கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்
”மயிலே மயிலேன்னா இறகு போடாது. அடிச்சுப் பிடுங்க வேண்டியதுதான்!” என்கிற கொள்கையை உடையவர்கள் பலர். ஆனால் இதை நான் எளிதில் ஏற்கத் தயாரில்லை.
”கேட்ட விதம் எனக்கே பாவமா இருந்துச்சு. யோசிக்காம உடனே சரின்னுடேன்” என்பதையே நான் அதிகம் நம்புகிறேன்.
கனிவான மொழிகளுக்கு இதயக் கதவுகளை உரியவர்களே அறியா வண்ணம் திறக்க வைக்கும் ஆற்றல் உண்டு.
”நான் யார் தெரியுமா” என்று நம் நடிகர்களுள் ஒருவர் வெளிநாட்டு விமான நிலையக் குடியேற்ற அதிகாரியிடம் குரலை உயர்த்தினார். அவ்வளவுதான் ”அப்படி ஓரமாப் போய் நில்லுங்க” என்று சொல்லி மூன்று மணி நேரம் காக்க வைத்துவிட்டார்கள்.
நாம் எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த நாற்காலியில் இருப்பவர் வைத்ததுதான் அந்த நேரத்துச் சட்டம்.
அதற்குப் பிறகு அவரை ‘ஒரு வழி பண்றேன்’னு புறப்படுவதெல்லாம் அடுத்த கட்டம். ஆனால் நாம் அடைந்த மன உளைச்சலுக்கும் கெளரவ இழப்பிற்கும் அடைந்த நஷடத்திற்கும் நேர விரயத்திற்கும் யார் என்ன ஈடு கட்டுவது?
வயதான நம் குடும்ப உறுப்பினருக்கு உயர்பெர்த் கொடுத்துவிட்டார்கள். சக பயணியிடம் கனிவாக, குழைவாகக் கேட்டால் அவருக்கு மறுக்கவே மனம் வராது. தயவுப் பாணியில் கேளாமல் அதிகாரத் தோரணையில் கேட்டால் டிக்கெட் பரிசோதகருக்குக்கூட அதே மறுப்பு தான்.
மண்டப உரிமையாளர் இல்லத் திருமணம் திடீர் என முடிவாகிறது. மண்டபமோ அன்று பணம் கட்டிய வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மண்டப உரிமையாளர் கனிந்து, குழைந்து பேசினால் விட்டுத்தர வாய்ப்பு இருக்கிறது. மண்டப ஓனருக்கே இந்தப் பதிலா என்றால், ”நீ எவனா இருந்தா எனக்கென்ன?” என்பதுதான் பதில்.
”பார்த்துப் போட்டுக் குடுங்க. உங்களுக்குத் தெரியாதா எங்க கஷ்டம்?” என்றால் நல்ல ஊதியம். கனிவுத் தொனி மாறினால் அடிமட்டத் தொகைதான். நம் இருக்கையிலேயே அதிகாரத் தொனி கூடாது என்றால், அதிலிருந்து இறங்கிய பிறகுமா அதிகாரத் தொனி?
கேட்கும் விதத்திலேயே காரியமாற்றும் ஆற்றல் ஒரு வெற்றிகரமான அணுகலாகும். கனிவும் குழைவும் இறங்கிப் போவதற்கல்ல. இறுதி வெற்றியை அடைவதற்கே !
Courtesy:
http://tamilvanan.com/content/20080523-lena-katturai/
