அனைவருக்கும் கல்வி- சிறுவர் பாடல்

குழந்தைகளே குழந்தைகளே பள்ளி வாருங்கள்!

குதூகலமாய் படித்திடவே துள்ளி வாருங்கள்!

குட்டி குட்டி கதையெல்லாம் சொல்லித் தர்றாங்க!

சுட்டிப் பசங்க ஆர்வமுடன் கேட்க வர்றாங்க!

அனைவருக்கும் கல்வியென்ற திட்டம் இருக்குது!

இனித்திடவே கல்வியினைச்சொல்லித்  தருகுது!

அடிச்சு சொல்லும் காலமெல்லாம் ஓடிப்  போயாச்சு!

படிச்சு சொல்லும் கல்வியிதோ தேடி வந்தாச்சு!

————————————————————-

>மா.ந.சொக்கலிங்கம்

நன்றி;தினமணி(சிறுவர்மணி)

ஒன்றும் ஒன்றும் இரண்டு!

ஒன்றும் ஒன்றும் இரண்டு

பூவில் இருப்பது வண்டு

இரண்டும் இரண்டும் நான்கு

இனிப்பாய் இருக்கும் தேங்காய்

மூன்றும் மூன்றும் ஆறு

வேலை செய்தால் சோறு

நான்கும் நான்கும் எட்டு

நன்றாய்ப் பாடுவாள் பட்டு

ஐந்தும் ஐந்தும் பத்து

அன்பே நமது சொத்து

-

நன்றி;

http:pkb.blogspot.com

மகிழம் பூ (சிறுவர் பாடல்)

makizhampoo

மரத்தில் உதிரும் மகிழம்பூ

மகிழ்ச்சி யூட்டும் மகிழம்பூ!

நூலில் கோத்து அணியும்பூ

நெஞ்சம் போற்றி மகிழும்பூ!

வண்டிச் சக்கரம் போன்றதாம்

வடிவம் ரொம்பச் சின்னதாம்!

மணிச்சரம் போல் தொடுக்கலாம்

மாலையாக்கிச் சூடலாம்!

பூத்தவுடனே வாசம்

பொங்கிப் பொங்கி வீசும்!

வாடும்போதும் வாசம்

வள்ளல் போல வீசும்!

இரவில் வீழ்ந்த பூவை

எடுத்துச் சூடலாம் காலை!

>கவிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்

நன்றி; நல்ல நல்ல பாட்டு(சிறுவர்பாடல்கள்)

வாழ்வைத் தந்தோர்!

கண்டு பிடித்தோர் மேலோராம்

உண்டு படுத்தோர் கீழோராம்!

எழுதும் பேனா பென்சில்கள்

எல்லாம் செய்து தந்தோரைத்

தொழுது போற்ற வேண்டாமா? – பேர்

சொல்லி வாழ்த்த வேண்டாமா?

குடிக்கும் காப்பி, பானங்கள்

கொடுத்தார் சத்து உணவெல்லாம்!

படிக்கும் பேப்பர் புத்தகமும்

பாரில் பலவும் தந்தார்கள்!

மின்சாரத்தை கண்டவர் யார்?

மேன்மை யாவும் தந்தவர் யார்?

வானொலி கேட்கும் மாணவரே

வானொலி செய்தவர் பேர் என்ன்?

தொல்லை தந்திடும் நோய்களையே

தொலைத்திடும் மருந்தை யார் செய்தார்?

காரும் பஸ்ஸூம் கப்பல்களும்

கண்டு அளித்தோர் பேர் எல்லாம்

யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை

ஏறிப் பயணம் செய்கின்றோம்!

காலம் யாவும் பாடுபட்டே

கண்டு பிடித்தவர் நமக்காக…!

ஞாலம் வாழ உழைத்தவரை

நன்றி சொல்லிப் போற்றிடுவோம்!

———————————————————————–

>கவிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்

நன்றி; நல்ல நல்ல பாட்டு(சிறுவர் பாடல்கள்)

வாழை (சிறுவர் பாடல்)

வாழை மரம் பாரு…அதன்

வாழ்வைக் கொஞ்சம் கேளு!

வாழையடி வாழை –சுற்றி

வளரும் கன்று பாரு!

மலர்களெல்லாம் மேலே

வானம் பார்த்து பூக்கும்!

வாழை அதன் பூதான்

வளைந்து பூமி பார்க்கும்!

காய்கள், கனிகள், கிழங்கும்

இலைகள் தண்டும் வழங்கும்!

வாழை ‘மரமே’ ஆகுமா?

புல்லின் வகைய தாகுமே!

கவிஞர் வெள்ளாயாம்பட்டு சுந்தரம்

நன்றி; நல்ல நல்ல பாட்டு(சிறுவர் பாடல்கள்)

photo: from net

அணில் (சிறுவர் பாடல்)

squrrel


அணிலே அணிலே ஓடி வா
ஒரு வார்த்தை சொல்கிறேன் வா
கொய்யா மரம் ஏறி வா
இளசாக பழம் பறித்து வா
பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்
கூடி கூடி இருவரும்
கடித்து கடித்து உண்போம்

——————————————

கிளி (சிறுவர் பாடல்)

பச்சை அழகுக் கிளியே

பாடிப் பறந்தாய் வானில்!

இச்சை கொண்டு நானே

இங்கு அடத்தேன் வீணில்!

வளைந்த சிவந்த மூக்கை

வாய்க்க நீயும் பெற்றாய்!

கலைந்து பசியும் ஓட

கனியைத் தேடிச் சென்றாய்!

பச்சை நிறம் கண்டு

பாசம் மிகவும் கொண்டேன்!

கொச்சை மொழியைக் கேட்டு

கொண்டு வந்தேன் ஈண்டு!

கூட்டில் உன்னை அடைத்துக்

கொஞ்சிப் பேசினேன் இன்று!

பாட்டில் உன்னைப் பாடிப்

பறக்க விட்டேன் நன்று!

———————————————–

>பாவலர்.பெரு.முல்லையரசு

நன்றி; நாற்றங்கால் (குழந்தை இலக்கியம்)

காகம் (சிறுவர் பாடல்)

———————————————————————-

காக்கை என்ன காக்கை

கறுப்பு வண்ணக் காக்கை!

மூக்கைத் தீட்டி உணவை

முடிக்கும் நல்ல காக்கை!

மரத்தின் மீது மாடி

மனிதர் கூறும் கூடு!

இரையைக் கண்டு கூடி

இனிதே உண்ணும் பாடி!

இரும்பு போன்ற மூக்கை

இறுகப் பெற்ற காக்கை!

திருடன் போல எதையும்

தெரியா தெடுக்கும் காக்கை!

—————————–

>பாவலர்.பெரு.முல்லையரசு

நன்றி; நாற்றங்கால் (குழந்தை இலக்கியம்)

உண்மைக்குப் பரிசு!

உண்மை பேசினால் நன்மைகளுண்டு
விறகு வெட்டி கதை கேளுங்கள் !
விறகு வெட்டியின் நேர்மைக்காகக்
கிடைத்த பரிசினைப் பாருங்கள் !

காட்டுக்குள்ளே ஆற்று ஓரமாய்
பட்ட மரமொன்று இருந்தது !
பட்ட மரத்தை வெட்டும்போது
கோடரி ஆற்றுக்குள் விழுந்தது !
கோடரி இன்றித் தவித்த ஏழையிடம்
தேவதை ஒன்று வந்துது !
தங்கக் கோடரி ஒன்றை எடுத்து
விறகு வெட்டியிடம் தந்தது !

தங்க கோடரி,வெள்ளிக் கோடரி
எதையும் மரம் வெட்டித் தொடவில்லை !
இரும்புக் கோடரி தன்னது என்று
எடுத்துக் கொண்டான் பொய்யில்லை !
விறகு வெட்டியின் நேர்மை கண்டு
தேவதை உள்ளம் மகிழ்ந்தது !
வெள்ளிக் கோடரி தங்கக் கோடரி
எல்லாம் பரிசாய்த் தந்தது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆக்கம்; புஷ்பவனம் குப்புசாமி
புஷ்பவனம் குப்புசாமியின் சிறுவர் பாடல்கள்
(மணிமேகலைப் பிரசுரம்)

மிருகக் காட்சி சாலை!

அம்மா அப்பா அழைத்துச் சென்றார்
அங்கே ஓரிடம்
அங்கிருந்த குயிலும் மயிலும்
ஆடத் தொடங்கின

ஆண் (nominate race)

An Indian Blue Peacock (rear) courts a peahen (front)

பொல்லா நரியும் புனுகுப் பூனையும்
எல்லாம் இருந்தன
குட்டி மான்கள் ஒட்டைச்சிவிங்கி
கூட நின்றன

குரங்கு என்னைப் பார்த்துப் பார்த்து
குர் குர் என்றது
யானை ஒன்று காதைக் காதை
ஆட்டி நின்றது

முதலைத் தலையைத் தூக்கிப் பார்த்து
மூச்சு விட்டது
கரடி கூட உறுமிக் கொண்டே
காலைத் தூக்கிற்று

சிங்கம் புலி எல்லாம் கண்டேன்
கண்டும் பயமில்லை
சூரனைப் போல் நின்றிருந்தேன்
சிறிதும் அஞ்சவில்லை

சென்று வந்த இடம் உனக்குத் தெரியவில்லையா?
மிருகக் காட்சி சாலைதானே வேறு ஒன்றுமில்லை!

(இந்த ஈழப் பாடலுக்கு நன்றி: ஜானா மற்றும் குடும்பத்தினர்)
http://paadal.blogspot.com/

—————————-

« பழைய வரவுகள்