முதல் சம்பளம்! – ஒரு பக்க கதை

அரவிந்தனுக்கு அன்று முதல் சம்பளம். இவ்வளவு நாட்களாக நிரந்தர வேலையில்லாததிருந்த அரவிந்தனுக்கு ஒரு நல்ல கம்பெனியில் நிரந்தர வேலை கிடைத்தது. கவிதாதை திருமணம் செய்த பின்னால் தான்.

ஆவலோடு காத்துக்கொண்டிருந்தள் அரவிந்தனின் அம்மா. முதன்முதலில் வாங்கும் சம்பளக் கவரை தன்னிடம் தான் கொடுத்து ஆசி வாங்குவான் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.

கவிதாவின் கனவுக்கும் குறைவில்லை.

என்ன இருந்தாலும் நான் வந்த பின்னாடி தானே அவருக்கு நிரந்தர வேலை வந்தது. அதனால முதல் சம்பளத்தை என் ராசியான கையில் தான் கொடுப்பார் என்ற கற்பனையில் மிதந்து கொண்டிருந்தாள் கவிதா.

மாலை நேரம், அரவிந்தன் வந்தான். சம்பளக்கவரை எடுத்தான். இருவரின் பார்வையும் ஆவலோடு எதிர்நோக்கின. விடுவிடுவென்று உள்ளே சென்றவன், போன வேகத்தில் திரும்பி வந்தான்.

அப்பாடா… நிரந்தர வேலை கிடைச்சா முதல் சம்பளம் முழுவதும் திருப்பதி உண்டியலில் போடுவதா வேண்டிக்கிட்டேன். சம்பளக்கவரை பூஜை அறையில் வைக்கவும் தான் எனக்கு நிம்மதியே வந்துச்சு. நிம்மதி பெருமூச்சோடு கூறினான் அரவிந்தன்.

———————————————————-

எஸ்.ராஜா

நன்றி; குமுதம்

நரித் தந்திரம்!

ஒரு காடு. அங்கே ஒரு சிங்கம்.
அந்தச் சிங்கம் ஒரு கூட்டம் போட்டுது. எல்லா மிருகமும் வந்தாச்சு.
முதல்லே ஒரு குரங்கைக் கூப்பிட்டுது.

‘’இப்படிக் கிட்டே வா…என் உடம்பை முகர்ந்து பார்…எப்படி இருக்கு?’’ன்னு
கேட்டுது.

குரங்கு வந்து முகர்ந்து பார்த்துட்டு …’’வாசனை நல்லா இல்லீங்க…
கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு!’’ன்னுது.

சிங்கத்துக்கு கோபம் வந்துட்டது. ‘’என் உடம்பைப் பத்தியா அப்படிச்
சொல்றே’’ன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது.
குரங்கு சுருட்டிக்கிட்டு விழுந்துட்டது.

அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டது…. ‘’நீ வா…வந்து பார்த்துட்டு
சொல்லு’’ ன்னது.
கரடி….அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே  வந்தது.

சிங்கத்தை முகர்ந்து பார்த்த்து…’’ஆகா …ரோஜாப்பூ வாசனை!’’ ன்னு
பொய்யா சொல்றே?ன்னு ஓங்கி ஒரு அறை.
அதுவும் சுருட்டிக்கிட்டு விழுந்தது.

அடுத்த படியா ஒரு நரியைக்
கூப்பிட்டது. ‘’நீ வந்து சொல்லு…நீதான் சரியாச் சொல்லுவே!’’
நரி…குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்துது. சிங்கத்தை
முகர்ந்து பார்த்த்து. அப்புறம் சொல்லிச்சு; ‘’மன்னிக்கணும் தலைவா,
எனக்கு மூணு நாளா ஜலதோஷம்!’’

————————————————————————————————–

இதுதான் நரித் தந்திரம்ங்கிறது.
இன்றைய மனிதர்களுக்கு இந்த தந்திரம் அதிகமாத் தேவைப்படுது.
…..அடிக்கடி தேவைப்படுது…
————————————————————————

படித்ததில் பிடித்தது

நலமறிய ஆவல் – ஒரு பக்கக் கதை

திருநெல்வேலியில் உள்ள மகளிர் கல்லூரியில் சுவேதா சேர்ந்து ஒரு வாரம் ஆகிய நிலையில் அப்பா கந்தவேலிடமிருந்து கடிதம் வந்தது.

இன்லேண்ட் லெட்டர்.

“”அன்புள்ள மகள் சுவேதாவிற்கு ”என ஆரம்பித்து நலம் விசாரித்தல் மற்றும் பல நிகழ்வுகள் என பக்கத்தை நிரப்பியிருந்தார்.

செல்போனில் அப்பாவைத் தொடர்பு கொண்டாள் சுவேதா.

“”என்னப்பா இது ? செல்போன்லே கூப்பிடாம, லட்டர் எழுதி இருக்கீங்க ?”

“கூப்பிட்டு  பேசி இருக்கலாம்மா. ஆனால், கடிதம் எழுதி நலம் விசாரிக்கிறதுல இருக்கிற சுகம், செல்போனில் கேட்கிற குரலில் இல்லை சுவேதா. அது மட்டுமில்லாமல், தபால்காரரா வேலை பார்க்கிற நானே, நான் சார்ந்த துறைக்கு மதிப்புக் கொடுக்கலைன்னா எப்படிம்மா ?”

பேசப் பேச அப்பாவின் தொழில் பக்தியை எண்ணி மெய்சிலிர்த்தாள் மகள் சுவேதா.

————————————————————–

நன்றி; குமுதம்

கண்ணே! (சிறுகதை) – க.ப.அறவாணன்

ரயிலை விட்டு இறங்கி, ஆட்டோக்காரருடன் ஒரு குட்டிச் சண்டையே போட்டு,
வீட்டில் நுழைந்தவுடன், அம்மா உள்ளம் நைந்து கொட்டிய வார்த்தை, சட்டி
நிறைய கொதிக்க வைத்த ரசத்தை முகத்தில் வீசி அடித்தது மாதிரி சுட்டது.

“”எல்லாம் உன்னாலடி… அதோ பார், அவர் கிடப்பதை! பேச்சிழந்து, நடக்கக்
காலிழந்து, ஆவேசக் கை வீச்சிழந்து கிடப்பதைப் போய்ப் பார். அப்பவாவது
உனக்குப் புத்தி வருமா?”

“”என்னம்மா… என்னென்னவோ பேசுறே… அப்பாவுக்கு உடம்பு சரியில்லேன்னு
நீ போன்ல சொன்ன அடுத்த நிமிஷத்துல, ஓடோடி வந்திருக்கேன்.”

பள்ளிக்கூடத்துக்குப் போன ரெண்டு குழந்தைகளும், திரும்பி வரும்போது அம்மாவத்
தேடுமே என்பதையும் பாக்கலை… ஆபீசுக்குப் போன அவருக்கு, “அப்பாவுக்கு
உடம்பு நல்லால்ல… சீரியஸ் என்று அம்மா போன்ல சொன்னாங்க… நா உடனே
பொறப்பட்டு போறேன்… கொஞ்ச சீக்கிரம் வீட்டுக்கு வந்து குழந்தைகளைப் பாத்துக்குங்க.
அப்பாவப் பாத்த அடுத்த கணத்துல நான் திரும்பி விடுவேன். அப்பா இல்லேன்னா
நான் இல்லீங்க!’ என்று கண்கள் நீரில் கரையச் சொல்லிவிட்டு வந்த என்னைப் பாத்து,
“வா… காபி குடி… சாப்பிட்டியா…’ என்று ஒரு வார்த்தை கூட பேசாம, பொறுமைக்குப்
பெயர் போன அம்மா இப்படிப் பொறிந்து கொட்றாங்கன்னா, ஏதோ விஷ யம் இருக்கு…

முதல்ல அப்பாவப் போய்ப் பாத்துட்டு வந்துருவோம். அப்புறம் வந்து அம்மாகிட்ட
விவரமாப் பேசிக்கலாம் என்று நினைத்தேன்.

அப்பா வழக்கமாக இருக்கும் மாடி அறை நோக்கிப் பரபரத் தேன். உண்மையில்
கையும், காலும் நடுநடுங்கின. என்னவோ ஏதோ தெரியலை… அப்பாவுக்கு என்ன ஆச்சு…
அவர் பிழைக்கவே மாட்டாரா என்ற விபரீத நினைப்புகள் மனதில் மாறிமாறி அலை
பாய்ந்தன. அப்பாவின் அறை உள்ளே நுழைந்தேன்.

“வாம்மா கண்ணு’ என்று சொல்கிற அவர் வாயிழந்து கிடந்தார். கண்ணால் மட்டும்
வாசலில் நுழைந்த என்னையே பார்ப்பது போல எனக்கு இருந்தது.

என்ன நடந்தது அப்பாவுக்கு? அவருடைய நிலையைப் பார்க்கும் போது, அவரைக்
கடுமையான நோய் செயலிழக்க வைத்திருக்கிறது என்பது தெரிந்தது.
நல்ல வேளை; உணர்விழக்க வைக்கல.

ஓயாமல் எழுதும் அவருடைய வலக்கை இப்பொழுது கட்டிலை ஒட்டி நிரத்தர ஓய்வை
எதிர்பார்த்துப் படுத்துக் கிடந்தது. வீசி நடக்கும் அவருடைய கால்கள் அந்த
வேகத்தை இழந்து கிடக்கின்றன. அவர் பேச முடியாமல் நாக்கால் குழறுவதும்,
பேசத் துடிப்பதும் நன்கு தெரிந்தது.

அவர் கண்களில் இருந்து வரும் கண்ணீர் மட்டும் நிற்காமல் என்னைப் பார்த்து
என்னென்னவோ பேசுகிறது… கண்ணீரும் பொருள் பொதிந்த பாஷை தான்
போலும். அதற்கும் விசேஷ அர்த்தம் இருக்கிறது.

கொஞ்ச நேரம் அப்பாவின் அருகிலேயே நின்று, கண்கள் கலங்க அவர் பக்கத்தில்
கட்டிலில் அமர்ந்து, அவர் நெற்றி, கன்னம், கழுத்து, மார்பு, கை, கால், பாதம்
வரை மெல்ல நீவி விட்டு, மீண்டும் படியிறங்கி அம்மா இருக்கும் அடுக்களைக்குள்
பயம் கவிய நுழைந்தேன்.

என் கண்களில் கண்ணீர் பொங்கி வழிவதையும், அதைக் கை விரல்களால் துடைத்துக்
கொண்டே நான் தளர்ந்த நடையில் வருவதையும் அம்மா கவனித்திருக்க வேண்டும்.
இப்போது அம்மாவின் கையில் எனக்குப் பிடித்த “லியோ காபி’ இருந்தது.
அது எனக்காக அம்மா போட்டது.

“”என்னம்மா… என்ன நடந்தது… அப்பாவப் பாக்கவே தாங்கலை,” என்று தேம்பினேன்.

காபியை என் கையில் கொடுத்து விட்டு அம்மா சொன்னாள்…

“”ஒரு வாரத்துக்கு முன்னால நீ இங்க வந்தல்ல… அப்போ என்ன நடந்ததுன்னு
ஞபாகப்படுத்திப் பாரு.”

“”என்ன நடந்தது? எனக்கு வேலை கிடைத்ததைக் கேள்விப் பட்ட என் கல்லூரித்
தோழிகள் என்னைப் பாராட்ட வந்திருந்தாங்க. அவுங்க அத்தனை பேருக்கும்
பண்டங்களும், பலகாரங்களும் வைத்துக் காபி நீதான குடுத்த.”

“”இன்னும் கொஞ்சம் நெனச்சுப் பாரு,” என்றாள் அம்மா.

“”ஒண்ணுமே நடக்கலயேம்மா. அப்பாவும், அவங்களோட கலகலப்பாய்
நல்லாப் பேசுனாங்களே.”

“”அப்பா அவங்களோட பேசும் போதுதான் அது நடந்தது.”

“”கொஞ்சம் விவரமா பேசும்மா. வேதனை மண்டியிருக்கிற சமயத்தில் விடுகதை
போடாத. அப்பா ஒடம்பு சரியில்லை என்பதையே என்னால் தாங்கிக்க முடியல.
அதற்கு மேல அதற்குக் காரணம் நான்தான்னு நீ சொல்றதக் கேட்கிற போது
தாங்கிக்கவே முடியல. தயவு செய்து வெளிப்படையாச் சொல்லு.”

“”அன்னைக்கு அப்பா ஒன்னக் கூப்பிட்டாங்க.”

“”ஆமாம், கூப்பிட்டாங்க…”

“”எப்படிக் கூப்பிட்டாங்க?”

“”எப்போதும் கூப்பிடறது போலக் கூப்பிட்டாங்க.”

“”எப்போதும் எப்படிக் கூப்பிடுவாங்க?”

“”குட்டிக்கண்ணு, குட்டிக்கண்ணுன்னு கூப்டுவாங்க.”

“”அங்கதாண்டி வந்தது வெனை. அன்னக்கி அப்பா உன்னக் குட்டிக்கண்ணுன்ணு
கூப்பிட்டபோது, நீ என்ன சொன்ன? அத்தனை பேரு முன்னால எப்படி நடத்துக்கிட்ட?
ஞாபகப்படுத்திப் பாரு.”

“”பின்ன எப்படிம்மா? மத்தவங்க முன்னிலைல அப்பா எனக்குச் செல்லமா வச்ச
பேரைச் சொல்லி, “கண்மணி’ன்னு கூப்பிடாம அத்தனைப் பேருக்கும் முன்னால,
“குட்டி கண்ணு… குட்டி கண்ணு’ன்னு கூப்பிட்டாங்க. சின்ன வயசிலேயே அப்பா
அப்படிக் கூப்பிடறதக் கேட்ட என் பள்ளிக்கூடத் தோழிங்க பள்ளிக்கூடத்தில
என்ன, “கன்னுக்குட்டி, கன்னுக்குட்டி’ என்று கேலி பண்ணுவாங்க.

“”நான் படிச்சு பெரியவளாகி, கல்யாணமாகி, ரெண்டு குழந்தைகளைப் பெத்து
வாழ்ந்துகிட்டு இருக்கிறபோது, பத்து பேர் மத்தியில அப்பா அப்படிக் கூப்பிடலாமா?
நீயே சொல்லு… அதான், எனக்கு அன்னக்கிக் கோபம் வந்துட்டுது.
“இனிமே அப்டிக் கூப்டாதீங்கப்பா…’ என்று சிடுசிடுத்துட்டேன்.”

“”அதுதாண்டி… நீ சொன்ன அந்த சொல்லுதான் அவர ரொம்ப நோகடிச்சிட்டுது.
ஒனக்கு நல்லாத் தெரியும், அப்பா முப்பது வருஷமா நீரிழிவு நோயாளி. அதிர்ச்சியையோ,
அதிவருத்தத்தையோ தாங்கிக் கொள்கிற உடல் சக்தியை அவர் இழந்துட்டாரு.
அவருடைய செல்லப் பொண்ணு நீ. பத்துப் பேருக்கு முன்னாடி அவரு மனசே
நொறுங்கிப் போற மாதிரி பேசிட்ட.

“”பேசிட்டு நீ பாட்லே ஊருக்குப் போயிட்ட. அன்னைக்கு ராத்திரி படுத்தவர்தான்,
காலைல அப்பா எழுந்திருக்கவே இல்ல; பேசவும் இல்ல. “ஏண்டி தங்கம்,
காபி எங்க?’ன்னு வழக்கமாகக் கேட்பாரே, அந்தக் கொஞ்சும் குரலும் கேட்கவே இல்ல…”
என்று தழுதழுக்கச் சொல்லிப் புடவை முந்தானையை எடுத்துத் தன் கண்களைத்
துடைத்துத் தேம்பத் தொடங்கி விட்டாள் அம்மா.

எனக்கு ஒரே அதிர்ச்சி. சின்ன விஷயம்ன்னு நாம நெனச்சது எவ்வளவு பெரிய
விஷயமாக போயிட்டுது. எங்க அப்பாவ மீண்டும் நான் எப்படி முன்போல பேச
வைக்கப் போறேன். கை வீசி நடக்க வைக்கப் போறேன்.

ஒரு கணம் படித்த மருத்துவக் கல்வியும், உளவியல் கல்வியும் மனதில் மின்னலாய்
வெட்டி வெளிச்சம் காட்டின.

அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த நான், அடுப்பங்கரையில் இருந்து கிடுகிடு என்று,
அப்பா இருந்த அறையை நோக்கி மாடிப்படிகளில் பறந்தேன். போகும்போதே,
“அப்பா… அப்பா’ என்று கதறிக் கொண்டே ஏறினேன்.

பதற்றமும், கதறலும், உள்ளம், உடம்பு என அனைத்து அங்கங்களிலும்
படையெடுத்திருந்த துக்கமும் அப்பாவின் அறை வாசலைத் தாண்டிக் கட்டிலை
நெருங்கும்போது, என் இரண்டு கால்களையும் தடுமாற வைத்து விட்டன.

“”அய்யோ, அப்பா,” என்று கதறி, மூக்கு உடைந்து ரத்தம் கொட்டும்
வண்ணம் கீழே விழுந்தேன்.

“”ஏங் குட்டிக்கண்ணு…” என்று அப்பாவின் குரல் கேட்டு ரத்தம் சொட்டும்
மூக்கோடு நிமிர்ந்த போது, அப்பா படுக்கையை விட்டுப் படக்கென எழுந்து,
அமர்ந்த, அந்த ஒரு கணம் இந்த உலகமே சொர்க்கமாகிப் போனது.

அப்பாவின் சத்தம் கேட்டு, அம்மாவும் கிடுகிடு என்று மாடிப்படியேறி வந்து விட்டாள்.
அப்பாவின் கைகளைப் பிடித்து, தன் கண்ணில் ஒற்றித் தேம்பித் தேம்பி அழத்
தொடங்கி விட்டாள்.

“”என் ராஜா பேச ஆரம்பிச்சிட்டாரு… கை அசைக்க ஆரம்பிச்சிட்டாரு…
நடக்கவும் இனி ஆரம்பிச்சிடுவாரு…”

அமுகையும், ஆனந்தமும் ஒரே நேரத்தில் அம்மாவைப் பற்றிக் கொண்டன.
எனக்கு மட்டும் தான் தெரியும், நான் கால் தடுக்கி விழுந்தது, வாசல்
நிலைக்காலால் அல்ல. இப்படி வைத்தியம் செய்து பார்ப்போம்… மூக்கே
போனாலும் சரி, முகமே போனாலும் சரி, அப்பாவுக்காகச் செத்தாலும் சரி;
இந்த உயிரைக் கொடுத்தவர் அவர் அல்லவா என நானே வலிய விழுந்தேன்
என்பது எனக்கு மட்டுந்தான் தெரியும்.
——————————————————————————————————-
Thanks:
http://www.dinamalar.com/Supplementary/varamalar_detail.asp?news_id=621

இயற்கைக் குணம் மாறாது!

ஆசிரமம் ஒன்றில் முற்றும் துறந்த சந்நியாசி ஒருவர் இருந்தார்.
அவருக்கு நான்கு இளம் சீடர்கள் இருந்தார்கள்.

ஆசிரமத்தின் அன்றாடத் தேவைகளை, அந்த ஆசிரமத்தின் மேல்
மதிப்பு வைத்திருந்த  உள்ளூர் மக்கள் பார்த்துக் கொண்டார்கள்

ஆசிரமம் செழிப்பாக இருந்தது. காலையிலும், மாலையிலும் சாமியார்,
மக்களை நல்வழிப்படுத்தும் முகமாக உரை நிகழ்த்துவார். கூட்டு
வழிபாடு செய்வார்.

ஒரு நாள், அந்த நான்கு சீடர்களில் மூன்று பேர்கள் சாமியாரிடம்
வந்து,” ஐயா நாங்கள் அருகிலிருக்கும் புண்ணிய நதிகளிலும், நீர்
நிலைகளிலும் தீர்த்தமாடிவிட்டுவர ஆசைப் படுகிறோம். அனுமதி
கொடுங்கள்” என்றார்கள்

”ஏன் நம்மூர் ஆற்றிற்கு என்னாயிற்று?” என்று கேட்டார்.

”அதில்தான் தினமும் நீராடிக்கொண்டிருக்கிறோமே! ஒரு மாறுதலுக்காக
மற்ற புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டுவர விரும்புகிறோம்” என்றார்கள்.

“சென்று வாருங்கள்” என்றார்.

அவர்களில் ஒருவன்,”ஐயா நீங்களும் வர வேண்டும்!” என்றான்.

“இல்லை, நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்!” என்றார்

மற்ற இருவரும் இப்போது அவனுடன் சேர்ந்து வலியுறுத்தவே, சாமியார்
சுற்று முற்றும் பார்த்தார்.

அருகில் இருந்த பாகற்காய் கொடியில் நிறையக் காய்கள் காய்த்துத்
தொங்கிக் கொண்டிருந்தன.

அவற்றில் ஒன்றைப் பறித்து அவர்களிடம் கொடுத்தவர், இப்படிச் சொன்னார்:

“இந்தக்காயை நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீராடும்
இடங்களில் எல்லாம் இதையும் மூன்று முறைகள் நமச்சிவாயா என்று
சொல்லி நீரில் முக்கி எடுத்துக் கொண்டு வாருங்கள்”

அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். உள்ளூர் ஆசாமி ஒருவன் அவர்களுக்கு
வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். இரண்டு நாட்கள்
பயணம் மேற்கொண்டு நான்கு நதிகளில் நீராடிவிட்டுத் திரும்பினார்கள்.

திரும்பி வந்தவுடன், சாமியாரை நெடுஞ்சான் கிடையாக விழுந்து
வணங்கினார்கள்.

சாமியார் கேட்டார்,”பாகற்காய் என்ன ஆயிற்று?”

“நீங்கள் சொன்னபடியே பாகற்காயையும் நீராட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்”

“இன்று அதைச் சமையலில் சேர்த்து விடுங்கள்” என்றார் அவர்.

அப்படியே செய்தார்கள்.

மதியம் சாப்பிடும்போது, சாமியார் கேட்டார்,” பாகற்காயில் ஏதாவது
மாறுதல் தெரிகிறதா?”

சீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்,” இல்லை ஐயா,
எப்போதும் போல அது கசப்பாகத்தான் இருக்கிறது!”

இப்போது சாமியார், அவர்களுக்குப் புரியும்படியாக அழுத்தமான குரலில்
சொன்னார்.

“எத்தனை புண்ணிய நிதிகளில் முக்கி எடுத்தாலும் பாகற்காயின் குணம்
போகவில்லை அல்லவா? அதுபோலத்தான் எத்தனை புண்ணிய நதிகளில்
நீராடினாலும் அல்லது எத்தனை ஆலயங்களில் வழிபட்டாலும் மனிதனின்
இயற்கைக் குணம் மாறாது!”

——————————————————————————————–

படித்ததில் பிடித்தது

எல்லாம் சட்டப்படிதான்!

 

snakes

முயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு நினைத்தது. எனவே ஒரு சட்டம் இயற்றி முயலிடம் அறிவித்தது.

“முயலே நான் சொல்வதைக் கேள். நான் இனி மேல் முன்கூட்டியே சொல்லாமல் உன் வீட்டுக்குள் நுழைய மாட்டேன். கதவைத் தட்டி முன் அனுமதி பெற்றுத்தான் வருவேன். சொல்லாமல் வீட்டுக்குள் வந்துவிட்டால், நீ பயப்படாமல் என்னிடம் புகார் செய்யலாம். அந்த உரிமையை உனக்கு கொடுக்கிறேன்”

இப்படி ஒரு சட்டத்தையும், உரிமையையும் அறிவித்த பிறகு ’இந்தச் சட்டத்தை முயல் சரியாக பயன்படுத்துமா, பயன்படுத்தாதா?’ என யோசித்த பாம்பு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒருநாள் முயலின் வீட்டுக்குள் புகுந்து முயலின் குட்டி ஒன்றை விழுங்கி விட்டது. பின்னர் வெளியே வந்து நின்று கொண்டது. முயல் புகார் செய்ய வருகிறதா இல்லையா என காத்திருந்தது.

நீண்ட நேரம் ஆகியும் முயல் வெளியே வரவில்லை. பாம்புக்கு கோபம் அதிகரித்துக் கொண்டே போனது. பொறுமையிழந்து முயலின் வீட்டுக்குள் பாய்ந்து சென்று முயலைப் பிடித்து கேட்டது.

“நான் கொண்டு வந்த சட்டத்தை நீ ஏன் பின்பற்றவில்லை?”

முயல் அமைதியாகப் பதில் சொன்னது.”குற்றவாளியும் நீதான். நீதிபதியும் நீதான். நான் எந்தக் குற்றவாளிக்கு தண்டனை வழங்க எந்த நீதிபதியிடம் முறையிடுவது? நீயே சொல்லு.”

பாம்பு கோபத்தோடு சீறி, முயலைக் கவ்வி ஒரே வாயில் விழுங்கி விட்டது. பின்னர் இப்படி அறிவித்தது:

“இந்த முயலைக் கொன்றது சும்மா இல்லை. சட்டப்படிதான். அனைத்துச் சட்ட நெறிமுறைகளும் சரியாகவே பின்பற்றப்பட்டுள்ளன. ஆமாம்”.

பி.கு: இது ஒரு சீனப் பழங்கதை. எப்போது படித்தாலும் புதிதாகவே இருக்கிறது. சமகால வாழ்வையும் பல சமயங்களில் ஒப்பிட முடிகிறது. சமூகத்தின் நியாய அநியாங்களை புரிய வைக்கிறது.  அமைப்பின் கோளாறுகளை சொல்லிக்கொண்டே இருக்கிறது.

———————————

Thanks:

http://mathavaraj.blogspot.com/2009/03/blog-post_9501.html

உனக்கு நான் உள்ளேன் தோழா!

அது ஒரு மிருகங்கள் மற்றும் பறவைகளை விற்பனை செய்யுமிடம் (petshop). அந்தக் கடைக்கு விதம் விதமான வண்ண வண்ண ஆடம்பரக் கார்களில் மக்கள் வந்து தமக்குப் பிடித்த பிராணிகளை வாங்கிச் செல்வது வழக்கம். அந்த கடை கண்ணாடியால் அழகு படுத்தப் பட்டிருந்ததால் பிராணிகளின் அழகும் போவோர் வருவோரைக் கவர்ந்தது. பலர் அங்கு நின்று வேடிக்கை பார்த்துச் செல்வார்கள்.

வேடிக்கை பார்ப்பவர்களோடு பத்தோடு பதினொன்றாக ஒரு ஏழைச்சிறுவனும் நின்று தினமும் வேடிக்கை பார்ப்பான். அவனுக்கும் அங்குள்ள அழகான நாய்க்குட்டிகளில் ஒன்றை வாங்கி விட வெகு நாள் ஆசை.

சிறிது சிறிதாக சேமித்து 10 ரூபாய் சேர்த்தான். பின் கடைக்குச் சென்று கடைக்காரரிடம் நாய்க்குட்டி வாங்க வேண்டுமென்றான். அவரும் நாய்க்குட்டிகளை பார்க்க அனுமதித்தார். அவன் எல்லா குட்டிகளையும் பார்த்து விட்டு ஒதுக்குப் புறமாக படுத்திருந்த அழகான கருப்பு நிற நாய்க்குட்டியொன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்து, கடைக்காரரிடம் பத்து ரூபாயைக் கொடுத்தான்.

கடைக்காரர் அவனைப் பார்த்து “ஏனடா தம்பி 10 ரூபாய்க்கு யாராவது நாய்க்குட்டி தருவாங்களா?” என்றவாறே குட்டியைப் பறித்துக் கொண்டார். பின்பு பத்து ரூபாயைச் சிறுவனை நோக்கி எறிந்து விட்டு குட்டியைக் கூண்டில் போட எடுத்துச் செல்கையில் தான் பார்க்கிறார், அந்த நாய்க்குட்டி ஒருகால் பலமின்றி மூன்று கால்களுடன் ஊனமானதாக தள்ளாடுவதை.

பின் சிறுவனிடம் வந்து சொன்னார், இந்தக் குட்டியை கொண்டு வரும் போது இதன் கால்கள் முறிந்து விட்டது. இதைக் யாரும் விலை கொடுத்து வாங்க மாட்டார்கள்.கருணைக் கொலைதான் செய்ய நினைத்தேன். நீ வேண்டுமென்றால் இலவசமாக எடுத்துச்செல் என்றார்.

சிறுவன் ஆவலோடு ஓடிச் சென்று நாய்க்குட்டியை வாங்கித் தழுவிக் கொண்டான். பின் தன் 10 ரூபாயைக் கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, நாய்க் குட்டியை அணைத்து முத்தமிட்டவாறு ”உனக்கு நான் உள்ளேன் தோழா; யார் உன்னை ஊனம் என்றார்கள்” என்றவாறே விந்தி விந்தி நடந்து சென்றான்.

துறவறம்தான் சந்நியாசமா? – தென்கச்சி சுவாமிநாதன்

திருமணம் முடிந்து இல்வாழ்க்கையைத் துவங்கிய அந்தப் புதுமணப் பெண்ணுக்குக் குடும்பம் நடத்துவது குறித்த நிறைய சந்தேகங்கள்.  யாரிடம் யோசனை கேட்கலாம்? பக்கத்து வீட்டு மாமியிடம் சென்று உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்க மாமி! என்றாள்.

இதோ பாருடிம்மா… குழப்பமில்லாம சண்டை சச்சரவு இல்லாம குடும்பம் நடத்துறதுதான் புத்திசாலித்தனம். அது உன் கையில்தான் இருக்கு! என்றாள் அந்த மாமி.

“நான் என்ன செய்யணும்?’ – இளம்பெண் கேட்டாள்.

இப்பவே உன் புருசன்கிட்டே கண்டிப்பா சொல்லிடு…”

என்னன்னு….

இதோ பாருங்க… நீங்க ஏதாவது சின்னதா தப்பு பண்ண ஆரம்பிச்சாலும் நான் பத்ரகாளியா மாறிடுவேன்னு ஆரம்பத்துலேயே சொங்ஙக வெச்சுடு!

நீங்களும் இப்படித்தான் சொன்னீங்களா மாமி?

ஆமாம்! எங்களுக்குக் கல்யாணம் ஆன மறுநாளே சொல்லிப்புட்டேன். அப்புறம் என்ன ஆச்சு? நீங்க எதிர்பார்த்த மாதிரி அவரு நடந்துகிட்டாரா?

அதுதானே தெரியலை!

ஏன்? அப்பாவியாகக் கேட்ட புதுமணப் பெண்ணிடம் மாமி சொன்னாள் அன்னிக்கு வீட்டைவிட்டு ஓடினவர்தான்… இன்னமும் வீடு திரும்பலை! அந்த ஆள் அதற்கப்புறம் ஒரு சந்நியாசி ஆகிவிட்டார் என்று கேள்வி! ஆனால், சந்நியாசம் என்பது இதுவல்ல. சந்நியாசம் என்பது எதையும் விடுவதோ அல்லது துறப்பதோ அல்ல. ஒருவன் எல்லாவற்றையும் துறந்து வாழ்க்கையை விட்டு வெளியில் வருவதையே சந்நியாசம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையை விட்டு வெளியே வருவதால் வாழ்வுக்கும் சரி, வாழும் மனிதர்களுக்கும் சரி.. எந்தப் பயனும் இல்லை! என்பது ஞானிகளின் கருத்து. ஓ�ஷா என்ன சொல்கிறார் தெரியுமா? வாழ்க்கையை விட்டு வெளியே செல்லுஞுமம்ணூசடூநந்டூநியாசிகள், தங்களைத் தாங்களே சித்ரவதை செய்து கொள்கிறார்கள் என்கிறார். சந்நியாசிகள் பலரும் முகத்தைக் கோபத்துடன் உர்ர்ர் என்று வைத்திருப்பது இதனால்தான் என்கிறார் ஓ�ஷா. உண்மையான சந்நியாசம் என்பது வாழ்க்கையைத் துறப்பதல்ல; அதில் ஆனந்தமாக ஓர் பயணத்தை மேற்கொள்வது! இன்றைய சந்நியாசிகள் இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
————————————————–
நன்றி; சக்தி விகடன்
http://www.dinamalar.com/Supplementary/sakthivikadandetail.asp?news_id=85&dt=10-21-09

நிறைவாகும் வரை…கவிஞர் காசி ஆனந்தன்

நிறைவாகும் வரை…

கவிஞர் காசி ஆனந்தன், பல நல்ல குட்டிக் கதைகள் எழுதியிருக்கிறார்.

அவை புத்தகமாகவும் வெளி வந்திருக்கிறது. அதிலிருந்து ஒரு கதை;

நகைக்கடைக் கண்ணாடிப் பெட்டி ஒன்றில் இருந்து, கண்ணைப் பறிக்கும்

இரத்தினங்களைப் பறிக்கும் இரத்தினக் கல்லைப் பார்த்து, தெருவில் கிடந்த

குறுணிக்கல் பொறாமைப்பட்டது. ‘எனக்கு ஏன் மதிப்பில்லை? நானும்

ஒரு கல்தானே? நானும் ஒரு கல்தானே? என்று ஓலமிட்டது.

தெரு ஓரத்தில் கிடந்த கடப்பாறை கூறியது; ‘’ஏ குறுணி! காலம் முழுதும்

உன்னை நீயே பெரிதாக எண்ணிக் கொண்டு, பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய். ஆனால் அந்த இரத்தினக் கல் அப்படியா? தலை காட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத் தானே உருவாக்கிக்

கொண்டிருந்தது.

‘’அப்டியென்றால்…?’’ என்று இழுத்தது, குறுணிக் கல்.

கடப்பாறை சொன்னது,

‘’நிறைவாகும் வரை, மறைவாக இரு’’

நன்றி; அம்பலவாணன் தொகுத்த

’பல்சுவை விருந்து’ நூலிலிருந்து

நன்றி மறக்காத எறும்பு-(சிறுவர் கதை)

Print E-mail

ஒரு கட்டெறும்பு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது.

எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு.

மற்றொரு நாள்.

ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு.

ஆனால் புறாவோ இதை அறியாமல் வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு.

விரைந்து சென்று வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது.

கடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது.

அன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது.

எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.

நன்றி; http://www.muthukamalam.com/muthukamalam_siruvar%20pakuthi37.htm

« பழைய வரவுகள்