இயற்கைக் குணம் மாறாது!

ஆசிரமம் ஒன்றில் முற்றும் துறந்த சந்நியாசி ஒருவர் இருந்தார்.
அவருக்கு நான்கு இளம் சீடர்கள் இருந்தார்கள்.

ஆசிரமத்தின் அன்றாடத் தேவைகளை, அந்த ஆசிரமத்தின் மேல்
மதிப்பு வைத்திருந்த  உள்ளூர் மக்கள் பார்த்துக் கொண்டார்கள்

ஆசிரமம் செழிப்பாக இருந்தது. காலையிலும், மாலையிலும் சாமியார்,
மக்களை நல்வழிப்படுத்தும் முகமாக உரை நிகழ்த்துவார். கூட்டு
வழிபாடு செய்வார்.

ஒரு நாள், அந்த நான்கு சீடர்களில் மூன்று பேர்கள் சாமியாரிடம்
வந்து,” ஐயா நாங்கள் அருகிலிருக்கும் புண்ணிய நதிகளிலும், நீர்
நிலைகளிலும் தீர்த்தமாடிவிட்டுவர ஆசைப் படுகிறோம். அனுமதி
கொடுங்கள்” என்றார்கள்

”ஏன் நம்மூர் ஆற்றிற்கு என்னாயிற்று?” என்று கேட்டார்.

”அதில்தான் தினமும் நீராடிக்கொண்டிருக்கிறோமே! ஒரு மாறுதலுக்காக
மற்ற புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டுவர விரும்புகிறோம்” என்றார்கள்.

“சென்று வாருங்கள்” என்றார்.

அவர்களில் ஒருவன்,”ஐயா நீங்களும் வர வேண்டும்!” என்றான்.

“இல்லை, நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்!” என்றார்

மற்ற இருவரும் இப்போது அவனுடன் சேர்ந்து வலியுறுத்தவே, சாமியார்
சுற்று முற்றும் பார்த்தார்.

அருகில் இருந்த பாகற்காய் கொடியில் நிறையக் காய்கள் காய்த்துத்
தொங்கிக் கொண்டிருந்தன.

அவற்றில் ஒன்றைப் பறித்து அவர்களிடம் கொடுத்தவர், இப்படிச் சொன்னார்:

“இந்தக்காயை நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீராடும்
இடங்களில் எல்லாம் இதையும் மூன்று முறைகள் நமச்சிவாயா என்று
சொல்லி நீரில் முக்கி எடுத்துக் கொண்டு வாருங்கள்”

அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். உள்ளூர் ஆசாமி ஒருவன் அவர்களுக்கு
வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். இரண்டு நாட்கள்
பயணம் மேற்கொண்டு நான்கு நதிகளில் நீராடிவிட்டுத் திரும்பினார்கள்.

திரும்பி வந்தவுடன், சாமியாரை நெடுஞ்சான் கிடையாக விழுந்து
வணங்கினார்கள்.

சாமியார் கேட்டார்,”பாகற்காய் என்ன ஆயிற்று?”

“நீங்கள் சொன்னபடியே பாகற்காயையும் நீராட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்”

“இன்று அதைச் சமையலில் சேர்த்து விடுங்கள்” என்றார் அவர்.

அப்படியே செய்தார்கள்.

மதியம் சாப்பிடும்போது, சாமியார் கேட்டார்,” பாகற்காயில் ஏதாவது
மாறுதல் தெரிகிறதா?”

சீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்,” இல்லை ஐயா,
எப்போதும் போல அது கசப்பாகத்தான் இருக்கிறது!”

இப்போது சாமியார், அவர்களுக்குப் புரியும்படியாக அழுத்தமான குரலில்
சொன்னார்.

“எத்தனை புண்ணிய நிதிகளில் முக்கி எடுத்தாலும் பாகற்காயின் குணம்
போகவில்லை அல்லவா? அதுபோலத்தான் எத்தனை புண்ணிய நதிகளில்
நீராடினாலும் அல்லது எத்தனை ஆலயங்களில் வழிபட்டாலும் மனிதனின்
இயற்கைக் குணம் மாறாது!”

——————————————————————————————–

படித்ததில் பிடித்தது

எல்லாம் சட்டப்படிதான்!

 

snakes

முயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு நினைத்தது. எனவே ஒரு சட்டம் இயற்றி முயலிடம் அறிவித்தது.

“முயலே நான் சொல்வதைக் கேள். நான் இனி மேல் முன்கூட்டியே சொல்லாமல் உன் வீட்டுக்குள் நுழைய மாட்டேன். கதவைத் தட்டி முன் அனுமதி பெற்றுத்தான் வருவேன். சொல்லாமல் வீட்டுக்குள் வந்துவிட்டால், நீ பயப்படாமல் என்னிடம் புகார் செய்யலாம். அந்த உரிமையை உனக்கு கொடுக்கிறேன்”

இப்படி ஒரு சட்டத்தையும், உரிமையையும் அறிவித்த பிறகு ’இந்தச் சட்டத்தை முயல் சரியாக பயன்படுத்துமா, பயன்படுத்தாதா?’ என யோசித்த பாம்பு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒருநாள் முயலின் வீட்டுக்குள் புகுந்து முயலின் குட்டி ஒன்றை விழுங்கி விட்டது. பின்னர் வெளியே வந்து நின்று கொண்டது. முயல் புகார் செய்ய வருகிறதா இல்லையா என காத்திருந்தது.

நீண்ட நேரம் ஆகியும் முயல் வெளியே வரவில்லை. பாம்புக்கு கோபம் அதிகரித்துக் கொண்டே போனது. பொறுமையிழந்து முயலின் வீட்டுக்குள் பாய்ந்து சென்று முயலைப் பிடித்து கேட்டது.

“நான் கொண்டு வந்த சட்டத்தை நீ ஏன் பின்பற்றவில்லை?”

முயல் அமைதியாகப் பதில் சொன்னது.”குற்றவாளியும் நீதான். நீதிபதியும் நீதான். நான் எந்தக் குற்றவாளிக்கு தண்டனை வழங்க எந்த நீதிபதியிடம் முறையிடுவது? நீயே சொல்லு.”

பாம்பு கோபத்தோடு சீறி, முயலைக் கவ்வி ஒரே வாயில் விழுங்கி விட்டது. பின்னர் இப்படி அறிவித்தது:

“இந்த முயலைக் கொன்றது சும்மா இல்லை. சட்டப்படிதான். அனைத்துச் சட்ட நெறிமுறைகளும் சரியாகவே பின்பற்றப்பட்டுள்ளன. ஆமாம்”.

பி.கு: இது ஒரு சீனப் பழங்கதை. எப்போது படித்தாலும் புதிதாகவே இருக்கிறது. சமகால வாழ்வையும் பல சமயங்களில் ஒப்பிட முடிகிறது. சமூகத்தின் நியாய அநியாங்களை புரிய வைக்கிறது.  அமைப்பின் கோளாறுகளை சொல்லிக்கொண்டே இருக்கிறது.

———————————

Thanks:

http://mathavaraj.blogspot.com/2009/03/blog-post_9501.html

உனக்கு நான் உள்ளேன் தோழா!

அது ஒரு மிருகங்கள் மற்றும் பறவைகளை விற்பனை செய்யுமிடம் (petshop). அந்தக் கடைக்கு விதம் விதமான வண்ண வண்ண ஆடம்பரக் கார்களில் மக்கள் வந்து தமக்குப் பிடித்த பிராணிகளை வாங்கிச் செல்வது வழக்கம். அந்த கடை கண்ணாடியால் அழகு படுத்தப் பட்டிருந்ததால் பிராணிகளின் அழகும் போவோர் வருவோரைக் கவர்ந்தது. பலர் அங்கு நின்று வேடிக்கை பார்த்துச் செல்வார்கள்.

வேடிக்கை பார்ப்பவர்களோடு பத்தோடு பதினொன்றாக ஒரு ஏழைச்சிறுவனும் நின்று தினமும் வேடிக்கை பார்ப்பான். அவனுக்கும் அங்குள்ள அழகான நாய்க்குட்டிகளில் ஒன்றை வாங்கி விட வெகு நாள் ஆசை.

சிறிது சிறிதாக சேமித்து 10 ரூபாய் சேர்த்தான். பின் கடைக்குச் சென்று கடைக்காரரிடம் நாய்க்குட்டி வாங்க வேண்டுமென்றான். அவரும் நாய்க்குட்டிகளை பார்க்க அனுமதித்தார். அவன் எல்லா குட்டிகளையும் பார்த்து விட்டு ஒதுக்குப் புறமாக படுத்திருந்த அழகான கருப்பு நிற நாய்க்குட்டியொன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்து, கடைக்காரரிடம் பத்து ரூபாயைக் கொடுத்தான்.

கடைக்காரர் அவனைப் பார்த்து “ஏனடா தம்பி 10 ரூபாய்க்கு யாராவது நாய்க்குட்டி தருவாங்களா?” என்றவாறே குட்டியைப் பறித்துக் கொண்டார். பின்பு பத்து ரூபாயைச் சிறுவனை நோக்கி எறிந்து விட்டு குட்டியைக் கூண்டில் போட எடுத்துச் செல்கையில் தான் பார்க்கிறார், அந்த நாய்க்குட்டி ஒருகால் பலமின்றி மூன்று கால்களுடன் ஊனமானதாக தள்ளாடுவதை.

பின் சிறுவனிடம் வந்து சொன்னார், இந்தக் குட்டியை கொண்டு வரும் போது இதன் கால்கள் முறிந்து விட்டது. இதைக் யாரும் விலை கொடுத்து வாங்க மாட்டார்கள்.கருணைக் கொலைதான் செய்ய நினைத்தேன். நீ வேண்டுமென்றால் இலவசமாக எடுத்துச்செல் என்றார்.

சிறுவன் ஆவலோடு ஓடிச் சென்று நாய்க்குட்டியை வாங்கித் தழுவிக் கொண்டான். பின் தன் 10 ரூபாயைக் கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, நாய்க் குட்டியை அணைத்து முத்தமிட்டவாறு ”உனக்கு நான் உள்ளேன் தோழா; யார் உன்னை ஊனம் என்றார்கள்” என்றவாறே விந்தி விந்தி நடந்து சென்றான்.

துறவறம்தான் சந்நியாசமா? – தென்கச்சி சுவாமிநாதன்

திருமணம் முடிந்து இல்வாழ்க்கையைத் துவங்கிய அந்தப் புதுமணப் பெண்ணுக்குக் குடும்பம் நடத்துவது குறித்த நிறைய சந்தேகங்கள்.  யாரிடம் யோசனை கேட்கலாம்? பக்கத்து வீட்டு மாமியிடம் சென்று உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்க மாமி! என்றாள்.

இதோ பாருடிம்மா… குழப்பமில்லாம சண்டை சச்சரவு இல்லாம குடும்பம் நடத்துறதுதான் புத்திசாலித்தனம். அது உன் கையில்தான் இருக்கு! என்றாள் அந்த மாமி.

“நான் என்ன செய்யணும்?’ – இளம்பெண் கேட்டாள்.

இப்பவே உன் புருசன்கிட்டே கண்டிப்பா சொல்லிடு…”

என்னன்னு….

இதோ பாருங்க… நீங்க ஏதாவது சின்னதா தப்பு பண்ண ஆரம்பிச்சாலும் நான் பத்ரகாளியா மாறிடுவேன்னு ஆரம்பத்துலேயே சொங்ஙக வெச்சுடு!

நீங்களும் இப்படித்தான் சொன்னீங்களா மாமி?

ஆமாம்! எங்களுக்குக் கல்யாணம் ஆன மறுநாளே சொல்லிப்புட்டேன். அப்புறம் என்ன ஆச்சு? நீங்க எதிர்பார்த்த மாதிரி அவரு நடந்துகிட்டாரா?

அதுதானே தெரியலை!

ஏன்? அப்பாவியாகக் கேட்ட புதுமணப் பெண்ணிடம் மாமி சொன்னாள் அன்னிக்கு வீட்டைவிட்டு ஓடினவர்தான்… இன்னமும் வீடு திரும்பலை! அந்த ஆள் அதற்கப்புறம் ஒரு சந்நியாசி ஆகிவிட்டார் என்று கேள்வி! ஆனால், சந்நியாசம் என்பது இதுவல்ல. சந்நியாசம் என்பது எதையும் விடுவதோ அல்லது துறப்பதோ அல்ல. ஒருவன் எல்லாவற்றையும் துறந்து வாழ்க்கையை விட்டு வெளியில் வருவதையே சந்நியாசம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையை விட்டு வெளியே வருவதால் வாழ்வுக்கும் சரி, வாழும் மனிதர்களுக்கும் சரி.. எந்தப் பயனும் இல்லை! என்பது ஞானிகளின் கருத்து. ஓ�ஷா என்ன சொல்கிறார் தெரியுமா? வாழ்க்கையை விட்டு வெளியே செல்லுஞுமம்ணூசடூநந்டூநியாசிகள், தங்களைத் தாங்களே சித்ரவதை செய்து கொள்கிறார்கள் என்கிறார். சந்நியாசிகள் பலரும் முகத்தைக் கோபத்துடன் உர்ர்ர் என்று வைத்திருப்பது இதனால்தான் என்கிறார் ஓ�ஷா. உண்மையான சந்நியாசம் என்பது வாழ்க்கையைத் துறப்பதல்ல; அதில் ஆனந்தமாக ஓர் பயணத்தை மேற்கொள்வது! இன்றைய சந்நியாசிகள் இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
————————————————–
நன்றி; சக்தி விகடன்
http://www.dinamalar.com/Supplementary/sakthivikadandetail.asp?news_id=85&dt=10-21-09

நிறைவாகும் வரை…கவிஞர் காசி ஆனந்தன்

நிறைவாகும் வரை…

கவிஞர் காசி ஆனந்தன், பல நல்ல குட்டிக் கதைகள் எழுதியிருக்கிறார்.

அவை புத்தகமாகவும் வெளி வந்திருக்கிறது. அதிலிருந்து ஒரு கதை;

நகைக்கடைக் கண்ணாடிப் பெட்டி ஒன்றில் இருந்து, கண்ணைப் பறிக்கும்

இரத்தினங்களைப் பறிக்கும் இரத்தினக் கல்லைப் பார்த்து, தெருவில் கிடந்த

குறுணிக்கல் பொறாமைப்பட்டது. ‘எனக்கு ஏன் மதிப்பில்லை? நானும்

ஒரு கல்தானே? நானும் ஒரு கல்தானே? என்று ஓலமிட்டது.

தெரு ஓரத்தில் கிடந்த கடப்பாறை கூறியது; ‘’ஏ குறுணி! காலம் முழுதும்

உன்னை நீயே பெரிதாக எண்ணிக் கொண்டு, பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய். ஆனால் அந்த இரத்தினக் கல் அப்படியா? தலை காட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத் தானே உருவாக்கிக்

கொண்டிருந்தது.

‘’அப்டியென்றால்…?’’ என்று இழுத்தது, குறுணிக் கல்.

கடப்பாறை சொன்னது,

‘’நிறைவாகும் வரை, மறைவாக இரு’’

நன்றி; அம்பலவாணன் தொகுத்த

’பல்சுவை விருந்து’ நூலிலிருந்து

நன்றி மறக்காத எறும்பு-(சிறுவர் கதை)

Print E-mail

ஒரு கட்டெறும்பு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது.

எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு.

மற்றொரு நாள்.

ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு.

ஆனால் புறாவோ இதை அறியாமல் வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு.

விரைந்து சென்று வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது.

கடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது.

அன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது.

எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.

நன்றி; http://www.muthukamalam.com/muthukamalam_siruvar%20pakuthi37.htm

சாந்திக்கா: சிறுகதை- லக்ஷ்மி

காலையில் கையில் பிரஷ்ஷோடு பல்துலக்க கொல்லையில் காலெடுத்து வைத்த என்னை வரவேற்றது கன்றின் கழுத்து மணியோசையும், சாந்திக்காவின் குரலும்தான். “இந்த வாட்டியும் ரெண்டே நாளுதானாம்மா?” என்றவளுக்கு சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினேன். வாரம் விட்டு ஒரு வாரம் நான் ஊருக்கு வருவதும், சாந்திக்கா இப்படி அலுத்துக் கொள்வதும் வாடிக்கைதான். ஏதேனும் பண்டிகை வந்தால் அந்த வாரயிறுதியோடு சேர்த்து விடுமுறை எடுத்துக் கொண்டு வரும்போது இந்தக் கேள்விக்கு பதிலாய் “இப்பவாவது நாலு நாள் இருப்பியா?” என்று கேட்பதும், இருப்பேன் என்று சொன்னதும் யாரும் நினைவு படுத்தாமலேயே இரவு எனக்குப் பிடித்த மருதாணியை அரைத்துக் கொண்டு வந்து தருவதும், தினசரி அம்மாவுக்கு கொண்டு வந்து தரும் மல்லிச்சரத்தின் நீளத்தை அம்மாவே மறந்தாலும் அதிகரித்துத் தருவதும் சாந்திக்காவின் ஸ்பெஷாலிட்டி.

எனக்குச் செய்வதை என்றில்லை எந்த வேலையையுமே ஒரு முறை சொல்லிவிட்டால் போதும், மறுமுறை நினைவுபடுத்த வேண்டுமென்பது தேவையேயில்லை. அவரின் 25 வயதுக்கு அவரின் நிதானமும், பொறுமையும், வேலைகளில் காண்பிக்கும் சாமர்த்தியமும் அபாரம்தான். அவரின் திறமைகளை கண்டு வியக்கும் போதெல்லாம் எனக்கு வரும் அதே கேள்வி இப்போதும் என்னுள்ளே எழுந்தது “இவரெப்படி அப்படி ஒரு சறுக்கலுக்கு ஆளானார்?”

அதற்குள் உள்ளிருந்து அம்மாவின் ஃபில்டர் காபி மணம் மூக்கை துளைக்க வேகவேகமாய் பிரஷ் செய்து முடித்து விட்டு உள்ளே செல்லத் திரும்பினேன். அப்போதுதான் உறைத்தது சாந்திக்காவின் வாலை காணவில்லை என்பது – வேறொன்றுமில்லை அவரது செல்ல மகன் கோபிதான். அவன் ஒரு தண்ணீர் பிசாசு – அக்கா பாத்திரம் கழுவும் போதும், துணி துவைக்கும் போதும் தண்ணீரிலேயே துளைந்து கொண்டிருப்பான். பின் அக்கா வீடு கூட்டும் போதும், மாட்டுக் கொட்டில் கூட்டும் போதும் புழுதியில் அளைவான்.

“ஏன்க்கா, தண்ணீல இப்படி அளையறானே, சளி கிளி பிடிச்சுக்கப் போவுது, வீட்டுல விட்டுட்டு வரக்கூடாதா?” என்றால் அவரின் ரெடிமேட் பதில், “அம்மா களையெடுப்புக்கு போயிருக்கு. யாருகிட்டம்மா விட்டுட்டு வரது? நீயொன்னும் கவலைப்படாதே, ஆண்டவன் அந்தஸ்துக்கு தகுந்தா மாதிரிதான் உடம்பையும் படைப்பான். அவனுக்கு ஒன்னும் பண்ணாதும்மா” என்று சிரித்துக் கொண்டே சொல்வார். ஆனாலும் வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வலி அவரது கண்ணில் தெரியும்.

சாந்திக்காவின் அப்பா உயிரோடு இருந்த போது அவர்கள் இருந்த கணபதி அக்ரஹாரத்திலிருந்து காரில் வந்து எங்களூர் கான்வென்ட்டில் படித்துக் கொண்டிருந்தவர் அவர். எட்டாம் வகுப்போடு அவரது கல்வி நின்று போனதின் காரணம் அவரது தந்தையின் திடீர் மரணம் மட்டுமல்ல, அவர் வைத்துவிட்டுப் போயிருந்த கடன் சுமைகளும்தான். வீடு, கார், நிலம் என எல்லாவற்றையும் விற்று அந்தக் கடன்களையெல்லாம் அரையும் குறையுமாய் கொடுத்து தீர்த்துவிட்டு தன் அண்ணன் குடும்பத்தோடு போய் ஐக்கியமானார் சாந்திக்காவின் அம்மா.

எங்கோ ஒடிக்கொண்டிருக்கும் நினைவுகளை ஒதுக்கி, “என்னக்கா, கோபி எங்க?” என்றேன். சாந்திக்கா சிரித்துக் கொண்டே, “அம்மா இப்பல்லாம் வீட்டோடதாம்மா இருக்காங்க, காட்டு வேலைக்கெல்லாம் போறதில்லை. அதுனால இந்த பயலையும் வீட்டுலதான் விட்டுட்டு வரேன். அத்தோட இப்பல்லாம் நானும் உங்க ஒரு வீட்டு வேலதான் செய்யறேங்கறதால சீக்கிரமவும் திரும்பி போயிடறேன். அவனுக்கும் ஸ்கூலுக்கு சீக்கிரமா கிளம்பி போகணும்னெல்லாம் ஞானோதயம் வேற வந்திருக்கு” என்று மலர்ந்து சிரித்தவாறே வேலையை தொடர்ந்தார். நானும் காபி ஜபத்தோடு உள்ளே திரும்பினேன். மதியம் சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அக்கா சொன்னதின் முழுப் பொருளும் உறைத்தது.

“ஏம்மா, சாந்திக்கா இப்பல்லாம் நம்ம வீட்டுல மட்டுந்தான் வேல செய்யறாங்களாம். அவங்க அம்மா கூட காட்டு வேலைக்கெல்லாம் போறதில்லைன்னாங்க. எப்படி சமாளிக்கறாங்க?”

“இந்தப் பக்கத்துலயும் இப்பல்லாம் இந்த மகளிர் சுய உதவி குழுவெல்லாம் ரொம்ப மும்மரமா நடக்குதும்மா. இவ அதுல முன்னாடி நிக்கறா. முதல்ல மத்தியானத்துல நம்ம கலைமணி சார் வீட்டுக்காரம்மா கிட்ட தையல் கிளாஸ் போனா. இப்ப அந்த குழுவுல ரொட்டேஷன்ல கிடைக்கற காச வச்சு ஒரு செகன்ட் ஹான்ட் தையல் மிஷின வாங்கி போட்டிருக்கா வீட்டுல. நல்லா தைக்கறா. அவ சுறுசுறுப்புக்கு கேக்கணுமா? மொதல்ல அவ மத்த வீடுங்கள்ள செய்யறத நிறுத்தினா. இப்ப அம்மாக்காரியையும் காட்டுக்கும் களத்துக்கும் போக வேணாம்னு வீட்டோட உக்கார வச்சிட்டா. இன்னும் சொல்லப்போனா அவ அம்மா இப்ப சாந்திக்கு நல்ல ஒத்தாசையா இருக்கா – ஊக்கு கட்டுறது, ஹெம்மிங்க் போடுறதுன்னு. நல்ல வருமானம். இருந்த பழைய கடனையெல்லாம் சிறுக சிறுக அடச்சிட்டா. புள்ளய நல்லா படிக்க வச்சுடனும்ன் ஒரு வெறின்னே வெச்சுக்கோயேன். ரெண்டு மூணு சீட்டு கட்டறா. நம்ம பக்கத்து வீட்டு மாமிகிட்ட நாந்தான் சொல்லி விட்டேன். நானே இப்பல்லாம் அவகிட்டதான் ஜாக்கெட் தைக்க கொடுக்கறேன். சுடிதார்லாம் கூட நல்லா தைக்கிறேன்னு அவளே சொன்னாம்மா. உனக்கும் எதுனா கொடுக்கணும்னா மெட்ராஸ்ல நூறு எரணூறூன்னு காச வீணடிக்காத. ஊருக்கு வரப்ப இவகிட்டயே கொண்டு வந்து குடு. அவளுக்கும் ஒரு லாபம், நமக்கும் ஒரு லாபம். என்ன சொல்றே?”

“பரவாயில்லையேம்மா. கேக்கவே சந்தோஷமா இருக்கு.”

“ஆமாம்மா, நல்ல புத்திசாலிப் பொண்ணுதான், என்னமோ இன்னும் கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருந்தா இன்னிக்கு அவ இருக்க வேண்டிய இடமே வேற. எல்லாம் தலையெழுத்துதான் போ…”

பெருமூச்சோடு எழுந்து அம்மா காபிக்கடையை பார்க்கப் போனார். நானும் பின்னாலேயே போய் சமயற்கட்டின் பக்கவாட்டு கதவைத் திறந்து வைத்துக் கொண்டு அதற்கு அருகில் அமர்ந்தேன். வேப்பமரம் கண்ணில் பட்டதும்தான் முன்னெல்லாம் பின் மதியம் 2 மணிக்கெல்லாம் பூக்கடையிலிருந்து உதிரி பூக்களை அளந்து வாங்கி கொண்டு வந்து அங்கே வைத்துதான் சாந்திக்கா கட்டிக் கொண்டிருப்பார் என்பது நினைவுக்கு வந்தது.

அம்மா இந்த பக்கவாட்டு கதவை திறந்து வைத்துக் கொண்டு வேப்பமரத்து மேடையிலோ இல்லை இங்கே இந்த வாசற் படியிலேயே உட்கார்ந்து கொண்டு அவரோடு சாவகாசமாக பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அப்பா எழுந்து வந்ததும் கலக்கப்படும் காபியில் சாந்திக்காவுக்கும் அருகிலேயே புழுதியில் விளையாடிக் கொண்டிருக்கும் கோபிக்கும் ஒரு டம்ப்ளர் நிச்சயம் உண்டு. திரும்பி அம்மாவிடம் “அப்போ அக்கா இப்பல்லாம் பூவும் கட்டறதில்லையா?” என்றேன்.

“ஆமாம்மா, ஆனாலும் நம்ம வீட்டுக்கும் கோவிலுக்குமான பூவை மட்டும் அளந்து வாங்கிட்டு வந்து கட்டி பையங்கிட்டயோ இல்லை அவ அம்மாட்டயோ கொடுத்து விட்ருவா. அட, அவட்ட இன்னிலேர்ந்து நீ இருக்கற வரைக்கும் கொஞ்சம் கூடுதலா பூ கொடுத்துவிடச் சொல்ல மறந்துட்டேன் பாரு…”

ஆனால் அம்மா நினைவு படுத்தாவிட்டாலும் கூட அக்கா வழக்கம் போல ஞாபகமாய் அதிகப்படி பூவை கொடுத்து விட்டிருந்தார். புன்னகையோடு அதை சாமி படங்களுக்கு சாத்திவிட்டு விளக்கேற்றினார் அம்மா. அடுத்தடுத்த முறை ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அக்காவின் முன்னேற்றம் பற்றிய செய்திகள் அடுக்கடுக்காய் காதில் விழுந்து கொண்டிருந்தது.

முதல் மிஷினின் கடனை அடைத்து எம்ப்ராயிடரி வசதிகளோடு கூடிய அடுத்த மிஷினும் வாங்கியிருந்தார். கும்பகோணத்தில் சில பெரிய ஜவுளிக் கடைகளிலிருந்து ப்ளெயின் புடவைகளை வாங்கி வந்து எம்பராயிடரி வேலைப்பாடுகளுடனான புடவைகளாக மாற்றி அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார். தனக்கு கீழே ஒரு பெண் வேலை செய்யுமளவு வளர்ந்த பின்னும் கூட அம்மாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சி காரணமாய் எங்கள் வீட்டுக்கு மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தார்.

“வேணாம்மா, நான் வேற யாருன்னா ஏற்பாடு பண்ணிக்கறேன்” ன்னு அம்மாவே சொல்லியும் கூட, “உங்களுக்கு வேறென்ன செஞ்சு நான் பட்ட கடனை அடைக்க முடியும்மா? இதுல ஒன்னும் எனக்கு கௌரவம் குறைஞ்சுடப் போறதில்லை” என்று சொல்லி வாயடைக்க வைத்துக் விட்டுப் போய்க்கொண்டே இருந்தார்.

ஒரு முறை ஊருக்குப் போயிருந்த போது பின் புற மாடி வராண்டாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். கீழே அம்மாவும், சாந்திக்காவும் பேசிக் கொண்டிருந்ததும் காதில் விழுந்து கொண்டிருந்தது.

gஏம்மா, நேத்து ராத்திரி உங்க வீட்டுல எதோ சத்தமாயிருந்ததே, என்னாச்சு? நான் முழிச்சு, என்னான்னு புரிஞ்சுகிட்டு இவரை எழுப்பி, ஓடுங்கன்னு சொன்னேன். இவரும் மேல்துண்டை தேடி எடுத்து போட்டுகிட்டு, கதவை திறந்து கீழே இறங்கும் முன்னாடி உங்க வீட்டுல சத்தம் முடிஞ்சு லைட்டெல்லாமும் அணைஞ்சுடுச்சு. சரி, அந்நேரத்துக்கு மேல வந்து விசாரிக்க வேணாமேன்னு திரும்பி வந்துட்டார். என்னதாம்மா பிரச்சனை? துரையோட காலனிக்குள்ள வந்து பிரச்சனை பண்ற அளவுக்கு யாரு இருக்கா? துரையானும் வந்திருந்தாரா?”

“ஆமாம்மா, துரையண்ணன் வந்துதான் அந்த ஆளை மிரட்டி அனுப்பினாரு. “

“அந்த ஆளுன்னா, கோபியோட அப்பனா?” என்ற அம்மாவின் வியப்பு குரலிலேயே தெரிந்தது.

“ஆமாம்மா” என்ற சாந்திக்காவின் குரல் கம்மியது.

“இத்தனை வருஷம் கழிச்சு, அதும் அர்த்த ராத்திரிலதான் உன் நினைப்பு வந்துச்சாக்கும் அவனுக்கு.”

“என்னமோம்மா, அன்னிக்கு ஊர்லேர்ந்து கிளம்பி கும்பகோணத்துக்கு ஒரு வேலையா போனாராம். போன இடத்துல ரொம்ப நேரமாகவும், நம்மூர் வந்து சேரவே பத்தாயிருச்சாம். அந்நேரத்துக்கு மேல ஊருக்குப் போக முடியாதில்ல? சைக்கிள்லயும் வரலை போல. மினி பஸ்ஸெல்லாம் 10 மணியோட சரி இல்ல? அப்பத்தான் புள்ள நினைப்பு வந்துச்சாம். தங்கவும், திங்கவும், தூங்கவும் காசு செலவில்லாமலும் இருக்கும். அத்தோட ஒரு நாள் பொண்டாட்டிய விட்டுட்டு இருக்கற தவிப்பும் இல்லாம இருக்குமில்ல?”

“அது சரி, இப்படி வந்துட்டு போறப்பெல்லாம் எட்டி பாத்துட்டு போறதுக்கு நீ என்ன லாட்ஜா நடத்திகிட்டிருக்க? கோபி வயத்துல இருந்தப்ப ஊர் பஞ்சாயத்துல உன்னைய அதுக்கு முன்னாடி பாத்ததேயில்லைன்னு சொன்னவன் தானே அவன்? இப்ப மட்டும், உன்னை பாத்ததும் பழகினதும் ஞாபகத்துக்கு வந்துதாமா அந்த துஷ்யந்தனுக்கு?”

“அப்பன் செத்து நின்னப்ப அடைக்கலம் கொடுத்த சொந்த தாய் மாமனோட பொண்ணு வாழ்கையவே பங்கு போட பாத்தியாடி, நன்றி கெட்டவளேன்னு ஊரே தூத்திச்சு என்னைய. ஆனா, அந்த மாமனோட மாப்பிள்ளை இந்த பிள்ளைக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லைன்னு சத்தியம் பண்ணினாரு. ரெண்டையும் ஒத்துக்கிச்சு எங்க ஊரும், ஊர் பஞ்சாயத்தும். எப்படின்னுதான் எனக்கு புரியலை. நான் பண்ணினதும் தப்புதான், இல்லங்கல. ஆனா, நான் மட்டும் தனியா செய்யக் கூடிய தப்பா அது? என்னமோம்மா, இவங்களும், இவங்க ஞாயமும். உள்ள வந்தா குடிய கெடுத்துருவேன்னு ஊர்ல எல்லாரும் பயந்துகிட்டிருந்தப்ப, நீங்க மட்டுந்தானேம்மா என்னைய வீட்டுல உள்ளற விட்டு வேலை செய்ய வச்சு ஒரு வருமானத்துக்கு வழி செஞ்சீங்க. துரையண்ணங்கிட்ட பேசி வாடகைக்கு வீடு பிடிச்சு விட்டீங்க. அதெல்லாம் இல்லைன்னா, இன்னிக்கு நானும் என் அம்மாவும் என்ன கதில இருந்திருப்போம்னு எனக்குத் தோணவே இல்லை.

யோசிச்சு பாத்தா எனக்கும் இப்பத்தான் இந்த ஆளோட கணக்கெல்லாம் புரியுதும்மா. அன்னிக்கு பஞ்சாயத்துல என் பிள்ளைதான்னு ஒத்துகிட்டிருந்தா, எனக்கும் என் பிள்ளைக்குமான செலவெல்லாம் அந்தாள் தலைல்ல இல்ல விழுந்திருக்கும்? ஆனா இன்னிக்கு நான் என் காலை ஊணி நின்னுட்டேன். இனி வந்துட்டு போறா மாதிரி இருந்தா எல்லா விதத்துலயும் சவுரியம் பாருங்க… அதான் இப்ப என் நினைப்பு வந்திருக்கு. ஆனா இன்னமும் நான் அன்னிக்கு இருந்தா மாதிரியே விவரமில்லாம இருப்பேன்னு நினைச்சார் பாருங்க, அதான்மா எனக்கு ஆறலை. எனக்கும் வேகமும், ஆசையும் இருக்குதான். ஆனா, ஒரு நாள் உணர்ச்சிவசப் பட்டுட்டு பின்னாடி ஆயுசுக்கும் அவமானப் படற அளவுக்கு புத்தியில்லாதவளாவே நானும் இருந்துட முடியுமாம்மா?”

அவர்களின் பேச்சு என்னை படிக்கவிடாமல் என்னவோ செய்தது. படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விடவும் சாந்திக்கா போன்ற சொரணையுள்ள மனிதர்களிடம் கற்றுக் கொள்ள நிறையவே இருப்பதாக தோன்றியது எனக்கு.

——————————–

நன்றி;

http://www.vikatan.com/vc/2009/wmalar/lakshmistory050309.asp

உதவி ஒரு பக்கக் கதை

அத்தே டெய்லர் கடைவரைப் போயிட்டு அப்படியே காய்கறியும்
வாங்கிட்டு வரேன். கமலா வந்தால் பாத்திரம் தேச்சு, கிச்சனைக்
கிளின் பண்ணச் சொல்லுங்க நான் வரேன்’ என்று பர்சையும் ஒரு
பேக்கில் பிளவுஸ் பிட்டுகளையும் எடுத்துக் கிளம்பினாள் சித்ரா.

மதியம் பை நிறைய காய்கறிகளுடன் வீட்டுக்குள் வந்தாள்.
ரூமிலிருந்து வெளியே வந்த சித்ராவின் மாமியார், சித்ரா, கமலா
வரவர ரொம்ப மோசமாக பாத்திரம் தேய்க்கிறாள். வாணலியில்
எண்ணெய்க் கறையே போகலே. நேரத்துக்கு வான்னாலும் கேட்க
மாட்டேங்கறா. வேலையும் சுத்தமில்லே. நீதான் ஒண்ணும்
கண்டுக்கிறதில்லை என்று அலுத்துக் கொண்டார்.

சித்ரா புன்சிரிப்போடு வழக்கமாக நடக்கும் விஷயம் என்பதால்
காதில் வாங்காதது போல் உள்ளே சென்றாள்.

சித்ராவின் மாமியார் இரண்டு மாதம் வெளியூரிலிருக்கும் மகள் வீட்டில்
தங்கிவிட்டு அன்றுதான் வந்திருந்தார். ஏன் சித்ரா நான் ஊரில்லாதப்ப
உனக்கு திடீரென ஆபரேஷன் நடந்ததே, எப்படி சமாளிச்சே என்றார்.

கமலாதான் அத்தே பொறுப்பா நேரத்துக்கு வந்து துணி துவைக்கிறது
முதல் கிச்சன் வேலை வரை செய்தாள். நீ போய் படுத்து ரெஸ்ட்
எடும்மா. நானே பார்த்து எல்லா வேலையையும் முடிச்சுட்டுப் போறேன்
என்று ரொம்பவே உதவியா இருந்தாள்.

சம்பளத்துக்காக இல்லாமல் சமயத்துக்கு உதவும் அவளின் அந்தக்
குணத்தினாலேதான் அவள் செய்யும் வேலையில் சிறு குறை இருந்தாலும்
அது பெரிசாத் தெரியலை எனக்கு என்று சித்ரா பேசப் பேச வாயடைத்து
நின்றார் அவளின் மாமியார்.

—————————————
- கே.தெய்வநாயகி
நன்றி; குமுதம்

மனைவியிடம் பாராட்டுப் பெற்ற விவசாயி!

அந்த ஊரில் ஒரு உழவன் இருந்தான். அவன் அன்று ஒரு
நாள் சந்தைக்குச் சென்றான். சந்தையில் ஆயிரம் ருபாய்
கொடுத்து ஒரு மாடு வாங்கினான். ஊர் திரும்பும் வழியில்
அவனைச் சந்தித்த ஒருவன், இந்த மாட்டை இழுத்துக் கொண்டு
ஏன் தொல்லைப்படுகிறீர்கள்? இதற்குப் பதில் என் ஆட்டை
வாங்கிக் கொள்ளுங்கள், நிறைய பால் தரும் ஒரே ஆண்டில்
நிறைய குட்டிகள் போடும்” என்றான்.

அவனும் மாட்டைக் கொடுத்து விட்டு ஆட்டை வாங்கிக்
கொண்டு புறப்பட்டான். சிறிது நேரம் சென்றதும் கோழி
ஒன்றுடன் வந்த ஒருவன், “இந்தக் கோழி நாள்தோறும்
முட்டை இடும், வளர்ப்பதும் எளிது. உங்கள் ஆட்டிற்கு
இதை மாற்றிக் கொள்வோமா?” என்று கேட்டான்.

ஆட்டைக் கொடுத்துவிட்டுக் கோழியுடன் புறப்பட்டான்
அவன். ஊருக்கு அருகில் வந்து கொண்டிருந்த அவனைச்
சந்தித்தான் ஒருவன். தன் கையிலிருந்து முட்டையைக் காட்டி,
“இதை உடனே சமைத்துச் சாப்பிடலாம், அதனால் கோழிக்கு
மாற்றிக் கொள்வோமா?” என்று கேட்டான். அவனும் உடனே
கோழியைத் தந்துவிட்டு முட்டையைப் பெற்றுக் கொண்டான்.

இந்தச் சம்பவத்தை வேடிக்கைப் பார்த்த ஒருவன்,
“என்ன இவ்வளவு பெரிய முட்டாளாக இருக்கிறாய்? மாட்டைக்
கொடுத்து முட்டையுடன் வரும் உன்னைக் கண்டு உன் மனைவி
கோபம் கொண்டு திட்டப்போகிறாள்” என்றான்.

“என் மனைவி என்னைப் பாராட்டுவாளே தவிர, ஒருநாளும்
திட்டமாட்டாள்” என்றான்.

“1000 ருபாய் பந்தயம், உன் மனைவி உன்னைத் திட்டுவாள்”
என்றான் அவன்.

“சரி, நீயும் என்னுடன் வா” என்றான் உழவன்.

இருவரும் உழவனின் வீட்டை அடைந்தனர். கணவனின் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருந்த மனைவியிடம் நடந்ததை எல்லாம் சொன்னான்.

“நல்ல காரியம் செய்தீர்கள். யார் மாட்டைப் பார்த்துக் கொள்வது?
அதுபோல் ஆடு வளர்ப்பது மட்டும் சாதாரண செயலா என்ன?
கோழி இங்கே இருந்தால் ஒரே குப்பையாகிவிடும், உடனே
சாப்பிடுவதற்கு முட்டை வாங்கி வந்தீர்களே, உங்கள் திறமை
யாருக்கு வரும்” என்று பாராட்டினாள் அவள்.

உழவனிடம் வந்தவன் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஆயிரம் ருபாயைத்
தந்தான். “நீ செய்தவை முட்டாள்தனமான செயல்கள், ஆனால் உன்
மனைவி பாராட்டுகிறாள். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே”
என்றான் அவன்,

அதற்கு, “நான் என்ன செய்தாலும் பிறர் எதிரில் என்னை என் மனைவி
குறை கூறமாட்டாள், பாராட்டவே செய்வாள். இதை அறிந்தே நான்
பந்தயம் கட்டினேன்” என்றான் அவன்.!

—————————————————————————————–
நன்றி
http://satyamargam.com/Story/Page-3

அன்புச்சிறை !

“என்னங்க  அழறிங்க?”
“இது நமது ஐம்பதாவது திருமண நாள்!”
“அதுக்காக..அழணுமா?
“உணர்ச்சிவசப்படறேன்…அவ்வளவுதான்!”
“ஓ அப்படியா?”
“ஐம்பதாண்டுக் காலமா உன்னுடைய அன்புச் சிறைக்குள்ளே
அடைபட்டுக் கிடக்கிறேன்!”

”திடீர்னு ஏன் சிறை உதாரணம் ஞாபகத்துக்கு வருது!”
”இப்பதான் பேப்பர்லே படிச்சேன். இங்கிலாந்துல மிதக்கும்
சிறைச்சாலைகள் வரப்போகுதாம்!”

அது எப்படி?

”உபயோகப்படாத போர் விமானம் தாங்கிக்கப்பலை
சிறைச்சாலையா மாற்றலாமான்னு பார்க்கறாங்களாம்!”
”எதுக்காக அப்படி?”
”இட நெருக்கடி…அதே நேரம் கைதிகளின் எண்ணிக்கை அதிகம்…
என்ன பண்றது…அதனால கப்பல்ல கைதிகளை வச்சுடறதுன்னு
முடிவு பண்றாங்க”

”எவ்வளவு பேரை அடைக்க முடியும் அதுல?”
”1500 பேர் வரைக்கும் அதுல இருக்க முடியுமாம்!”
”கைதிகள் சுலபமா தப்பிக்க முடியாது!”
”என்னை மாதிரி!”
”என்ன சொல்றீங்க?”

”உனக்கு ஞாபகம் இருக்கா…50 வருஷத்துக்கு முன்னாடி நீயும்
நானும் ஒரு குதிருக்குள்ளே ஒளிஞ்சிருந்தப்போ,
உங்கப்பா நம்மை கையும் களவுமா பிடிச்சுட்டார்…
அப்போ அவர் என்ன சொன்னார்…’’மரியாதையா என் மகளைக்
கல்யாணம் பண்ணிக்கோ! இல்லேன்னா உன்னை 50 வருஷம் உள்ளே
தள்ளிப்புடுவேன்….கல்யாணமா…ஜெயிலா இப்பவே முடிவு
பண்ணிக்கோ’’ன்னார்

நான்…உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா முடிவு பண்ணிட்டேன்…
அது…அது…அதனால…”

என்ன இது மறுபடியும் அழறீங்க…?

அது வந்து ஒண்ணுமில்ல… அன்றைக்கு நான் ஜெயில்னு முடிவு
எடுத்திருந்தா இன்றைக்கு நான் விடுதலை ஆயிருப்பேன்.
இல்லையா…அதை நினைச்சுப் பார்த்தேன்!

நன்றி
தென்கச்சி.கோ.சுவாமிநாதன்

« பழைய வரவுகள்