ரயிலை விட்டு இறங்கி, ஆட்டோக்காரருடன் ஒரு குட்டிச் சண்டையே போட்டு,
வீட்டில் நுழைந்தவுடன், அம்மா உள்ளம் நைந்து கொட்டிய வார்த்தை, சட்டி
நிறைய கொதிக்க வைத்த ரசத்தை முகத்தில் வீசி அடித்தது மாதிரி சுட்டது.
“”எல்லாம் உன்னாலடி… அதோ பார், அவர் கிடப்பதை! பேச்சிழந்து, நடக்கக்
காலிழந்து, ஆவேசக் கை வீச்சிழந்து கிடப்பதைப் போய்ப் பார். அப்பவாவது
உனக்குப் புத்தி வருமா?”
“”என்னம்மா… என்னென்னவோ பேசுறே… அப்பாவுக்கு உடம்பு சரியில்லேன்னு
நீ போன்ல சொன்ன அடுத்த நிமிஷத்துல, ஓடோடி வந்திருக்கேன்.”
பள்ளிக்கூடத்துக்குப் போன ரெண்டு குழந்தைகளும், திரும்பி வரும்போது அம்மாவத்
தேடுமே என்பதையும் பாக்கலை… ஆபீசுக்குப் போன அவருக்கு, “அப்பாவுக்கு
உடம்பு நல்லால்ல… சீரியஸ் என்று அம்மா போன்ல சொன்னாங்க… நா உடனே
பொறப்பட்டு போறேன்… கொஞ்ச சீக்கிரம் வீட்டுக்கு வந்து குழந்தைகளைப் பாத்துக்குங்க.
அப்பாவப் பாத்த அடுத்த கணத்துல நான் திரும்பி விடுவேன். அப்பா இல்லேன்னா
நான் இல்லீங்க!’ என்று கண்கள் நீரில் கரையச் சொல்லிவிட்டு வந்த என்னைப் பாத்து,
“வா… காபி குடி… சாப்பிட்டியா…’ என்று ஒரு வார்த்தை கூட பேசாம, பொறுமைக்குப்
பெயர் போன அம்மா இப்படிப் பொறிந்து கொட்றாங்கன்னா, ஏதோ விஷ யம் இருக்கு…
முதல்ல அப்பாவப் போய்ப் பாத்துட்டு வந்துருவோம். அப்புறம் வந்து அம்மாகிட்ட
விவரமாப் பேசிக்கலாம் என்று நினைத்தேன்.
அப்பா வழக்கமாக இருக்கும் மாடி அறை நோக்கிப் பரபரத் தேன். உண்மையில்
கையும், காலும் நடுநடுங்கின. என்னவோ ஏதோ தெரியலை… அப்பாவுக்கு என்ன ஆச்சு…
அவர் பிழைக்கவே மாட்டாரா என்ற விபரீத நினைப்புகள் மனதில் மாறிமாறி அலை
பாய்ந்தன. அப்பாவின் அறை உள்ளே நுழைந்தேன்.
“வாம்மா கண்ணு’ என்று சொல்கிற அவர் வாயிழந்து கிடந்தார். கண்ணால் மட்டும்
வாசலில் நுழைந்த என்னையே பார்ப்பது போல எனக்கு இருந்தது.
என்ன நடந்தது அப்பாவுக்கு? அவருடைய நிலையைப் பார்க்கும் போது, அவரைக்
கடுமையான நோய் செயலிழக்க வைத்திருக்கிறது என்பது தெரிந்தது.
நல்ல வேளை; உணர்விழக்க வைக்கல.
ஓயாமல் எழுதும் அவருடைய வலக்கை இப்பொழுது கட்டிலை ஒட்டி நிரத்தர ஓய்வை
எதிர்பார்த்துப் படுத்துக் கிடந்தது. வீசி நடக்கும் அவருடைய கால்கள் அந்த
வேகத்தை இழந்து கிடக்கின்றன. அவர் பேச முடியாமல் நாக்கால் குழறுவதும்,
பேசத் துடிப்பதும் நன்கு தெரிந்தது.
அவர் கண்களில் இருந்து வரும் கண்ணீர் மட்டும் நிற்காமல் என்னைப் பார்த்து
என்னென்னவோ பேசுகிறது… கண்ணீரும் பொருள் பொதிந்த பாஷை தான்
போலும். அதற்கும் விசேஷ அர்த்தம் இருக்கிறது.
கொஞ்ச நேரம் அப்பாவின் அருகிலேயே நின்று, கண்கள் கலங்க அவர் பக்கத்தில்
கட்டிலில் அமர்ந்து, அவர் நெற்றி, கன்னம், கழுத்து, மார்பு, கை, கால், பாதம்
வரை மெல்ல நீவி விட்டு, மீண்டும் படியிறங்கி அம்மா இருக்கும் அடுக்களைக்குள்
பயம் கவிய நுழைந்தேன்.
என் கண்களில் கண்ணீர் பொங்கி வழிவதையும், அதைக் கை விரல்களால் துடைத்துக்
கொண்டே நான் தளர்ந்த நடையில் வருவதையும் அம்மா கவனித்திருக்க வேண்டும்.
இப்போது அம்மாவின் கையில் எனக்குப் பிடித்த “லியோ காபி’ இருந்தது.
அது எனக்காக அம்மா போட்டது.
“”என்னம்மா… என்ன நடந்தது… அப்பாவப் பாக்கவே தாங்கலை,” என்று தேம்பினேன்.
காபியை என் கையில் கொடுத்து விட்டு அம்மா சொன்னாள்…
“”ஒரு வாரத்துக்கு முன்னால நீ இங்க வந்தல்ல… அப்போ என்ன நடந்ததுன்னு
ஞபாகப்படுத்திப் பாரு.”
“”என்ன நடந்தது? எனக்கு வேலை கிடைத்ததைக் கேள்விப் பட்ட என் கல்லூரித்
தோழிகள் என்னைப் பாராட்ட வந்திருந்தாங்க. அவுங்க அத்தனை பேருக்கும்
பண்டங்களும், பலகாரங்களும் வைத்துக் காபி நீதான குடுத்த.”
“”இன்னும் கொஞ்சம் நெனச்சுப் பாரு,” என்றாள் அம்மா.
“”ஒண்ணுமே நடக்கலயேம்மா. அப்பாவும், அவங்களோட கலகலப்பாய்
நல்லாப் பேசுனாங்களே.”
“”அப்பா அவங்களோட பேசும் போதுதான் அது நடந்தது.”
“”கொஞ்சம் விவரமா பேசும்மா. வேதனை மண்டியிருக்கிற சமயத்தில் விடுகதை
போடாத. அப்பா ஒடம்பு சரியில்லை என்பதையே என்னால் தாங்கிக்க முடியல.
அதற்கு மேல அதற்குக் காரணம் நான்தான்னு நீ சொல்றதக் கேட்கிற போது
தாங்கிக்கவே முடியல. தயவு செய்து வெளிப்படையாச் சொல்லு.”
“”அன்னைக்கு அப்பா ஒன்னக் கூப்பிட்டாங்க.”
“”ஆமாம், கூப்பிட்டாங்க…”
“”எப்படிக் கூப்பிட்டாங்க?”
“”எப்போதும் கூப்பிடறது போலக் கூப்பிட்டாங்க.”
“”எப்போதும் எப்படிக் கூப்பிடுவாங்க?”
“”குட்டிக்கண்ணு, குட்டிக்கண்ணுன்னு கூப்டுவாங்க.”
“”அங்கதாண்டி வந்தது வெனை. அன்னக்கி அப்பா உன்னக் குட்டிக்கண்ணுன்ணு
கூப்பிட்டபோது, நீ என்ன சொன்ன? அத்தனை பேரு முன்னால எப்படி நடத்துக்கிட்ட?
ஞாபகப்படுத்திப் பாரு.”
“”பின்ன எப்படிம்மா? மத்தவங்க முன்னிலைல அப்பா எனக்குச் செல்லமா வச்ச
பேரைச் சொல்லி, “கண்மணி’ன்னு கூப்பிடாம அத்தனைப் பேருக்கும் முன்னால,
“குட்டி கண்ணு… குட்டி கண்ணு’ன்னு கூப்பிட்டாங்க. சின்ன வயசிலேயே அப்பா
அப்படிக் கூப்பிடறதக் கேட்ட என் பள்ளிக்கூடத் தோழிங்க பள்ளிக்கூடத்தில
என்ன, “கன்னுக்குட்டி, கன்னுக்குட்டி’ என்று கேலி பண்ணுவாங்க.
“”நான் படிச்சு பெரியவளாகி, கல்யாணமாகி, ரெண்டு குழந்தைகளைப் பெத்து
வாழ்ந்துகிட்டு இருக்கிறபோது, பத்து பேர் மத்தியில அப்பா அப்படிக் கூப்பிடலாமா?
நீயே சொல்லு… அதான், எனக்கு அன்னக்கிக் கோபம் வந்துட்டுது.
“இனிமே அப்டிக் கூப்டாதீங்கப்பா…’ என்று சிடுசிடுத்துட்டேன்.”
“”அதுதாண்டி… நீ சொன்ன அந்த சொல்லுதான் அவர ரொம்ப நோகடிச்சிட்டுது.
ஒனக்கு நல்லாத் தெரியும், அப்பா முப்பது வருஷமா நீரிழிவு நோயாளி. அதிர்ச்சியையோ,
அதிவருத்தத்தையோ தாங்கிக் கொள்கிற உடல் சக்தியை அவர் இழந்துட்டாரு.
அவருடைய செல்லப் பொண்ணு நீ. பத்துப் பேருக்கு முன்னாடி அவரு மனசே
நொறுங்கிப் போற மாதிரி பேசிட்ட.
“”பேசிட்டு நீ பாட்லே ஊருக்குப் போயிட்ட. அன்னைக்கு ராத்திரி படுத்தவர்தான்,
காலைல அப்பா எழுந்திருக்கவே இல்ல; பேசவும் இல்ல. “ஏண்டி தங்கம்,
காபி எங்க?’ன்னு வழக்கமாகக் கேட்பாரே, அந்தக் கொஞ்சும் குரலும் கேட்கவே இல்ல…”
என்று தழுதழுக்கச் சொல்லிப் புடவை முந்தானையை எடுத்துத் தன் கண்களைத்
துடைத்துத் தேம்பத் தொடங்கி விட்டாள் அம்மா.
எனக்கு ஒரே அதிர்ச்சி. சின்ன விஷயம்ன்னு நாம நெனச்சது எவ்வளவு பெரிய
விஷயமாக போயிட்டுது. எங்க அப்பாவ மீண்டும் நான் எப்படி முன்போல பேச
வைக்கப் போறேன். கை வீசி நடக்க வைக்கப் போறேன்.
ஒரு கணம் படித்த மருத்துவக் கல்வியும், உளவியல் கல்வியும் மனதில் மின்னலாய்
வெட்டி வெளிச்சம் காட்டின.
அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த நான், அடுப்பங்கரையில் இருந்து கிடுகிடு என்று,
அப்பா இருந்த அறையை நோக்கி மாடிப்படிகளில் பறந்தேன். போகும்போதே,
“அப்பா… அப்பா’ என்று கதறிக் கொண்டே ஏறினேன்.
பதற்றமும், கதறலும், உள்ளம், உடம்பு என அனைத்து அங்கங்களிலும்
படையெடுத்திருந்த துக்கமும் அப்பாவின் அறை வாசலைத் தாண்டிக் கட்டிலை
நெருங்கும்போது, என் இரண்டு கால்களையும் தடுமாற வைத்து விட்டன.
“”அய்யோ, அப்பா,” என்று கதறி, மூக்கு உடைந்து ரத்தம் கொட்டும்
வண்ணம் கீழே விழுந்தேன்.
“”ஏங் குட்டிக்கண்ணு…” என்று அப்பாவின் குரல் கேட்டு ரத்தம் சொட்டும்
மூக்கோடு நிமிர்ந்த போது, அப்பா படுக்கையை விட்டுப் படக்கென எழுந்து,
அமர்ந்த, அந்த ஒரு கணம் இந்த உலகமே சொர்க்கமாகிப் போனது.
அப்பாவின் சத்தம் கேட்டு, அம்மாவும் கிடுகிடு என்று மாடிப்படியேறி வந்து விட்டாள்.
அப்பாவின் கைகளைப் பிடித்து, தன் கண்ணில் ஒற்றித் தேம்பித் தேம்பி அழத்
தொடங்கி விட்டாள்.
“”என் ராஜா பேச ஆரம்பிச்சிட்டாரு… கை அசைக்க ஆரம்பிச்சிட்டாரு…
நடக்கவும் இனி ஆரம்பிச்சிடுவாரு…”
அமுகையும், ஆனந்தமும் ஒரே நேரத்தில் அம்மாவைப் பற்றிக் கொண்டன.
எனக்கு மட்டும் தான் தெரியும், நான் கால் தடுக்கி விழுந்தது, வாசல்
நிலைக்காலால் அல்ல. இப்படி வைத்தியம் செய்து பார்ப்போம்… மூக்கே
போனாலும் சரி, முகமே போனாலும் சரி, அப்பாவுக்காகச் செத்தாலும் சரி;
இந்த உயிரைக் கொடுத்தவர் அவர் அல்லவா என நானே வலிய விழுந்தேன்
என்பது எனக்கு மட்டுந்தான் தெரியும்.
——————————————————————————————————-
Thanks:
http://www.dinamalar.com/Supplementary/varamalar_detail.asp?news_id=621