மரணகாலக் குறிப்புகள்
சரவணன் 1978
மருத்துவமனையின் தனி அறையில்
எல்லா மருத்துவர்களாலும் கைவிடப்பட்டு
மருந்துகள் தந்த மயக்கத்தில்
வாழ்வின் முடிவைநோக்கி முடிவின்றி
விழுந்து கொண்டிருக்கின்றேன்.
திடீரென ஒரு ராட்க்ஷஸக் கரம் நீண்டு
என்னைப் பற்றித் தூக்குகின்றது.
பொங்கும் நுரைபோல
நான் மேல்நோக்கி வருகின்றேன்.
மெல்ல விழித்துப் பார்க்கின்றேன்.
யாருமற்ற இந்த அறையில்
மங்கிய உருவமாய்த் தெரிகிறது-எனது
கரத்தைப் பற்றியபடியே இருக்கும்
உனது வளைக்கரம்.
source:http://www.keetru.com/puthiyakaatru/may06/saravanan.php
