கோவை :
”மகா சிவராத்திரி என்பது, வெறுமனே விழித்திருக்கும் இரவு அல்ல;
விழிப்புணர்வு கொடுக்கும் இரவு,” என, ஈஷா யோகா மையத்தில்
நேற்றிரவு நடந்த, மகாசிவராத்திரி விழாவில், சத்குரு பேசினார்.
மகாசிவராத்திரி விழா, 112 அடி ஆதியோகி சிலை முன் நேற்று
நடந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், சத்குரு பேசியதாவது:
ஒவ்வொரு மாதத்தின் 14-ம் நாளும், மாத சிவராத்திரி என்று
அழைக்கப்படுகிறது. மாத சிவராத்திரியின் நாட்கள் அனைத்தும்,
இருண்ட இரவுகள். மாசி மாதத்தின்போது வரும் சிவராத்திரி,
மகா சிவராத்திரி. இது, மிகவும் இருண்ட இரவு. உத்ராயண
காலத்தின் துவக்கம். பூமியின் நிலையில் மாற்றம் ஏற்படும்
காலம்.
அப்போது, ஆதியோகி சிலை அமைந்திருக்கும் இந்த இடத்தில்
விழித்திருப்பது சிறப்பு. யோக பாதையில் ஈடுபட்டு
இருப்பவர்களுக்கு இது முக்கியமான இடம்; 365 நாட்களும் யோக
பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சமமான பலன், இன்றைய ஒரு
நாளில் கிடைக்கும்.
11 டிகிரி அட்ச ரேகையில், பூமியின் வடக்கு நோக்கி இருக்கும்
இடங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
–
———————–
கவனித்துப் பார்த்தால், முக்கியமான கோயில்கள் அந்த இடத்தில்
தான் அமைந்திருக்கும். ஆதி யோகி சிலை அமைந்திருக்கும்
இடமும், 11 டிகிரி அட்ச ரேகையில் அமைந்திருக்கும் இடம்தான்.
இந்த நாளை சிவன் – பார்வதியின் திருமண நாள் என்று சிலர்
சொல்வார்கள்.
சிவன், எதிரிகளை ஜெயித்த நாள் என்று சொல்வோரும் உண்டு.
மகா சிவராத்திரியைக் கொண்டாட இயற்கை, ஆதியோகியின்
கருணை இரண்டும் துணை இருக்கிறது.
மனித குலம் பெறக் கூடிய அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு
தரக் கூடியவர் ஆதியோகி. தங்களைப் பற்றிய சிந்தனை
இப்போது மக்களுக்கு வந்திருக்கிறது. அவர்களின் பார்வை,
மதத்தில் இருந்து பொறுப்புணர்வு நோக்கி திரும்புகிறது.
மனிதர்களுக்கான எல்லா தீர்வுகளும் உள்ளேதான் இருக்கிறது.
ஏனென்றால், அவர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்னைகளும்
உள்ளுக்குள் இருந்துதானே ஏற்படுகிறது.
இது வெறுமனே விழித்திருக்கும் இரவு அல்ல. விழிப்புணர்வு
கொடுக்கும் இரவு.
வெறுமனே இருக்கக் கூடிய மனம், பேயின் விளையாட்டுக்
கூடம் என்று மேல்நாட்டு பழமொழி ஒன்று இருக்கிறது.
ஆனால், மனித மனம் எப்போதும் வெறுமனே இருப்பதில்லை.
அது எதையேனும் சிந்தித்துக்கொண்டேதான் இருக்கிறது.
இங்கு, உங்கள் மனதை ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு
செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உடலை சுமையாக
சுமந்துகொண்டிருக்காமல், ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு
செல்ல வேண்டும். உங்கள் உடலை நீங்களே தின்று கொள்ள
அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, சத்குரு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்,
தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செல்லுார் ராஜு,
நடிகை தமன்னா உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.
துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் வாழ்த்துரை
ஒளிபரப்பப்பட்டது.
–
———————————–
தினமலர்
மறுமொழியொன்றை இடுங்கள்