
-
கண்ணுக்கு அழகு எது? கண் மை தீட்டுவதா?
இல்லை..மற்றவர்கள் மீது கருணை பொழிதல்
காலுக்கு அழகு எது? கொஞ்சும் சலங்கைகளா?
அல்ல, பிறரிடம் யாசிக்க – கடன் கேட்க செல்லாமை.
ஆராய்ச்சிக்கு அழகு எது? பட்டமும் ஞானச் செருக்குமா?
அல்ல.ஒன்றைத் தெளிவாக அறுதியிட்டு உரைத்தல்.
இப்படியே ஒவ்வொன்றுக்கும் எது அழகு எது அழகு
என்று வினா எழுப்பி மனித நேயத்தோடு விடை
கண்டால் உலகே அன்பு மயமாகி விடும்.
மகிழ்ச்சி வெள்ளமே எங்கும் சூழும்.
-
சிறு பஞ்ச மூலப்பாடல் இதைத்தான் அழகுற
சொல்கிறது:-
——————————————————–
கண் வனப்புக் கண்ணோட்டம்;
கால் வனப்புச் செல்லாமை;
எண் வனப்பு, ‘இத் துணை ஆம்’ என்று உரைத்தல்;
பண் வனப்புக் கேட்டார், நன்று என்றல்;
கிளர் வேந்தன் தன் நாடு வாட்டான், நன்று என்றல்
வனப்பு.
கண்ணுக்கழகு கண்ணோட்டம்,
காலுக்கழகு பிறரிடம் பிச்சை கேட்க செல்லாமை,
ஆராய்ச்சிக்கு அழகு தன்கருத்துக்களைத் யாருக்கும்
பயப்படாமல் துணிந்து சொல்லுதல்,
இசைக்கு அழகு அந்த இசையை கேட்பவர் நன்று
என்று கூறுதல்,
அரசனுக்கு அழகு அவனது ஆட்சியில் உள்ள குடிமக்கள்
அவனைநல்லவனென்று கூறுதல்.
—– சிறுபஞ்சமூலம்






