதி.

தினமலர்

அறுபடை வீடு கொண்ட திருமுருகா-

திருப்பரங்குன்றம் :

ஆறுபடை வீடுகளில் முதல்தலம் திருப்பரங்குன்றம்.
தெய்வானை- முருகனின் திருமணத்தலம் இது.

பூதங்களிடம் சிக்கிய புலவர்களை மீட்க நக்கீரர்
திருமுருகாற்றுப்படை பாடலை இங்கு பாடினார்.

முருகனின் வேலால் வெளிப்பட்ட காசிச்சுனை மலை
மீது உள்ளது.
மணக்கோல முருகனாக அருள்வதால் வழிபடுவோருக்கு
நல்ல மணவாழ்வு அமையும்.

————————————————

திருச்செந்துார்

இரண்டாம் படைவீடான இது கடற்கரைத் தலம்.
சூரபத்மனின் வரலாற்றை வியாழபகவான் மூலமாக
கேட்டறிந்தார் முருகன்.

வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் சூரசம்ஹாரத்தில்
முருகனுக்கு உதவினர். சுகப்பிரம்ம முனிவர் இங்கு
வழிபட்டு பலன் பெற்றார்.

முருகன் வேலினால் உண்டாக்கிய கந்தபுஷ்கரணி
நாழிக்கிணறு தீர்த்தம் சிறப்பானது.

—————————————

பழநி

மூன்றாம் படைவீடு பழநி.
திருஆவினன்குடி என்பது புராணப்பெயர்.

சூரபத்மனின் குருநாதரான இடும்பாசுரன், பொதிகை
மலையில் வாழ்ந்த அகத்தியரின் சீடராக இருந்தான்.

அவனால் காவடியாக சுமந்து வரப்பட்ட சிவகிரி, சக்திகிரி
மலைகளே பழநியில் இருக்கின்றன. இதனால் காவடி
வழிபாடு பிரசித்தம். முருகன் ஆண்டிக் கோலத்தில் அ
ருள்கிறார்.

—————————————–

சுவாமிமலை

‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத
பிரம்மாவை சிறையிலிட்டார் முருகன். மந்திரத்தின்
பொருள் தனக்கும் தெரியாதது போல சிவன் நடிக்க,
முருகன் தன் தந்தைக்கும் அதன் பொருளை எடுத்துச்
சொன்னார்.

இதனால் ‘தகப்பன் சுவாமி’யாக சுவாமிமலையில்
அருள்கிறார். மாணவர்கள் வியாழனன்று இங்கு வழிபட
படிப்பில் சிறந்து விளங்குவர்.

—————————————

திருத்தணி

‘மலைகளில் சிறந்தது தணிகை மலை’ என்கிறது
கந்த புராணம். திருச்செந்துாரில் சூரனுடன் போர்
செய்த முருகன், இங்கு வந்து கோபம் தணிந்தார்.

குறமகளான வள்ளியை காதல் மணம் புரிந்த தலம் இது.
புராண காலத்தில் ‘செருத்தணி’ என வழங்கப்பட்ட
இத்தலம் திருத்தணியாக மாறியது.

‘செருத்தணி’ என்றால் ‘கோபம் தணிந்த இடம்’ என
பொருள்.

——————————————

சோலைமலை

கனிந்தபழம் உதிரும் சோலை நிறைந்த மலை
சோலைமலை. இங்கு மும்மூர்த்தியாக இருந்து முருகன்
உலகத்தை இயக்குவதாக திருப்புகழ் குறிப்பிடுகிறது.

நாவல் மரத்தடியில் அவ்வையார் முன் சிறுவனாக வந்த
முருகன் திருவிளையாடல் புரிந்தார்.
ஆறாவது படைவீடான இங்கு வள்ளி, தெய்வானையுடன்
முருகப்பெருமான் அருள்புரிகிறார்.

—————————————–
தினமலர்

பார்வை ஒன்றே போதுமே!

முருகன் கோயில்கள் க்கான பட முடிவு
பார்வை ஒன்றே போதுமே!

‘பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை
நீ பார்த்தாலே போதும்’ ‘பன்னிரண்டு கண்களிலே
ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும்
இன்பஒளி உண்டாகும்’ என்றெல்லாம்
கவிஞர்கள் முருகனை போற்றியுள்ளனர்.

இந்த வரிகளுக்கு ஆதாரமானவர் யார் தெரியுமா?
ஆதிசங்கரர்! இவர் உடல்நலம் குன்றியபோது முருகன்
மீது சுப்பிரமணிய புஜங்கம் என்னும் ஸ்தோத்திரம்
பாடினார்.

அதில் ஒரு ஸ்லோகத்தில், “இரக்கமுள்ள ஆறுமுகனே!
உன் தாமரை முகங்கள் ஆறிலும் கருணை பொழியும்
பன்னிரண்டு கண்கள் உள்ளன. என் குறைகள் போக்க
நீ அத்தனை கண்களாலும் பார்க்கத் தேவையில்லை.

ஒருவிழியால் பார்த்தால் போதும்.. அப்படி பார்ப்பதால்
உனக்கு என்ன குறை நேரப் போகிறது?” எனக் கேட்டார்.

-தினமலர்

 

கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன

வேலுண்டு வினையில்லை.....மயிலுக்கு பயமில்லை...
கந்தகுருகவசம் காட்டும் தலங்கள்

சாந்தானந்தர் பாடிய கந்தகுரு கவசத்தில் 28 முருகன்
கோயில்கள் இடம் பெற்றுள்ளன

1.சுவாமிமலை
2. திருச்செந்துார்
3. திருமுருகன்பூண்டி (கோவை)
4. திருமலைக்கோவில் (செங்கோட்டை)
5. திருவண்ணாமலை (கம்பத்திளையனார்)
6. திருப்பரங்குன்றம்
7. திருத்தணி8. எட்டுக்குடி (நாகை)
9. போரூர் (காஞ்சி)
10. திருச்செங்கோடு

11. சிக்கல் (நாகை)
12. குன்றக்குடி
13. குமரகிரி (சேலம்)
14. பச்சைமலை
(கோபி செட்டிபாளையம் அருகே மொடச்சூர்)
15. பவளமலை (கோபி செட்டிபாளையம்)
16. விராலிமலை
17. வயலுார்
18. வெண்ணெய்மலை (கரூர்)
19. கதிர்காமம் (இலங்கை)

20. காந்தமலை (நாமக்கல்)
21. மயிலம் (விழுப்புரம்)
22. கஞ்சமலை (சேலம்)
23. முத்துக்குமரன் மலை (வேலுார் ஒக்கனாபுரம்)
24. வள்ளிமலை (வேலுார்)
25. வடபழநி26. ஏழுமலை
(திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியுள்ளார்)
27. தத்தகிரி (சேலம்)
28. கந்தகிரி (நாமக்கல்)

————————————-
தினமலர்

இன்று கந்த சஷ்டி !


குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, 
கடன் தொல்லை நீங்கவும் கந்த சஷ்டி விரதத்தை 
கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி.
இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால்
கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.

எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும்
சிறந்த விரதமாகும். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும்,
வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை
கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்களும் எவ்வித அன்ன
ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும்,
பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு
(பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள்
முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும்
ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை
மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

ஐந்து நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள்
ஆறாம் நாளான இன்று மட்டுமாவது விரதம் இருந்து
முருகப்பெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள்
பறந்தோடும்.

இன்று காலையில் எழுந்து நீராடி முருகப்பெருமானுக்கு
பூ போட்டு சஷ்டி கவசம் பாடி விரதத்தை தொடங்க
வேண்டும். இன்று முழுவதும் மௌன விரதம் இருந்து
உணவு அருந்தாமல் மாலையில் முருகன் கோவிலில்
நடக்கும்

சூரசம்ஹாரத்தை கண்டு வழிபாடு செய்த பின்னர்
விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்
.
இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களின் வேண்டுதல்களை
முருகப்பெருமான் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்பது
பக்தர்களின் அசைக்க கூடியாத நம்பிக்கை.

நன்றி மாலைமலர்

திருச்சீரலைவாய்’



கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்துாருக்கு பலமுறை சென்று,
சூரனை, வேலன் வெல்லும் சூரசம்ஹார காட்சியைத்
தரிசித்திருப்பீர்கள்.

சூரனுக்கு சாகா வரம் அளித்து, அவனை ஆட்கொண்டது போல,
நம்மையும் ஆட்கொள்வார் என்று நம்பியிருப்பீர்.

சம்ஹாரம் என்பதில், ‘சம்’ என்றால், அழகு என்று பொருள்.
‘ஹாரம்’ என்றால் மாலை. சூரனை, தன்னுடன் மாலை போல்
சூடிக் கொண்டவர் அல்லது சூரனை வென்று, தெய்வானைக்கு
மாலை சூடியவர் என்றெல்லாம் அறிந்திருப்பீர்

ஆனால், செந்துாரானின் அருளை, அவனது கொடி மரமே
பெற்றுத் தந்து விடும் என்பதை, நீங்கள் அறிவீர்களா!

மனித உடம்பில் உள்ள, ஆறு ஆதாரங்களின் அடிப்படையில்,
அதற்குரிய ஆறு தலங்களை, யோகிகள் உருவாக்கி அமைத்தனர்.

அதில், முருகனின் படை வீடுகளில் திருச்செந்துார் இரண்டாவது
இடமாக திகழ்கிறது.

நக்கீரர் இயற்றிய, ‘திருமுருகாற்றுப் படை’ நுாலில், இத்தலத்தை
, ‘திருச்சீரலைவாய்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சீராக அலைகள் வந்து மோதுமிடம் இது.

அரசன், படைகளோடு தங்குமிடமே, படை வீடு. அந்த வகையில்,
முருகன், சூரசம்ஹாரம் செய்வதற்காக, படையோடு தங்கிய
தலம் இது.

‘ஜெயம்’ என்பதற்கு, வெற்றி என்று பொருள். போர் நிகழ்த்திய
முருகன், இங்கு வெற்றி பெற்றதால், திருச்செந்துாருக்கு,
‘ஜெயந்திபுரம்’ என்று பெயர் இருந்தது.

‘ஜெயந்திபுர மகாத்மியம்’ என்ற நுாலில், இத்தலத்தின் மகிமை
வரையறுக்கப்பட்டுள்ளது.

முருகனைத் தரிசித்தவர்கள், வாழ்வில், வெற்றி வாகை சூடுவர்
என்பது, ஐதீகம்.

——————————-
தி .செல்லப்பா
வாரமலர்

 

« Older entries